இண்டர்நெட் ஊடாக நிக்காஹ் செய்தல்

FATWA # 011/F/ACJU/2009

Question

இண்டர்நெட் ஊடாக நிக்காஹ் செய்வதைப் பற்றியும், மணமகளை தனியாக வெளிநாட்டில் உள்ள மாப்பிள்ளையிடம் அனுப்புவது பற்றியும் 2008.12.20 ஆந் தேதியிட்டு அனுப்பியிருந்த கடிதம் இத்தால் தொடர்பு கொள்ளப்படுகின்றது.

Fatwa

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

திருமண ஒப்பந்தம் செல்லுபடியாவதற்கு மணப்பெண்ணின் பொறுப்பாளரான வலியும் இரண்டு சாட்சிகளும் அவசியமாகும். இதனை பின்வரும் நபிமொழி சுட்டிக்காட்டுகின்றது:

‘வலி, இரண்டு நேர்மையான சாட்சிகள் இன்றி திருமணம் இல்லை. அதற்கு மாற்றமாக நடந்த திருமணம் செல்லுபடியற்றதாகும். அவர்கள் பிணங்கிக் கொண்டால் யாருக்கு வலி இல்லையோ அவருக்கு அரசர் வலியாவார்’ என நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்  கூறினார்கள். (ஸஹீஹ் இப்னி ஹிப்பான், ஹதீஸ் எண்: 4075)

வியாபாரக் கொடுக்கல் வாங்கல்களின் ஒப்பந்தங்கள் போலன்றி திருமண ஒப்பந்தம் இரண்டு சாட்சிகளின் முன்னிலையில் நடைபெறுவது அவசியமாகும். எனவே, சாட்சியாளர்கள் அவ்வொப்பந்தம்; நடைபெறுவதை ஐயந்திரிபற தெளிவாக அறிந்து கொள்ளும் நிலையில் அது நடைபெறுவதற்கு வலி, மணாளர், சாட்சியாளர்கள் ஆகியோரது  முன்னிலையிலேயே அது நடைபெற வேண்டும். இணையத்தளம், தொலைபேசி ஊடாக திருமணம் நடைபெறும்போது போதுமான அளவு உறுதியாக அதற்கு சாட்சியாக இருப்பது சாத்தியமில்லை. அத்துடன் திருமணம் என்பது வியாபாரம் போலன்றி ஒரு பெண்ணை ஹலாலாக்கி அவளை அனுபவிப்பதற்கான அனுமதியை ஏற்படுத்தும் ஒன்று என்பதால் அதன் நிபந்தனைகளில் ஏதேனும்  ஒன்று தவறும் பட்சத்தில் திருமணம் செல்லுபடியற்றதாக ஆகிவிடும் என்பதால் திருமண ஒப்பந்தம் அதீத பேணுதலுடனும் மிகுந்த கவனத்துடனும் செய்யப்படவேண்டியது அவசியம்.

வலி அல்லது மணாளர் திருமணம் நடைபெறும், சாட்சிகள் இருக்கும் இடத்திற்கு வரமுடியாத நிலையில் வெளிநாடு போன்றவற்றில் இருந்தால் தனக்குப் பதிலாக ஒருவரை பிரதிநிதியாக (வகீல்) நியமித்து, அவர் (வகீல்) சாட்சிகள் முன்னிலையில் திருமணத்தை நடாத்தி முடிக்கலாம். இது போன்ற சந்தர்ப்பங்களில் இதனையே மாற்று வழியாகக் கையாள வேண்டும்.

மேலும்,  ஒரு பெண் அவளது கணவன் அல்லது மஹ்ரமான ஆண் ஒருவரின் துணையின்றி பயணம் செய்வது இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட பாவமான காரியமாகும். திருமணம் முடிந்த பின் மணப்பெண்ணை வெளிநாட்டிலிருக்கும் அவளது கணவனிடம் அனுப்புவதாயின் அவளுடன் அவளுக்கு மஹ்ரமான ஓர் ஆண் அவசியம் செல்லவேண்டும்.

அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.