முஹர்ரம் மாதம் – ஹிஜ்ரி 1445

2023.07.20 (1445.01.01)

முஹர்ரம் மாதம் இஸ்லாமிய சந்திர நாட்காட்டியின் முதல் மாதமாகும். இது அல்குர்ஆனில் புனிதப்படுத்தப்பட்ட மாதங்கள் (அல்-அஷ்ஹுருல் ஹுரும்) என குறிப்பிடப்பட்ட நான்கு மாதங்களில் ஒன்றாகும். இம்மாதம், ஷஹ்ருல்லாஹ் (அல்லாஹ்வின் மாதம்) என்றும் அழைக்கப்படுகின்றது.

‘நிச்சயமாக அல்லாஹு தஆலாவிடத்தில் அவனுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும். அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை.’ (ஸுறா அத்-தவ்பா : 36)

முஹர்ரம் மாதத்தின் தனித்துவமான சில விடயங்கள்:

01) முஹர்ரம் மாதத்தின் நோன்பு:
அபூ ஹுரைரஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்: பர்ளான தொழுகைக்குப் பின்னர் மிகச்சிறந்த தொழுகை எது எனவும் ரமழான் மாதத்தின் பின்னர் மிகச்சிறந்த நோன்பு எது எனவும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்கப்பட்டது. அப்போது பர்ளான தொழுகைக்குப் பின்னர் மிகச்சிறந்த தொழுகை நடுநிசியில் தொழப்படும் தொழுகை எனவும் ரமழான் மாதத்தின் பின்னர் மிகச்சிறந்த நோன்பு அல்லாஹ்வின் மாதம் முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும் எனவும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: ஸஹீஹ் முஸ்லிம் – 1163)

02) ஆஷூரா நோன்பு:
முஹர்ரம் மாதம் முழுவதும் புனிதப்படுத்தப்பட்ட மாதமாக இருந்தாலும், முஹர்ரம் மாதத்தின் 10 ஆவது நாள், அம்மாதத்தின் ஏனைய நாட்களை விடவும் மிகவும் புனிதமானது. அன்றைய தினம் நோன்பு நோற்பது ஸுன்னத்தாகும். அதுவே ‘ஆஷுரா’ தின நோன்பு என்று அழைக்கப்படுகிறது. ஆஷுரா தினத்திலும் அதற்கு முந்தைய தினத்திலும் அல்லது அடுத்த தினத்திலும் நோன்பு நோற்பது ஸுன்னத்தாகும்.

அபூ கதாதஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷுரா) நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்குப் பாவப்பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன்’ என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: ஸஹீஹ் முஸ்லிம் – 1162)

இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்லம் அவர்கள் ஆஷுரா நாளில் தானும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு மக்களுக்கும் கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், ‘அல்லாஹ்வின் தூதரே! இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே?’ என்று வினவினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்லம் அவர்கள், ‘இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்போம்’ என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்லம் அவர்கள் வபாத்தாகிவிட்டார்கள். (நூல்: ஸஹீஹ் முஸ்லிம் – 1134)

குறிப்பு:
இவ்வருட ஆஷுரா நோன்பு, எதிர்வரும் 2023.07.29 ஆம் திகதி சனிக்கிழமை நோற்கப்பட வேண்டும்.

 

03) மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அவர்களது கூட்டமும் பாதுகாக்கப்பட்ட நாள்: இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்லம் அவர்கள் மதீனா வந்தபோது, யூதர்கள் முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷுரா) நோன்பு நோற்றிருப்பதைக் கண்டார்கள். ‘நீங்கள் நோன்பு நோற்றிருக்கும் இது என்ன நாள்?’ என்று கேட்டார்கள். அதற்கு யூதர்கள், ‘இது ஒரு மகத்தான நாள். இந்த நாளில்தான் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் அவருடைய சமுதாயத்தாரையும் இறைவன் காப்பாற்றி, ஃபிர்அவ்னையும் அவனுடைய சமுதாயத்தாரையும் (செங்கடலில்) மூழ்கடித்தான். எனவே, மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக (இந்நாளில்) நோன்பு நோற்றார்கள். ஆகவே, நாங்களும் இந்நாளில் நோன்பு நோற்கிறோம்’ என்று கூறினார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸ்லம் அவர்கள், ‘உங்களைவிட நாங்களே மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு மிகவும் உரியவர்களும் நெருக்கமானவர்களும் ஆவோம்’ என்று கூறினார்கள். பின்னர், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸ்லம் அவர்கள் (அந்நாளில்) தானும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்குக்) கட்டளையுமிட்டார்கள். (நூல்: ஸஹீஹ் முஸ்லிம் – 1130)

 

ஊடகப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *