Researched Fatwa
ஸக்காத் பணத்திலிருந்து ஜனாஸா வாகனத்தை பராமரித்தல்
Question

Fatwa

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களின் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
ஸக்காத்தைப் பெறுவதற்குத் தகுதியுடையவர்களைப்பற்றி அல்-குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.
“(ஸக்காத் என்னும்) தானங்கள் பரம ஏழை, ஏழை, அதன் உத்தியோகத்தர்களுக்கும், புதிதாக இஸ்லாத்தை தழுவியவர்களுக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்கும், கடனில் மூழ்கியவர்களுக்கும், அல்லாஹ்வுடைய பாதையில் போராடுவதற்கும், வழிப்போக்கர்களுக்கும் (உரித்தானதாக) அல்லாஹ் ஏற்படுத்திய கடமையாகும். அல்லாஹ் மிக்க அறிந்தோனும், ஞானமுடையோனுமாயிருக்கிறான்”. (09:60)
மேற்குறிப்பிடப்பட்ட கூட்டத்தார்களுக்கே ஸக்காத் வழங்கப்படல்வேண்டும். இமாம் ஷாபிஈ றஹிமஹுல்லாஹ் “அல்-உம்மு” வில்:
(فأحكم الله عزَّ وجلَّ فرض الصدقات في كتابه ثم أكدها فقال: “فريضة من الله”، قال: وليس لأحد أن يقسمها على غير ما قسمه الله عزَّ وجلَّ. كتاب قسم الصدقات ,الأم)
“அல்லாஹு தஆலா குர்ஆனில் ஸக்காத் கடமை என்று கூறிவிட்டு மீண்டும் “அல்லாஹ்விடமிருந்து கடமையாக்கப்பட்டது” என்று கூறி உறுதிப்படுத்தியுள்ளான். எனவே, அல்லாஹ் தஆலா (ஸக்காத்தைப்) பங்கிட்டதற்கு மாற்றமாக யாருக்கும் பங்கிட முடியாது ” என்று கூறியுள்ளார்கள்.
மேற்குறிப்பிடப்பட்ட எட்டுக் கூட்டத்தினருக்கே ஸக்காத் வழங்கப்படல் வேண்டும். அன்றி, ஸக்காத் பணத்திலிருந்து ஜனாஸா வாகனத்தை பராமரித்தல் போன்ற தேவைகளுக்கு வழங்க முடியாது. இதற்கு ஸக்காத் அல்லாத ஸதகா, வக்ப், அன்பளிப்பு போன்றவற்றின் கதவுகள் எப்போதும் திறந்தே உள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.