ACJU/NGS/2022/107
01.05.2022 |29.09.1443
அல்லாஹ் தனது அடியார்கள் மீது பர்ளான வணக்கங்களுடன் உபரியான வணக்கங்களையும் மார்க்கமாக ஆக்கியுள்ளான். ஏனெனில், உபரியான வணக்கங்களைப் பொருத்தவரையில் அது பர்ளான வணக்கங்களில் அடியார்களிடம் ஏற்படும் குறைகளை ஈடுசெய்யக்கூடியதாக உள்ளது. அத்துடன் ஒரு அடியான் அல்லாஹு தஆலாவை உபரியான வணக்கங்களின் மூலமாக நெருங்கும் போது அவனை அல்லாஹூ தஆலா விரும்புகின்றான்.
அதன் அடிப்படையில் ரமழான் மாதத்திற்கு அடுத்துவரக்கூடிய ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்புகளை நோற்பதை மார்க்கம் எமக்கு சுன்னத்தாக ஆக்கியுள்ளது. அதனை நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஆர்வமூட்டியுள்ளதோடு அதன் சிறப்புகளையும் எடுத்துக் கூறியுள்ளார்கள்.
عن أبي أيُّوب الأنصاري رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: مَن صام رمضان ثم أتبَعَه ستًّا من شوَّال، كان كصيام الدهر. (صحيح مسلم: 1164)
ரமழான் மாதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகளையும் நோற்றவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போன்றவராவார் என நபி ஸல்;லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஅய்யூப் அல் அன்ஸாரீ றழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஸஹீஹு முஸ்லிம் : 1164)
இமாம் நவவி றஹிமஹுல்லாஹ் அவர்கள் இந்த ஹதீஸுக்கு வழங்கியுள்ள விளக்கத்திற்கேற்ப, ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்புகளையும் ஷவ்வால் மாதத்தின் ஆரம்பத்தில் தொடர்ச்சியாக நோற்பது (முஸ்தஹப்) விரும்பத்தக்கதாகும். எனினும், ஒருவர் அதனை அந்த மாதத்திற்குள் விட்டு விட்டு நோற்பதும், ஷவ்வால் மாதத்தின் ஆரம்பப் பகுதியை விட்டும் அதனை பிற்படுத்தி அம்மாதத்திற்குள் நோற்பதும் ஆகுமானதாகும். ஆகவே, ஒவ்வொருவரும் மேற்படி வழிகாட்டல்களுக்கமைய அவரவரது சக்திக்கேற்ப அதனை ஷவ்வால் மாதத்திற்குள்ளே நோற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
அல்லாஹு தஆலா நம்மனைவருக்கும் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்புகளை நோற்பதற்குரிய தேகாரோக்கியத்தைத் தந்தருள்வானாக.
அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ்
செயலாளர், பத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா