ACJU-ஃபத்வாக் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ‘சமகால இஸ்லாமிய நிதிப்பரிமாற்றமும்; நிதியியலும்’ எனும் தலைப்பிலான இருநாள் வதிவிடக் கருத்தரங்கு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஃபத்வாக் குழுவின் ஏற்பாட்டில் ‘சமகால இஸ்லாமிய நிதிப்பரிமாற்றமும்; நிதியியலும்’ எனும் தலைப்பிலான இருநாள் வதிவிடக் கருத்தரங்கு ஜம்இய்யாவின் ஃபத்வாக் குழு உறுப்பினர்களது பங்குபற்றுதலுடன் 2024.08.14 மற்றும் 15ஆம் திகதிகளில் ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடைபெற்றது.

இதன் ஆரம்ப நிகழ்வாக, ஜம்இய்யாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான் அவர்களால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.

அதனையடுத்து, ஜம்இய்யாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள், ZOOM வாயிலாக கலந்துகொண்டு ‘இஸ்லாமியப் பணப்பரிமாற்ற முறைமையின் தோற்றமும் வளர்ச்சியும்’ எனும் தலைப்பில் பல்வேறு தரவுகள், ஆதாரங்களை முன்வைத்து விஷேட விளக்கவுரையொன்றை காட்சிப்படுத்தல் முறையில் வழங்கியதுடன், இலங்கை முஸ்லிம் தனியார் சட்டத் திருத்தம், ஹலால் அங்கீகாரம் போன்றவற்றிற்காக நாட்டின் மூத்த ஆலிம்களது அனுகுமுறைகளையும் அவற்றில் தனது பங்களிப்புக்களையும் தொட்டுக் காண்பித்து, இஸ்லாமிய நிதியியல் தொடர்பான சர்வதேச ஆலிம்களது நிலைப்பாடுகள், எமது நாட்டில் இது விடயமாக ஏற்படுத்தப்பட்ட சட்டத் திருத்தங்கள் போன்றவற்றையும் எடுத்துக் காட்டினார்கள்.

ஜம்இய்யாவின் பொதுச்செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்கள், ‘சமகால நிதிப்பரிவர்த்தனைகள், நிதித் தொழில்நுட்பத்தின் சட்டத்துறையியல்’ எனும் தலைப்பில்  தெளிவுரை ஒன்றை முன்வைத்தார்கள். மேலும், வரலாற்றில் இஸ்லாமியப் பொருளாதாரக் கொள்கைகள் எவ்வாறு காணப்பட்டன என்பது குறித்து விளங்கியதுடன், அதனை தற்கால பொருளாதார நிலைமைகளோடு ஒப்பிட்டுக் காட்டியதோடு இலத்திரனியல் பொருளாதாரம் (Cryptocurrency) பற்றியும் கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்கள்.

ஜம்இய்யாவின் ஃபத்வாக் குழுவின் செயலாளரான அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ் அவர்கள், ‘இஸ்லாமிய நிதிப்பரிவர்த்தனைகளில் எதிர்நோக்கும் சவால்கள்’ தொடர்பில் உரைநிகழ்த்தியதோடு சவால்களுக்கு முகங்கொடுக்கும் வேளைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சில முன்னெமாழிவுகளையும் முன்வைத்தார்கள்.

அதனைத் தொடர்ந்து ஜம்இய்யாவின் ஃபத்வாக் குழுவின் துணைச் செயலாளரான அஷ்-ஷைக் எம்.எம்.எம். முர்ஷித் அவர்கள் பிரதான வளவாளராகக் கலந்துகொண்டு, ‘வர்த்தக வங்கியியல் ஓர் அறிமுகம்’, ‘வர்த்தக வங்கியியலில் வைப்பிடலும் அதற்கான மாற்றீடுகளும்’, ‘வைப்பிடலைத் தரப்படுத்தலும் நடைமுறைப்படுத்தலும்’, ‘இஸ்லாமிய வங்கிகளில் பணவைப்புக்களை முறைமைப்படுத்தல்’, ‘கூட்டு முழாரபாவை முறைப்படுத்தல்’, ‘முதலீட்டாளர்களுக்கும் வங்கிகளுக்குமிடையிலான தொடர்புகள்’, ‘சட்டப்பூர்வ நிறுவனத்தின் முழாரபா மேலாண்மை’, ‘இலாப பங்கீட்டு முறைமை’, ‘சேமிப்பு மற்றும் பணமீட்பு’ போன்ற பல்வேறு தலைப்புக்களில் காட்சிப்படுத்தல் முறைமையில் கருத்தரங்கை நடாத்தியதோடு,  கலந்துகொண்ட ஆலிம்களால் முன்வைக்கப்பட்ட ஐயங்களுக்கும் தெளிவுகளை வழங்கினார்.

இஸ்லாமிய வழிகாட்டலின் அடிப்படையிலான பணப்பரிமாற்றம், பணவைப்பு போன்ற நிதியியல் நடைமுறைக்கு ஷாபிஈ மத்ஹபின் அடிப்படையிலான தீர்வுகளைக் கண்டறிவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதற்கான முன்மொழிவுகளும் இதன்போது சபையில் முன்வைக்கப்பட்டன.

அத்தோடு, கருத்தரங்கின் ஈற்றில்; கலந்துகொண்ட ஆலிம்கள் அவர்களது கருத்துக்களையும் அபிப்பிராயங்களையும் சபையில் பரிமாறிக்கொண்டனர்.

இரு நாட்கள் நடைபெற்ற மேற்படி கருத்தரங்கின் இறுதி நிகழ்வாக ஜம்இய்யாவின் பொருளாளர் அஷ்-ஷைக் கலாநிதி ஏ.ஏ. அஹ்மத் அஸ்வர் அவர்கள் நன்றியுரை வழங்கினார்கள்.

ஜம்இய்யாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி, பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித், பொருளாளர் அஷ்-ஷைக் கலாநிதி ஏ.ஏ. அஹ்மத் அஸ்வர், உப தலைவர்களான அஷ்-ஷைக் எச். உமர்தீன், அஷ்-ஷைக் ஐ.எல்.எம். ஹாஷிம் ஸூரி, அஷ்-ஷைக் எம்.ஜே. அப்துல் ஹாலிக், துணைப் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் ஏ.சீ.எம். பாஸில் ஹுமைதி, ஃபத்வாக் குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ், பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான், ஃபத்வாக் குழுவின் துணைச் செயலாளர்களான அஷ்-ஷைக் எம்.எம்.எம். முர்ஷித், அஷ்-ஷைக் எம்.ரீ. ஸல்மான், ஆய்வு மற்றும் வெளியீட்டுக் குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் நாகூர் ளரீஃப், அஷ்-ஷைக் ஏ.ஆர். அப்துர் ரஹ்மான், அஷ்-ஷைக் எஸ்.எச்.எம். இஸ்மாஈல், அஷ்-ஷைக் எம்.எச்.எம். யஹ்யா, அஷ்-ஷைக் ஏ.ஜீ. ஹாமித் ஸதகா, அஷ்-ஷைக் எம்.இஸட்.எம். அமீனுதீன், அஷ்-ஷைக் எம்.எப்.எம். ரியாஸ், அஷ்-ஷைக் ஏ.எம். நஜ்முதீன், அஷ்-ஷைக் என்.எம். இர்ஸான், அஷ்-ஷைக் ஜாவித் இக்பால், அஷ்-ஷைக் எம்.ஏ.எம். அன்பாஸ், அஷ்-ஷைக் ஏ.ஜே.எம். மக்தூம், அஷ்-ஷைக் ஏ.எச்.எம். அக்ரம், அஷ்-ஷைக் எம்.இஸட்.எம். முஃபீர், அஷ்-ஷைக் எம். ஸவ்மி கரீம், அஷ்-ஷைக் எம்.எச்.எம். ஹுதைபா, அஷ்-ஷைக் எம்.எப்.எம். ரம்ஸி, அஷ்-ஷைக் எம்.என். அஃப்ராஸ், அஷ்-ஷைக் எம்.எம். லியாஉதீன், அஷ்-ஷைக் எஸ்.எல். தய்யிப், அஷ்-ஷைக் வை. நிஹார் முஹம்மத், அஷ்-ஷைக் எம்.எஸ். பைஸர், அஷ்-ஷைக் எம். ஷரஃப் இக்பால், அஷ்-ஷைக் எம்.என். அப்துல் வதூத், அஷ்-ஷைக் என். கன்ஸுல்லாஹ், அஷ்-ஷைக் எம்.ஏ.ஆர்.ஏ. மஸ்ஊத், அஷ்-ஷைக் ஏ.எச். ருஸைக், அஷ்-ஷைக் ஏ.ஆர். ரமீன், ஃபத்வாக் குழுவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் எம்.எம். மபாஹிம், துணை இணைப்பாளர்களான அஷ்-ஷைக் ஏ.ஆர். முஹம்மத், அஷ்-ஷைக் அப்துல்லாஹ் ருஸ்னி, அஷ்-ஷைக் ஹாரூன் இல்யாஸ் ஆகியோரும் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.

 

 

– ACJU Media –

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *