2019.06.12 ஆம் திகதி புதன் கிழமை தெஹிவளை முஹியித்தீன் ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்ற இலங்கையிலுள்ள மத்ரஸாக்களின் அதிபர்கள், நிர்வாகிகளுக்கான மாநாட்டின் தீர்மானங்கள்

2019.06.12 ஆம் திகதி புதன் கிழமை தெஹிவளை முஹியித்தீன் ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்ற இலங்கையிலுள்ள மத்ரஸாக்களின் அதிபர்கள், நிர்வாகிகளுக்கான மாநாட்டின் தீர்மானங்கள்

ஓவ்வொரு மதத்தினரும் தத்தம் மதத்திற்கான மதகுருமார்களையும் போதகர்களையும் உருவாக்குவதற்கென  தனியான கலாபீடங்களையும் பயிற்சி நிலையங்களையும் கொண்டிருப்பது போலவே இஸ்லாமியப் போதகர்களையும் மதத் தலைவர்களையும் உருவாக்கும் நோக்குடன் கடந்த 150 வருட காலமாக இலங்கையில் இயங்கி வரும் கலா பீடங்களே அரபு மத்ரசாக்களாகும்.

இலங்கையின் முதல் அரபுக் கல்லூரி 1870 ஆம்; ஆண்டு ஸாவியதுல் மக்கிய்யத்துல் பாஸிய்யத்துல் ஷாதுலிய்யா என்ற பெயரில்; காலி தலாபிடியிலும் 1884ஆம் ஆண்டு அல் மத்ரசதுல் பாரி வெலிகமயிலும் 1894 ஆம் ஆண்டு பஹ்ஜதுல் இப்றாஹீமிய்யா காலியிலும் 1931ஆம் ஆண்டு கபூரிய்யா அரபுக் கல்லூரி மகரகமயிலும் 1954 ஆம் ஆண்டு கிழக்கிலங்கை அரபுக் கல்லூரி அட்டாளைச் சேனையிலும்; 1955 ஆம் ஆண்டு காத்தான்குடி அல் பலாஹ் அரபுக் கல்லூரியும் 1959ஆம் ஆண்டு மகளிருக்கான கல்எலிய மகளிர் முஸ்லிம் அரபுக் கல்லூரியும் ஆரம்பிக்கப்பட்டன.

அரபு இஸ்லாமிய கற்கை நெறிகள் இலங்கையின் கல்வித் திட்டத்திலும் மிக ஆரம்ப காலம் முதலே உள்வாங்கப்பட்டுள்ளமை இங்கு ஈண்டு குறிப்பிடத்தக்கதாகும். அரச பாடசாலை மட்டத்திலும் கல்வியற் கல்லூரிகள், பல்கலைக் கழக மட்டங்களிலும் அரபு மொழி உட்பட இஸ்லாமிய கற்கை நெறிகள் காலாகாலமாக போதிக்கப்பட்டு வருகின்றன. 1940களின் ஆரம்பத்திலேயே பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரபு இஸ்லாமிய நாகரிகத் துறை ஸ்தாபிக்கப்பட்டது.

பாடசாலை மட்டத்தில் அரபு இஸ்லாம் பாடங்களைப் போதிப்பதற்காக மௌலவி ஆசிரியர்கள் கடந்த பல தசாப்தகாலமாக அரசினால் நியமிக்கப்பட்டு வந்துள்ளனர்.

இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்கள் அனைத்தும் அரபு மொழியில் இருக்கின்ற காரணத்தினால் மத்ரசாக்களில் அரபு மொழியும் ஏனைய இஸ்லாமிய கலைகளும் போதிக்கப்படுகின்றன. அவற்றோடு சிங்களம் ஆங்கிலம் ஆகிய மொழிகளும் கற்பிக்கப்படுகின்றன. பெரும்பாலான மத்ரசாக்களில் மாணவர்கள் கல்விப் பொதுத் தராதர சாதாரண மற்றும் உயர் தரப் பரீட்சைகளுக்கும் தயார் செய்யப்படுகின்றனர்.

2013ஆம் ஆண்டு முதல் அரச அங்கீகாரம் பெற்ற அரபு இஸ்லாமிய பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட இரண்டு பரீட்சைகள் பரீட்சைத் திணைக்களத்தினூடாக நடாத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அரச அங்கீகாரம் பெற்ற பாடத்திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு மத்ரசாக்களில் பாடப்போதனைகள் நடைபெறுகின்றன.

நாட்டுக்கும் சமூகத்துக்கும் சமயத்துக்கும் சேவை செய்யக் கூடிய நல்லொழுக்கமும் பண்பாடும் கொண்ட இறையடியார்களையும் நற்பிரஜைகளையும் உருவாக்கும் மகத்தான பணியிலேயே அரபு மத்ரசாக்கள் ஈடுபட்டு வருகின்றன. குறிப்;பாக அண்மைக் கால இன முரண்பாடுகளைக் கவனத்திற்கொண்டு சமூக நல்லிணக்கத்தையும் சக வாழ்வையும் கட்டியெழுப்பத் தேவையான வழிகாட்டல்களையும் மத்ரசாக்கள் மாணவர்களுக்கு வழங்குகின்றன என்பதையும் ஈண்டு குறிப்பிட விரும்புகின்றோம்.

 

குறித்த மாநாட்டில் பின்வரும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

  1. 2019 ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கின்றது.
  2. இந்த தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறுவதுடன் காயமுற்றவர்கள் விரைவில் குணமடைய இம்மாநாடு பிரார்த்திக்கின்றது.
  3. சாந்தி, சமாதானம், சகவாழ்வு ஆகிய உயர் குணங்களை ஊக்குவிக்கும் இஸ்லாத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை இம்மாநாடு உறுதியாகக் கூறிக்கொள்கின்றது.
  4. இந்த தாக்குதல்களுக்கு நேரடியாக மற்றும் மறைமுகமாக காரணமாக இருந்தவர்கள் அனைவருக்கும் உயர்ந்தபட்ச தண்டனையை வழங்க வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கின்றது.
  5. குருநாகல், புத்தளம், கம்பஹா ஆகிய மாவட்டங்களில் முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட இனவாதத் தாக்குதலையும் இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கும் அதே நேரம் அதில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனைகளை வழங்கவேண்டுமென்றும் உரிய அதிகாரிகளிடம் இம்மாநாடு வேண்டிக்; கொள்கின்றது.
  6. பயங்கரவாத தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்களைக் குறுகிய காலத்தில் கைது செய்து நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொண்ட நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், அரசாங்கம், பாதுகாப்பு தரப்பினர்களுக்கு இம்மாநாடு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது. மேலும் பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து கைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகளை அவசரமாக விடுவிக்க அரசாங்கம் ஆவண செய்ய வேண்டுமெனவும் இம்மாநாடு கேட்டுக் கொள்கின்றது.
  7. மத்ரஸாக்களில் உள்ள பாடத்திட்டங்கள் அனைத்தும் இந்நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டது என்பதையும் அவற்றில் பயங்கரவாதத்தை தூண்டும் அல்லது போதிக்கும் எத்தகைய விடயங்களும் இல்லை என்பதையும் உறுதியாகவும் பொறுப்புடனும் இம்மாநாடு கூறிக் கொள்கின்றது.
  8. இலங்கையில் பயங்கரவாதத்தையும்; அதன் சிந்தனையையும் வேரோடு இல்லாதொழிக்க மத்ரஸாக்கள் முனைப்புடன் செயற்படும் என்பதற்கு இம்மாநாடு பொறுப்புடன் உறுதிமொழியளிக்கின்றது.
  9. இந்நாட்டில் மத்ரஸாக்கள் பற்றி காணப்படும் தப்பபிப்பிராயங்களைக் கலைந்து இனங்களுக்கு மத்தியில் புரிந்துணர்வையும் சகவாழ்வையும் ஏற்படுத்த மத்ரஸாக்கள் முன்நின்று செயற்படும் என்பதையும் இம்மாநாடு பிரகடனப்படுத்துகின்றது.
  10. ஆயிரம் வருட கால வரலாற்றில் முஸ்லிம்கள் இந்நாட்டின் நலன்விரும்பிகளாகவும் சமாதானத்தை பேணுபவர்களாகவும் ஐக்கியத்தோடு வாழ விரும்புவர்களாகவும் இருந்து வந்துள்ளார்கள் என்பதையும் இவ்வாறான தீவிரவாத செயற்பாடுகளுக்கு துணைபோகவில்லை என்பதையும் கூறிக் கொள்ள விரும்புவதுடன் எதிர்காலத்திலும் அவ்வாறே முஸ்லிம்கள் இருப்பார்கள் இருப்போம் என்பதையும் இம்மாநாடு உறுதியாகக் கூறிக் கொள்கின்றது.
  11. நாட்டின் ஊடகங்கள் செய்திகளை வழங்குவதில் பொறுப்புணரச்சியுடன் நடந்து கொள்வதுடன் ஊடக தர்மத்தை பேண வேண்டும் என இம்மாநாடு வேண்டிக் கொள்கின்றது.
  12. இன ஐக்கியத்தையும் சமூக நல்லிணக்கத்தையும் தொடர்ந்தும் இந்நாட்டில் பேணுவதற்கு அரசாங்கம், பாராளுமன்ற உறுப்பினர்கள், மதத் தலைவர்கள், சிவில் சமூகம் இன மத மொழி வேறுபாடின்றி தொடர்ந்தும் அயராது உழைக்க வேண்டும் என்று இம்மாநாடு வேண்டிக் கொள்கின்றது.

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன