மையவாடிக் காணியை வேறு தேவைகளுக்காக பயன்படுத்துவதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளதா?

 

ACJU/FTW/2017/33-310
1439.02.12 (2017.11.02) அன்று வெளியிடப்பட்ட ஃபத்வா

கேள்வி: மையவாடிக் காணியை வேறு தேவைகளுக்காக பயன்படுத்துவதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளதா?

பதில்: எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! ஸலாத்தும் ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களின் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

மையவாடி, ஜனாஸாக்களை அடக்கம் செய்யவும் மக்கள் மறுமை வாழ்வின் சிந்தனையை ஏற்படுத்திக் கொள்ளவும் அல்லாஹ்வின் அச்சத்தை அதிகப்படுத்திக் கொள்ளவும் உள்ள ஓர் இடமாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘மையவாடியைத் தரிசியுங்கள். அது உங்களுக்கு மறுமையை நினைவூட்டும்’ என்று கூறியுள்ளார்கள். (நூல் : அத்-திர்மிதி-1054)1

பொதுவாக இலங்கையைப் பொறுத்தவரையில் மையவாடிக்குரிய காணிகள் பின்வரும் ஏதேனும் ஒரு முறையில் அமைந்திருக்கின்றன.

1. ஜனாஸாக்கள் அடக்கம் செய்வதற்கு மாத்திரம் வக்ப் செய்யப்பட்ட காணிகள்.

2. மையவாடியாக வக்ப் செய்யப்படாமல் தொடர்ந்து ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டு மையவாடியாகப் பயன்பத்ததப்படும் பொதுக் காணிகள்.

3. தனியாருக்குச் சொந்தமான காணிகள்.

4. மஸ்ஜிதுக்கு அல்லது வேறு ஒன்றுக்கு வக்ப் செய்யப்பட்டிருந்த போதிலும் ஜனாஸாக்கள் அடக்கம் செய்வதற்கெனப் பயன்படுத்தப்படும் காணிகள்.

மேற்கூறப்பட்ட காணிகளில் மையவாடிக்கென வக்ப் செய்யப்பட்ட காணியை மையித்துக்கள் உக்கிப் போய் அதன் அடையாளங்கள் இல்லாது போனாலும் கட்டிடம் உள்ளிட்ட வேறு எந்தத் தேவைகளுக்கும் பயன்படுத்த முடியாது.

ஏனெனில் ஒரு பொருளை வக்பு செய்த நபர் எந்த நோக்கத்திற்காக வக்பு செய்தாரோ அந்த நோக்கத்துக்கே அதைப் பயன்படுத்துவது அவசியமாகும். அத்துடன் அதை வக்பு செய்யப்பட்ட நோக்கத்துக்கு மாறாகப் பயன்படுத்தவது மிகப் பெரிய தவறாகும்.

‘உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது பேரீத்தம் பழத் தோட்டம் ஒன்றின் விடயத்தில் ஆலோசனை செய்தபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அத்தோட்டத்தை வக்பு நிய்யத்துடன் ஸதகா செய்யும் படியும் அவ்வாறு வக்பு நிய்யத்துடன் ஸதகா செய்தால் அத்தோட்டம் மீண்டும் விற்கப்படவும் மாட்டாது, நன்கொடையாக வழங்கப்படவும் மாட்டாது, அனந்தரச் சொத்தாக்கப்படவும் மாட்டாது. இருப்பினும் அத்தோட்டத்தின் பழங்கள் தர்மம் செய்யப்படும் என்று கூறினார்கள்.’2

தாரகுத்னியின் அறிவிப்பில் ‘வானங்கள் மற்றும் பூமி நிலைத்திருக்கும் காலமெல்லாம் அது வக்பு செய்யப்பட்டதாகவே இருக்கும் என வந்துள்ளது.3

ஒரு நோக்கத்துக்காக வக்ப் செய்யப்பட்ட பொருளை இன்னும் ஒரு தேவைக்குப் பயன்படுத்தக்கூடாது என்பது பற்றி இமாம் இப்னு ஹஜர் அல்-ஹைதமி றஹிமஹுல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

‘வக்ப் செய்யப்பட்ட பொருளை அதன் அடிப்படைத் தோற்றத்திலிருந்து மாற்றுவது கூடாது. அதாவது வீடாக வக்ப் செய்யப்பட்டதைத் தோட்டமாகவோ அல்லது குளியலறையாகவோ அல்லது தோட்டமாக வக்ப் செய்யப்பட்டதை வீடாகவோ மாற்றுவது கூடாது. ஆனால் வக்ப் செய்தவர் வக்ப் செய்யும் பொழுது வக்பைக் கண்காணிப்பவர் தேவையைக் கருதி பயன்படுத்த முடியும் என்று கூறினால் மாத்திரம் தேவைக்கேற்ப அதை மாற்றிக்கொள்ளலாம்.’

மையவாடிக்கென வக்ப் செய்யப்பட்ட காணிகளைத் தவிர மற்றைய மையவாடிக் காணிகளில் ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்படுவது நிறுத்தப்பட்டு ஏற்கனவே அடக்கம் செய்யப்பட்ட ஜனாஸாக்கள் உக்கி அடையாளங்கள் அனைத்தும் அழிந்து போய்விட்டன என நம்பிக்கையான மண்ணியல் நிபுணர்கள் உறுதியாகக் கூறுமிடத்து இக்காணிகளை கட்டிடம் உள்ளிட்ட வேறு தேவைகளுக்கு பயன்படுத்த அனுமதியுள்ளது.4

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கறிந்தவன்.

 

அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்
செயலாளர் – ஃபத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் ஐ. எல். எம். ஹாஷிம் சூரி
மேற்பார்வையாளர் – ஃபத்வாப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எம். எம். ஏ. முபாரக் (கபூரி)
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *