ஸகாத்துல் ஃபித்ரை நிறைவேற்றுவது சம்பந்தமான சில வழிகாட்டல்கள்

ACJU/NGS/2022/098

23.04.2022 (21.09.1443)

 

அன்புடையீர்!

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு

 

1. ஸகாத்துல் ஃபித்ர் என்பது ரமழான் மாதம் முடிந்து ஷவ்வால் மாதத் தலைப்பிறைக் கண்டதும் அதைக் கொடுக்க வசதியுள்ளவர்கள் (தனக்கும் தனது பொறுப்பில் உள்ளவர்களின் பெருநாளுடைய தேவைக்கு மேலதிகமாக உள்ளவர்கள்) மீது கடமையான ஒரு தர்மமாகும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

“ஸகாத்துல் ஃபித்ர் நோன்பாளியிடமிருந்து நிகழ்ந்த வீணான செயல்கள் மற்றும் தீய வார்த்தைகளுக்கு குற்றப்பரிகாரமாகவும் ஏழைகளுக்கு உணவாகவும் அமைகின்றது.”

2. ஸகாத்துல் ஃபித்ரை நிறைவேற்றும் நேரம் ஷவ்வால் பிறைக் கண்டதிலிருந்து ஆரம்பமாகும்.

• ஸகாத்துல் ஃபித்ரை பெருநாள் தொழுகைக்கு முன் கொடுப்பது சுன்னத்தாகும்.

• பெருநாள் தொழுகையை விட அதனைப் பிற்படுத்துவது மக்ரூஹாகும்.

• பெருநாள் தின (சூரிய அஸ்தமனத்தை) விட அதனைப் பிற்படுத்துவது ஹராமாகும்.

• ரமழான் மாத பிறை கண்டதிலிருந்து பேணுதலுக்காக மக்கள் அதனை நிறைவேற்றி வருகின்ற வழமையும் உள்ளது. இதுவும் அனுமதிக்கப்பட்டதாகும்.

 

3. ஸகாத்துல் ஃபித்ரை நிறைவேற்றும் பொழுது, ஹனபி மத்ஹபின் அடிப்படையில் பெறுமதியைக் கொடுக்க அனுமதி இருந்தாலும், இமாம் மாலிக், இமாம் ஷாபிஈ மற்றும் இமாம் அஹ்மத் றஹிமஹுமுல்லாஹ் போன்ற பெரும்பான்மையான அறிஞர்களின் கருத்துப்படி, பிரதான உணவாக உட்கொள்ளக்கூடிய தானிய வகையில் இருந்தே வழங்கப்பட வேண்டும்.

 

4. இதனை நிறைவேற்றக்கடமையான ஒவ்வொருவரும் “ஒரு ஸாஃ” அளவு வீதம், அதாவது 2.4 கிலோ கிராம், ஸகாத் பெறத்தகுதியானவர்களை இணங்கண்டு கொடுத்தல் வேண்டும்.

 

எனவே கடமையான ஸக்காத்துல் ஃபித்ரை உரிய முறையில் நிறைவேற்ற வல்ல அல்லாஹுதஆலா எமக்கு துனைபுரிவானாக.

அஷ்ஷைக் எம்.எஸ்.எம் தாஸிம்
உதவிப் பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அஷ்ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்
செயலாளர் – பத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *