ஸகாத் மற்றும் ஸதகாக்களினால் சிரமத்தில் உள்ளோர்களுக்கு உதவுவோம்

2024.03.03 (1445.08.21)

சிரமத்தில் உள்ளோர்களுக்கு உதவுவோம்

சிரமத்திலுள்ள மக்களுக்கு உதவி ஒத்தாசை செய்து அவர்களது துக்கத்தில் பங்கு கொள்வது ஒவ்வொருவர் மீதுமுள்ள கடமையும் பொறுப்புமாகும். இது தொடர்பாக அல்லாஹு தஆலா பின்வருமாறு கூறுகின்றான்.

“இன்னும் நன்மையிலும், பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்.” (05:02)

“அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள். உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள். இன்னும், நன்மை செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை (நன்மை செய்வோரை) நேசிக்கின்றான். (02:195)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். “ஆதமின் மகனே! மற்றவர்களுக்காகச் செலவிடு. உனக்கு நான் செலவிடுவேன்” என்று அல்லாஹு தஆலா கூறுவதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

அபூ ஹுரைறா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். ‘அமல்களில் மிகச் சிறந்தது நீங்கள் உங்களது முஃமினான சகோதரரின் உள்ளத்தில் சந்தோஷத்தை ஏற்படுத்துவதாகும். அல்லது அவருடைய கடனை நிறைவேற்றுவதாகும் அல்லது அவருக்கு ரொட்டியை உணவாகக் கொடுப்பதாகும்” (தபரானி: 6026)

அந்தவகையில் இன்றைய சூழ்நிலையில் நம் நாட்டில் பலர் அசாதாரணமான பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்து இருக்கிறார்கள் என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். குறிப்பாக அன்றாடம் தொழில் செய்து வாழ்க்கை நடத்தியவர்கள் சிறு சிறுதொழில் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தவர்கள் மற்றும் ஏழை எளியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள்.

ஆதலால் நடப்பு மாதமான ஷஃபானில் மற்றும் அதனை அடுத்து வரும் சங்கைமிகு ரமழானில் வசதி படைத்தோர் சிரமத்திலுள்ளோர், ஏழைகள் மற்றும் ஸகாத் பெறத் தகுதியானோர்களுக்கு தங்களது ஸக்காத்தையும் ஸதகாக்களையும் உரிய முறையில் தாமாக முன்வந்து வழங்குமாறும் அல்லது ஜம்இய்யாவின் பிரதேசக் கிளைகள் மற்றும் மஸ்ஜித் நிர்வாகங்கள் ஊடாக தங்களது உதவிகளை மேற்கொள்ளுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைவரையும் வேண்டிக் கொள்கின்றது.

இந்த அசாதாரண சூழ்நிலையில் அதிகமதிகம் தான தர்மங்கள் வழங்குவதற்கும் மனிதாபிமான பணியில் ஈடுபடுவதற்கும் மற்றும் ரமழானை அடைந்து அதில் நல்லமல் புரிவதற்கும் வல்ல நாயன் அல்லாஹு தஆலா எம்மனைவருக்கும் தௌபீக் செய்வானாக!

 

முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எச். உமர்தீன்
செயலாளர் – பிரசாரக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *