ரமழானின் இறுதிப் பத்தில் இஃதிகாப் இருப்பது தொடர்பான மார்க்க வழிகாட்டல்

ACJU/FRL/2023/07/298
12.04.2023
20.09.1444

புனித ரமழான் மாதத்தில் நோன்பு நோற்றல், இரவு வணக்கத்தில், ஈடுபடுதல், அல்குர்ஆன் ஓதுதல், தான தர்மங்கள் செய்தல் போன்ற வணக்க வழிபாடுகளில் முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹுதஆலாவின் நெருக்கத்தைப் பெற்றுக் கொள்ளவதற்காக தொடர்ந்தும் முயற்சித்து வருகின்றோம். குறிப்பாக நாம் ரமழானின் இறுதிப் பத்தில் இஃதிகாப் இருந்து ‘லைலத்துல் கத்ர்’ இரவை அடைய முயற்சிக்க வேண்டும்.

இஃதிகாஃப் என்பது முஸ்லிமான, பிரித்தரியும் தன்மையுள்ள, புத்திசுயாதினமுள்ள, பெரும் தொடக்கிலிருந்தும் தூய்மையான ஒருவர் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக சில நிபந்தனைகளைப் பேணி மஸ்ஜிதில்; தரித்திருப்பதைக் குறிக்கும்.

இது பற்றி அல்லாஹ் அல்-குர்ஆனில் பின்வருமாறு கூறியுள்ளான்:
‘நீங்கள் மஸ்ஜித்களில் தங்கியவர்களாக (இஃதிகாஃப்) இருக்கும் போது (உங்கள் மனைவியராகிய) அவர்களுடன் கூடாதீர்கள்.’ (அல்-பகரஹ் : 187)

இஃதிகாப் சந்தர்ப்ப சூழ்நிலையைப் பொறுத்து வாஜிப், ஸுன்னத் என இரு வகைப்படுத்தப்படும். பொதுவாக ஏனைய காலங்களில் இஃதிகாஃப் இருப்பது ஸுன்னத்தாகவும், நேர்ச்சை செய்யப்பட்ட இஃதிகாஃப் வாஜிபாகவும் கணிக்கப்படும்.

றமழான் மாதத்தின் இறுதிப் பத்து தினங்களில் இஃதிகாஃப் இருப்பது ஸுன்னத் முஅக்கதாவாகும் என மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமழானுடைய காலங்களில் குறிப்பாக கடைசி பத்து நாட்களில் லைலதுல் கத்ருடைய இரவை தேடியவர்களாக மஸ்ஜிதில் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள் என்று பல ஹதீஸ்களில் பதிவாகியுள்ளது.

‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அல்லாஹ் அவர்களை மரணிக்கச் செய்யும் வரை ரமழானின் இறுதிப் பத்தில் இஃதிகாப் இருந்தார்கள். பின்பு அவரது மனைவிமார்கள் அவரது மரணத்திற்குப் பின்பு இஃதிகாப் இருந்தார்கள்.’ என ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஸஹீஹுல் புஹாரி-2026)

மேலும் நபியவர்கள் ரமளானின் இறுதிப்பத்தில் ஏனைய நாட்களில் வணக்கத்தில் ஈடுபடுவதை விட கூடுதலாக தன்னை ஈடுபடுத்தக்கூடியவர்களாகவும் தனது குடும்பத்தார்களை இபாதத்களில் தூண்டக்கூடியவர்களாகவும் காணப்பட்டார்கள்.

இது தொடர்பாக பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமழான் அல்லாத காலங்களில் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதை விட ரமழானின் இறுதிப்பத்தில் (அதிகம்) ஈடுபடக்கூடியவர்களாக இருந்தார்கள் என ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள் (ஸஹீஹு முஸ்லிம்: 1175)

எனவே, இவ்வருடம் ரமழானின் இறுதிப்பத்தில் இஃதிகாபுடைய வணக்கத்தை நிறைவேற்றி லைலத்துல் கத்ருடைய இரவை அடைந்து அதன் அனைத்து பாக்கியங்களையும் பெற்றும் கொள்ள வல்ல நாயன் அல்லாஹ் நம் அனைவருக்கும் தௌபீக் செய்வானாக!

குறிப்பு: இஃதிகாப் தொடர்பான மேலதிக தெளிவுகளை ஜம்இய்யாவின் பத்வாப் பிரிவின் துரித இலக்கத்தை தொடர்பு கொள்வதன்; மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.

 

 

அஷ்-ஷைக் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி

தலைவர்,

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்

செயலாளர், பத்வாக் குழு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *