ACJU/NGS/2021/061
2021.04.23 (1442.09.10)
எமது நாட்டில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இது விடயமாக சுகாதார அமைச்சு வழங்கும் வழிகாட்டல்களை கண்டிப்பாக பின்பற்றி, இந்த நோயிலிருந்து எம்மையும் எமது குடும்பத்தையும் நம் நாட்டு மக்களையும் பாதுகாகக்க அனைவரையும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சகலரையும் கேட்டுக் கொள்கின்றது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ‘தொழுநோய் இருக்கும் ஊருக்குள் நுழைய வேண்டாம். அந்த நோய் ஏற்பட்ட ஊரிலிருந்து வெளியேரவும் வேண்டாம்’. (ஸஹீஹுல் புகாரி: 5729, ஸஹீஹுல் முஸ்லிம்: 2219). இந்நோய்கள் விடயத்தில் நாம் முன்எச்சரிக்ளையாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை இஸ்லாம் எமக்கு போதித்துள்ளது.
இவ்வைரஸின் தாக்கத்திலிருந்;து அனைவரையும் பாதுகாத்துக் கொள்ள பின்வரும் விடயங்களை மேற்கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது:
முஸ்லிம் சமூகம் ரமழான் காலத்திலும் ஏனைய காலங்களிலும் சுகாதார துறையினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களையும் வழிகாட்டல்களையும் முழுமையாக பின்பற்றி நடத்தல். குறிப்பாக முகக் கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவிக் கொள்ளுதல், 01 மீட்டர் இடைவெளியை பேணுதல், சன நெரிசலான இடங்களைத் தவிர்த்தல் போன்ற விடயங்களை கண்டிப்பாக பின்பற்றல்.
சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவதன் அவசியத்தை உலமாக்கள் பொது மக்களுக்கு தொடர்ந்தும் அறிவுறுத்தி, தங்களது மார்க்க சொற்பொழிவுகளில் இதனை ஞாபகமூட்டல்.
கூட்டாக அமல்கள் நடைபெறும் சந்தர்ப்பங்களிலும் ஏனைய நேரங்களிலும் மஸ்ஜித்களும் மேற்படி விடயத்தில் சுகாதார அதிகாரிகள் மற்றும் வக்ப் சபையினால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்களை முழுமையாகப் பின்பற்றி நடத்தல்.
முஸ்லிம்கள் பின்வரும் துஆவை அடிக்கடி ஓதிவருதல்:
‘ اللّٰهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبَرَصِ وَالْجُنُونِ وَالْجُذَامِ وَمِنْ سَيِّئِ الأَسْقَامِ ’
(பொருள் : யா அல்லாஹ்! வெண்குஷ்டம், பைத்தியம், தொழுநோய் மற்றும் மோசமான நோய்களிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகின்றேன். (அபூதாவூத் 1554)
எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா இது போன்ற கொடிய நோய்களிலிருந்து நம் தாய் நாட்டு மக்களையும் முழு உலக மக்களையும் பாதுகாப்பானாக. ஆமீன்.
அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா