2023.08.18 (1445.02.01)
ஸபர் மாதம் இஸ்லாமிய நாட்காட்டியின் இரண்டாவது மாதமாகும். இது முஹர்ரம் மாதத்தை அடுத்து வரக்கூடியதாகும்.
சிலர் இதை ஒரு பீடை மாதம் என்று நம்புகிறார்கள். அதனால், அவர்கள் இந்த மாதத்தில் திருமண மற்றும் மகிழ்ச்சிகரமான நிகழ்வுகளை நடத்துவதைத் தவிர்ந்துகொள்கிறார்கள். இந்த நம்பிக்கை முற்றிலும் ஆதாரமற்றதாகும். இது, இஸ்லாத்தின் வருகைக்கு முன்பு அறியாமைக் காலப்பகுதியில் வாழ்ந்த மக்களிடம் காணப்பட்ட மூடநம்பிக்கைகளில் ஒன்றாகும். மூடநம்பிக்கைகள் குறித்து புனித அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது.
‘நிகழும் நிகழ்ச்சியெல்லாம் அல்லாஹ்வின் அனுமதி கொண்டேயல்லாமல் (வேறு) இல்லை. மேலும், எவர் அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்கிறாரோ, அவருடைய இதயத்தை அவன் நேர்வழியில் செலுத்துகிறான். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவன்.’
(ஸுறா அத் தஃஙாபுன், வசனம்: 11)
ஜாஹிலிய்யா (அறியாமை)க் காலப்பகுதியில் ஆதிக்கம் செலுத்திய தவறான கொள்கைகள் மற்றும் மூடநம்பிக்கைகளை இஸ்லாம் இல்லாதொழித்தது.
அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். ‘தொற்றுநோய் (தானாகப் பரவுதல்) என்பது கிடையாது. பறவை சகுனம் என்பதும் கிடையாது. ஆந்தை சகுனம் என்பதும் கிடையாது. ‘ஸஃபர்’ மாதம் பீடை என்பதும் கிடையாது’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: ஸஹீஹுல் புகாரி – 5757)
எனவே முஸ்லிம்களாகிய நாமும் அத்தகைய மூடநம்பிக்கைகளுக்கு செவிசாய்க்கக் கூடாது. ஏனெனில் அவை அர்த்தமற்றவையாகும்.
ஸபர் மாதத்தின் முக்கிய நிகழ்வுகள்:
1. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்னை கதீஜா ரழியல்லாஹு அன்ஹா அவர்களை ஸபர் மாத்திலேயே மணந்தார்கள். (நூல்: உயூனுல் அதர், பாகம்: 01, பக்கம்: 61)
2. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது மகள் ஃபாத்திமா ரழியல்லாஹு அன்ஹா அவர்களை, அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு ஹிஜ்ரி 2 ஆம் ஆண்டு, ஸபர் மாதத்தில் மணமுடித்துக் கொடுத்தார்கள். (நூல்: அல்-முன்தளிம் ஃபீ தாரீகில் முலூக் வல் உமம், பாகம்: 03, பக்கம்: 84)
அஷ்ஷைக் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான்
செயலாளர் – பிறைக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா