நிர்ப்பந்தத்தால் உழ்ஹிய்யா கொடுக்க முடியாமற் போனால் அதன் சட்டமென்ன?

FATWA # 008/FTW/ACJU/2013/0180

Question

உழ்ஹிய்யாக் கொடுப்பதற்காக தயார்நிலையில் இருந்த சில பிராணிகள் சில காரணங்களால் எதிர்பாராத விதமாக குறிப்பிட்ட தினங்களுக்குள் கொடுக்க முடியாமலாகிவிட்டது. இக்கட்டத்தில் இதற்கான நன்மை கிடைக்குமா என பத்வாக் கோரி தங்களால் அனுப்பப்பட்ட 17.10.2013ஆந் திகதியிடப்பட்ட கடிதம் இத்தால் தொடர்புகொள்ளப்படுகிறது.

Fatwa

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

உழ்ஹிய்யா கடமையாவது எப்போது?

உழ்ஹிய்யாவிற்கென்று ஒரு பிராணியை வாங்கியதன் பின் அதைக் காட்டி இதை உழ்ஹிய்யாவிற்காக வாங்கியுள்ளேன், அல்லது இதை உழ்ஹிய்யாவாக ஆக்கிவிட்டேன் என்று வாயால் கூறிவிட்டால், குறிப்பிட்ட பிராணியை உழ்ஹிய்யாக் கொடுப்பது வாஜிபாகிவிடும். அவ்வாறு கூறியவுடன் அது அல்லாஹ்வுக்குரிய பலிப் பிராணியாக மாறிவிடும்.

நேர்ச்சை செய்த உழ்ஹிய்யாவின் சட்டம்

அதேபோன்று, குறிப்பிட்ட ஒரு பிராணியை வாங்கியதன் பின் அதை உழ்ஹிய்யாக் கொடுப்பதற்காக நேர்ச்சை செய்தாலும் அப்பிராணியை உழ்ஹிய்யாவாகக் கொடுப்பது வாஜிபாகிவிடும்.

மேற்குறிப்பிடப்பட்ட இருமுறைமைகளாலுமே உழ்ஹிய்யா வாஜிபாகும். இல்லாவிட்டால் அது ஒரு சுன்னத்தான உழ்ஹிய்யாவாகவே கருதப்படும்.

 வாஜிபான உழ்ஹிய்யாவைக் கழாச் செய்ய வேண்டுமா?

கடமையான உழ்ஹிய்யாவை குறிப்பிட்ட உழ்ஹிய்யா கொடுக்கப்பட வேண்டிய தினங்களில் அல்லது அதற்கு முன் திருடப்படுதல், காணாமல் போகுதல், பறிபோகுதல் போன்ற கொடுப்பவர்களது சக்திக்கு அப்பாலுள்ள காரணங்களால் கொடுக்கமுடியாமல் போனால் அந்த உழ்ஹிய்யாவைக் கழா செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

தவறிப்போன உழ்ஹிய்யாப் பிராணி மீண்டும் கிடைத்துவிட்டால்,,,,,

ஆனால், அதே பிராணிகள் உழ்ஹிய்யா கொடுக்கப்பட வேண்டிய தினங்களுக்குப்பின் மீண்டும் கிடைக்கப்பெற்றால் அதை கழாவாக நிறைவேற்றுவது கட்டாயமாகும்.

தவறிப்போன நேர்ச்iயின் சட்டம்

தன்மீது கடமையான உழ்ஹிய்யாப் பிராணி அது தவறிப் போனதற்கான காரணங்கள் தனது கவனயீனம், அலட்சியம் முதலிய காரணங்களாக இருந்தால் அதற்குப் பகரமாக மற்றொரு பிராணியை கழா செய்தல் அவசியமாகும்.

உழ்ஹிய்யா நிறைவேற்றுவதாக நேர்ச்சை செய்துகொண்ட ஒருவரின் பிராணி கைதவறி மீண்டும் அது பெற்றுக்கொள்ளப்படாவிட்டாலும் அதற்குப் பகரமாக  ஒன்றை நிறைவேற்றுவது நேர்ச்சை செய்தவர் மீது கடமையாகும்.

என்றாலும், பிராணியைத் தான் வாங்குவதற்கு முன் உழ்ஹிய்யாக் கொடுப்பதற்காக நேர்ச்சை செய்திருந்த சந்தர்ப்பத்தில் மாத்திரம் அது தவறும் பட்சத்தில் குறிப்பிட்ட பிராணி மீண்டும் கிடைக்காவிட்டாலும் இன்னும் ஒன்றை அதற்குப் பகரமாக உழ்ஹிய்யா கொடுப்பது கட்டாயமாகும்.

தவறிப்போன சுன்னத்தான உழ்ஹிய்யாவின் சட்டம்

சுன்னத்தான உழ்ஹிய்யாவாக இருந்து, குறிப்பிட்ட உழ்ஹிய்யா கொடுக்கப்பட வேண்டிய தினங்களில் அல்லது அதற்கு முன் திருடப்படுதல், காணாமல் போகுதல், பறிபோகுதல் போன்ற கொடுப்பவர்களது கட்டுப்பாட்டிற்கு அப்பாலுள்ள காரணங்களால் அல்லது கொடுப்பவர்களது கவனயீனத்தால் கொடுக்கமுடியாமலானால், மீண்டும் காலம் கடந்து கிடைக்கப்பெறும் சந்தர்ப்பத்தில் அதனைக் கழாவாக நிறைவேற்ற அவசியமில்லை. அவ்வாறு கழா செய்தால் அது ஒரு சதகாவின் இறைச்சியாக நிறைவேறுமே தவிர உழ்ஹிய்யாவாக கருதப்படமாட்டாது.

உழ்ஹிய்யாக் கொடுக்க நிய்யத்வைத்து நிறைவேற்ற முடியாது போனவருக்கு நன்மை கிடைக்குமா?

சுன்னத்தான உழ்ஹிய்யாவை தமது கவனயீனமின்றி தவிர்க்க முடியாத காரணங்களிற்காக கொடுக்க முடியாமல் போகும் பட்சத்தில் தான் வைத்திருந்த உறுதியான நிய்யத்திற்கு இன்ஷா அல்லாஹ் கூலி கிடைக்கலாம்.

மேலதிகத் தெளிவுகளுக்கு பின்வரும் பிக்ஹ் வசனங்களைப் பார்க்கலாம்.

  • قال أصحابنا فإن ضحى قبل الوقت لم تصح التضحية بلا خلاف بل تكون شاة لحم فأما إذا لم يضح حتى فات الوقت فإن كان تطوعا لم يضح بل قد فاتت التضحية هذه السنة فإن ضحى في السنة الثانية في الوقت وقع عن السنة الثانية لا عن الاولى وان كان منذورا لزمه أن يضحي لما ذكره المصنف والله أعلم (المجموع )

 

  • ولو قال جعلت هذه الشاة ضحية فوقتها وقت المتطوع بها ولا يحل تأخيرها فإن أخرها أثم ولزمه ذبحها كما سبق (المجموع)

 

  • ( فَإِنْ تَلِفَتْ ) أَوْ ضَلَّتْ أَوْ سُرِقَتْ أَوْ تَعَيَّبَتْ بِعَيْبٍ يَمْنَعُ الْإِجْزَاءَ ( قَبْلَهُ ) أَيْ وَقْتَ الْأُضْحِيَّةِ بِغَيْرِ تَفْرِيطٍ أَوْ فِيهِ قَبْلَ تَمَكُّنِهِ مِنْ ذَبْحِهَا وَبِغَيْرِ تَفْرِيطٍ أَيْضًا ( فَلَا شَيْءَ عَلَيْهِ ) فَلَا يَلْزَمُهُ بَدَلُهَا لِزَوَالِ مِلْكِهِ عَنْهَا بِالِالْتِزَامِ فَهِيَ كَوَدِيعَةٍ عِنْدَهُ وَإِنَّمَا لَمْ يَزُلْ الْمِلْكُ فِي عَلَيَّ أَنْ أَعْتِقَ هَذَا إلَّا بِالْعِتْقِ وَإِنْ لَمْ يَجُزْ نَحْوُ بَيْعِهِ قَبْلَهُ لِأَنَّهُ لَا يُمْكِنُ أَنْ يَمْلِكَ نَفْسَهُ وَبِالْعِتْقِ لَا يَنْتَقِلُ الْمِلْكُ فِيهِ لِأَحَدٍ بَلْ يَزُولُ عَنْ اخْتِصَاصِ الْآدَمِيِّ بِهِ وَمِنْ ثَمَّ لَوْ أَتْلَفَهُ النَّاذِرُ لَمْ يَضْمَنْهُ وَمَالِكُو الْأُضْحِيَّةِ بَعْدَ ذَبْحِهَا بَاقُونَ وَمِنْ ثَمَّ لَوْ أَتْلَفَهَا ضَمِنَهَا وَلَوْ ضَلَّتْ بِلَا تَقْصِيرٍ لَمْ يَلْزَمْهُ طَلَبُهَا إلَّا إنْ لَمْ يَكُنْ لَهُ مُؤْنَةٌ أَيْ لَهَا كَبِيرُ وَقْعٍ عُرْفًا فِيمَا يَظْهَرُ وَتَأْخِيرُهُ الذَّبْحَ بَعْدَ دُخُولِ وَقْتِهِ بِلَا عُذْرٍ فَتَلِفَتْ تَقْصِيرٌ فَيَضْمَنُهَا أَوْ فَضَلَّتْ غَيْرُ تَقْصِيرٍ كَذَا فِي الرَّوْضَةِ (تحفة المحتاج)

 

  • وَإِنْ نَذَرَ فِي ذِمَّتِهِ ثُمَّ عَيَّنَ لَزِمَهُ ذَبْحُهُ فِيهِ، فَإِنْ تَلِفَتْ قَبْلَهُ بَقِيَ الْأَصْلُ عَلَيْهِ فِي الْأَصَحِّ (منهاج الطالبين)

 

  • وعن أبي موسى رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال : ( إِذَا مَرِضَ الْعَبْدُ أَوْ سَافَرَ كُتِبَ لَهُ مِثْلُ مَا كَانَ يَعْمَلُ مُقِيمًا صَحِيحًا ) رواه البخاري (2834) . وقال الحافظ ابن حجر رحمه الله : فى فتح الباري : وَهُوَ فِي حَقّ مَنْ كَانَ يَعْمَل طَاعَة فَمنعَ مِنْهَا وَكَانَتْ نِيَّته لَوْلَا الْمَانِع أَنْ يَدُوم عَلَيْهَا

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹ்.