2019.05.28 (1440.09.22)
நோன்புப் பெருநாள் தொடர்பான வழிகாட்டல்கள்
நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கவனத்திற் கொண்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முஸ்லிம்களுக்கு பின்வரும் வழிகாட்டல்களை வழங்குகின்றது.
1. கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியன இணைந்து பிரகடனப்படுத்தும் தினத்திலேயே சகல முஸ்லிம்களும் பெருநாளைக் கொண்டாடுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.
2. நாட்டின் நிலைமையைக் கருத்திற் கொண்டு பெருநாள் தொழுகையை மைதானங்கள், திடல்கள் முதலான பொது இடங்களில் நடத்துவதைத் தவிர்க்குமாறும் மஸ்ஜித்களில் மாத்திரம் தொழுகைகளை நடத்துமாறும் வேண்டிக் கொள்கின்றோம்.
3. பெருநாள் தொழுகைக்காக வருகை தரும்போது வாகனங்களில் வருவதை முற்று முழுதாகத் தவிர்ந்து கொள்ளல் வேண்டும். தவிர்க்க முடியாத இக்கட்டான கட்டத்தில் வாகனங்களில் வருகை தருபவர்கள் ஒவ்வொரு வரும் தனித்தனி வாகனங்களில் வருகை தராமல் பலர் இணைந்து ஒரு வாகனத்தில் வருதல் வேண்டும்.
4. பள்ளிவாசல் நிர்வாகத்தினர் தத்தமது பிரதேச பொலிஸ் நிலையங்களுக்கூடாக மஸ்ஜித்களின் பாதுகாப்பை உறுதிசெய்து கொள்ளவும்.
5. பாதிக்கப்பட்ட மக்களின் நிலையைக் கவனத்திற் கொண்டு எதிர்வரும் பெருநாளை அடக்கமாக அனுஷ்டிக்குமாறும் பெருநாளுக்காக தயாரிக்கப்படும் உணவுப் பண்டங்களை சகோதர மதத்தவர்களுடனும், ஏழைகளுடனும் பகிர்ந்து கொள்ளுமாறும் வீண்விரயத்தையும் ஆடம்பரத்தையும் தவிர்த்து பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவிக் கரம் நீட்டுமாறும் வேண்டுகின்றோம்.
6. பெருநாளுக்காக பொருட்கள் மற்றும் துணிமணிகள் வாங்குவதற்காக பெண்கள் செல்வதை முடிந்தளவு தவிர்த்து ஆண்களே அவற்றை மேற்கொள்ளுமாறு வலியுறுத்துகின்றோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் எமது ரமழான் கால வணக்க வழிபாடுகளையும் நற்காரியங்களையும் ஏற்று அங்கீகரித்து நமது நாட்டில் அமைதியையும் சமாதானத்தையும் மலரச் செய்வானாக!
வஸ்ஸலாம்!
அஷ்-ஷைக் எச். உமர்தீன்
செயலாளர் – பிரச்சாரக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா