11.07.2017 (16.10.1438)
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவத் தலைவர் அஷ்-ஷைக் முப்தி எம்.ஐ.எம். றிழ்வி அவர்களின் அனுதாபச் செய்தி
அஷ்-ஷைக் எம். றியாழ் பாரி அவர்களின் மரணச் செய்தி எம்மைக் கவலையில் ஆழ்த்துகின்றது. இலங்கையின் தலைசிறந்த உலமாக்களில் ஒருவரும், கொழும்பு பெரிய பள்ளிவாயல் மதீனதுல் இல்ம் அரபிக் கல்லூரியின் அதிபரும், பெரிய பள்ளிவாயல் பிறைக்குழுத் தலைவருமான அஷ்-ஷைக் எம். றியாழ் பாரி அவர்கள் இன்று (11.07.2017) தனது 63வது வயதில் வபாத்தானார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலய்ஹி ராஜிஊன். அவர்களின் மரணம் இலங்கைவாழ் மக்களுக்கேற்பட்ட பெரும் இழப்பாகும்.
கடந்த 2003 ஆம் ஆண்டுமுதல் சுமார் 15 வருடகாலமாக அவர்களுடன் நெருங்கிப் பழகும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. தனது சொந்த அமல்களில் பேணுதலும், பிறருடன் அன்பாகவும் பணிவாகவும் பழகும் குணமும், பொறுப்புணர்வுடன் செயலாற்றும் தன்மையும், பிறருடன் நல்ல உறவைப் பேணும் அன்னாரது பண்பும் எம் உள்ளத்தை விட்டு ஒருபோதும் நீங்க மாட்டாது. காலம் சென்ற அப்துல் சமத் ஆலிம் மற்றும் அன்னாரது சகோதரர் மௌலவி அப்துல் லதீப் ஆலிம் போன்றோர்களோடு நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்த அன்னார் மிகவும் நற்குணம்படைத்தவராக காணப்பட்டார்கள்.
தனக்கு ஏற்பட்டிருந்த நோயையும் பொருட்படுத்தாமல் றமழான் மாதத் தலைபிறைக் கூட்டத்துக்கு அவர்கள் வருகை தந்தமை அன்னார் தமது பணிகளில் கொண்டிருந்த பொறுப்புணர்வைக் காட்டுகின்றது. இது உலமாக்களுக்கு நல்லதொரு முன்மாதிரியாகும்.
எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா அன்னாரது நல்லமல்களை அங்கீகரித்து, சகல பிழைகளையும் பொறுத்து, நல்லடியார்களின் கூட்டத்தில் சேர்த்தருள்வானாக, அவர்களது குடும்பத்தினர், மாணவர்கள் அனைவருக்கும்; ஆறுதலையும் நற்கூலியையும் வழங்குவானாக, ஆமீன்.
வஸ்ஸலாம்.
அஷ்-ஷைக் முப்தி எம்.ஐ.எம் றிழ்வி
தலைவர் – அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா