வாடகைக்கு விடப்படும் கட்டடங்கள், பெறுமானத்தை அடைந்த மாதாந்த வருமானம் ஆகியவற்றில் ஸக்காத்

FATWA # 013/ACJU/F/2006

Question

வாடகைக்கு விடப்படும் கட்டடங்கள், பெறுமானத்தை அடைந்த மாதாந்த வருமானம் ஆகியவற்றில் ஸக்காத் சம்பந்தமாக ஃபத்வாக் கோரி தங்களால் அனுப்பப்பட்ட 2004.10.27 தேதியிடப்பட்ட கடிதம் இத்தால் தொடர்புகொள்ளப்படுகிறது.

Fatwa

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

செல்வங்கள் பல வகைப்படும். அவை நாணயமாக இருப்பின், ஸக்காத்தின் பெறுமானத்தை (நிசாபை) அடைவதுடன் வருடமும் பூர்த்தியடையுமாயின் ஸக்காத் கடமையாகும்.

விவசாயப் பூமியாக இருப்பின், அதன் அறுவடையின் மீது (பெறுமானத்தை அடையுமாயின்) ஸக்காத் கடமையாகும்.

கட்டடங்கள், வாகனங்களாக இருப்பின், அவைகளின் வருமானங்களில் பெறுமானம் (நிசாப்) அடைந்து, அதிலிருந்து ஒரு வருடம் பூர்த்தியடையுமாயின் அவற்றில் ஸக்காத் கடமையாகும். வெறுமனே கட்டடங்கள், வாகனங்களில் ஸக்காத் விதியாக மாட்டாது.

பெறுமானத்தை அடைந்த மாதாந்த வருமானங்களுக்கு, வருடம் பூர்த்தியடையும் வரை ஸக்காத் கடமையாக மாட்டாது என்பதுவே பெரும்பாலான அறிஞர்களின் கருத்தாகும்.

அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.