முஹர்ரம் மாதத்தில் நோற்கப்படும் ஆஷுரா மற்றும் தாஸுஆ நோன்புகள் தொடர்பான மார்க்க விளக்கம்

ACJU/FRL/2023/069/359

2023.07.27 (1445.01.08)

முஹர்ரம் மாதம் இஸ்லாமிய மாதங்களில் முதல் மாதமாகும். இது அல்-குர்ஆனில் குறிப்பிடப்பட்ட புனித நான்கு மாதங்களில் ஒன்றாகும்.

இம்மாதத்தில் நோன்பு நோற்பது மிகவும் சிறப்புக்குரியதாகும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். ரமழான் மாதத்தின் பின்னர் (நோற்கப்படும் நோன்புகளில்) மிகச்சிறந்த நோன்பு அல்லாஹ்வின் மாதம் முஹர்ரம் மாதத்தில் (நோற்கப்படும்) நோன்பாகும். பர்ளான தொழுகைக்குப் பின்னர் மிகச்சிறந்த தொழுகை இரவுத் தொழுகை ஆகும்.’
(நூல்: ஸஹீஹ் முஸ்லிம் – 1163)

முஹர்ரம் மாதத்தின் 10 ஆவது நாளுக்கு ஆஷுரா என்று சொல்லப்படும். இந்நாளிலேதான் அல்லாஹு தஆலா அநியாயக்கார ஆட்சியாளனாகிய பிர்அவ்ன் மற்றும் அவனுடைய படையினரிடமிருந்து நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை பாதுகாத்தான். நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு இந்நாளில் நோன்பு நோற்றார்கள்.

எனவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் இத்தினத்தில் நோன்பு நோற்றதோடு, ஸஹாபாக்களுக்கும் நோன்பு நோற்கும்படி ஏவியுள்ளார்கள். அந்தவகையில்,

ஆஷுராவுடைய தினத்தில் நோன்பு நோற்பது சுன்னத்தாகும்.

இதனை பின்வரும் ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனா வந்த போது யூதர்கள் ஆஷுரா நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள். ‘இது என்ன நாள்?’ என்று கேட்டார்கள். அதற்கு யூதர்கள், ‘இது ஒரு மகத்தான நாள். (மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைப்) பின்பற்றியவர்களை அல்லாஹு தஆலா அவர்களின் எதிரிகளிடமிருந்து காப்பாற்றிய நாளாகும். இதற்காக இறைத்தூதர் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நோன்பு நோற்றார்கள்’ என்று கூறினார்கள். இதனைக் கேட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘உங்களைவிட மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு மிகவும் தகுதியானவன் நான்’ என்று கூறிவிட்டு தாமும் நோன்பு நோற்று, மக்களுக்கும் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள் என இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்: ஸஹீஹுல் புகாரி – 2004)

‘ஆஷுரா எனும் இந்த (முஹர்ரம் பத்தாம்) நாளையும் ரமழான் மாதத்தையும் தவிர, வேறெதனையும் சிறப்பாகத் தேர்ந்தெடுத்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை’ என இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்: ஸஹீஹுல் புகாரி – 2006)

குறிப்பு: இவ்வருட ஆஷுரா நோன்பு, எதிர்வரும் 2023.07.29 ஆம் திகதி சனிக்கிழமை நோற்கப்பட வேண்டும்.

ஆஷுராவுடைய நோன்பானது கடந்த ஒரு வருடத்தில் செய்யப்பட்ட பாவங்களுக்குப் பரிகாரமாக அமைகிறது.

‘ஆஷுரா தினத்தில் நோற்கப்படும் நோன்பை அல்லாஹு தஆலா கடந்த ஒரு வருடத்தின் பாவங்களுக்குப் பரிகாரமாக்கி விடுவதை நான் ஆதரவு வைக்கின்றேன்’ என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ கதாதா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்: ஸுனன் அத்திர்மிதி – 752)

முஹர்ரம் மாதத்தின் 10 ஆவது நாளுடன் சேர்த்து 09 ஆவது நாளில் நோன்பு நோற்பது சுன்னத்தாகும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆஷுரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்கும்) கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், ‘அல்லாஹ்வின் தூதரே! இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே?’ என்று வினவினர். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்போம்’ என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணித்துவிட்டார்கள். (நூல்: ஸஹீஹ் முஸ்லிம் – 1134)

10 ஆவது நாளுடன் சேர்த்து 09 ஆவது நாளில் நோன்பு நோற்றுக் கொள்ள சந்தர்ப்பம் கிடைக்காதவர்களுக்கு 10 ஆவது நாளுடன் சேர்த்து 11 வது நாளில் நோன்பு நோற்றுக் கொள்வது சுன்னத்தாகும்.

மேலும் இம்மூன்று தினங்களிலும் நோன்பு நோற்றுக் கொள்வது விரும்பத்தக்கதாகும் என இமாம் ஷாபிஈ றஹிமஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

ஆகவே முஹர்ரம் மாதம் 10 ஆவது நாளுடன் (2023.07.29 சனிக்கிழமை) சேர்த்து 09 ஆவது நாளில் (2023.07.28 வெள்ளிக்கிழமை) அல்லது 11 ஆவது நாளில் (2023.07.30 ஞாயிற்றுக்கிழமை) நோன்பு நோற்றுக் கொள்வது சுன்னத்தாகும். இன்னும் 09, 10, 11 ஆகிய மூன்று தினங்களிலும் நோன்பு நோற்றுக் கொள்வது விரும்பத்தக்கதாகும். அதேவேளை ஒருவர் 10 ஆவது நாளில் மாத்திரம் நோன்பு நோற்றுக் கொள்வதாயின் அதற்கும் அனுமதியுள்ளது.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

 

அஷ்ஷைக் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ்
செயலாளர் – ஃபத்வா குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

Related Posts

பலத்த மழைவீழ்ச்சி, தொடர் காற்று போன்றவற்றின் ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்புப் பெற அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு நாட்டு மக்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கேட்டுக் கொள்கிறது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன