Researched Fatwa
இஹ்ராம் அணிந்த பெண்கள் முகம் திறத்தல்
Question

Fatwa

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
ஒரு பெண் இஹ்ராம் அணிந்த நிலைமையில் முகத்தைத் திறக்க வேண்டும் என்று ஷாபிஈ இமாம் உட்பட அதிகமான மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளார்கள். இதற்கு ஆதாரமாக பின்வரும் ஹதீஸ் உள்ளது.
இஹ்ராம் அணிந்திருக்கும் பெண்கள் முகத்தை மறைக்கக்கூடாது. மேலும் அவர்கள் கையுறைகளும் அணியக்கூடாது. (நூல் : புகாரி ஹதீஸ் எண் : 1883)
இஹ்ராமுடைய நிலையில் ஆண்கள் தலையை மறைக்காமல் இருப்பதைப் போன்றே பெண்களும் முகத்தை மறைக்காமல் இருத்தல் வேண்டும் என்று ஷாபிஈ மத்ஹபின் முக்கிய சட்ட நூற்களில் ஒன்றான முஃனில் முஹ்தாஜில் பதிவாகியுள்ளது.
இஹ்ராமுடைய நிலையில் மஹ்ரமில்லாத ஆண்கள் தென்படும் நேரத்தில் முகத்தை மறைத்துக் கொள்ள வேண்டும். இது சம்பந்தமாக ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவர்கள் பின்வருமாறு அறிவிக்கின்றார்கள்.
நாங்கள் இஹ்ராம் அணிந்த நிலையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இருக்கும் போது எங்களைக் கடந்து ஆண்கள் செல்வார்கள். அவர்கள் எங்களுக்கு நேராக வரும்பொழுது எங்களில் உள்ள பெண்கள் அவர்களின் தலையை மறைத்திருக்கும் ஆடையால் அவர்களின் முகத்தை மறைத்துக் கொள்வார்கள். அந்த ஆண்கள் எங்களை கடந்து சென்று விட்டால் நாங்கள் அத்திரையை அகற்றிக் கொள்வோம். (நூல் : அபூ தாவூத் – ஹதீஸ் எண் : 1833)
மேலும் ஆண்களது பார்வைகளை விட்டும் பெண்கள் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள முடியாத நிலமைகளில், முகத்தை மறைக்கும் திரை முகத்தில் படாத வண்ணம் ஒரு தடுப்பை நெற்றிக்கு நேராக வைத்துக் கட்டி மறைத்துக் கொள்ளலாம் என்று ஷாபிஈ மத்ஹபைச் சேர்ந்த அறிஞர்கள் கூறியுள்ளார்கள்.
என்றாலும், முகத்தில் படுமளவு முகத்தை மறைத்தால் பித்யா கொடுப்பது அவசியமாகிவிடும். அல்லது, முகம் கைகளின் அழகு என்பன வெளிப்படாதவண்ணம் மருதாணி மூலம் எவ்வித அலங்கரமும் இன்றி மொத்தமாக பூசிக்கொள்வதன் மூலமும் இஹ்ராம் அணிந்திருக்கும் பெண்கள் தமது அழகை மறைத்துக்கொள்ளலாம்.
ஹஜ் உம்ராவிற்குச் செல்லும் ஆண்கள் பெண்கள் எல்லோரும் தமது பார்வைகளை மஹ்ரமில்லாதவர்களைப் பார்ப்பதை விட்டும் வழமை போன்று பாதுகாத்துக் கொள்வது அவசியமாகும்.
தாம் புனிதமான அமலை புனிதமான இடத்திற்கு நிறைவேற்ற வந்துள்ளோம் என்பதை ஒவ்வொரு ஆணும் பெண்ணும் நினைவில் வைத்துக்கொள்வதுடன் ஒவ்வொரு அமலுக்கும் பல மடங்குகள் நன்மைகள் கிடைப்பதையும், பாவமும் பாவத்தின் கடினமும் பயங்கரமாக இருக்கும் என்பதை உணர்ந்தும் கருமமாற்ற வேண்டும்.
பெண்கள் முகத்தை மறைத்தல் போன்று அவர்கள் கையுறைகள் அணிவதோ அல்லது மாஸ்க் போன்றவற்றினால் மூக்கையும் வாயையும் மறைப்பதோ கூடாது. நோய்க்காக வேண்டி மறைப்பதால் பித்யாக் கொடுப்பது அவசியமாகும்.
இஹ்ராம் அணிந்த பெண் முகத்தை மறைப்பது கூடாது என்பதோ பொரும்பான்மையான அறிஞர்களின் கருத்தாகும். என்றாலும், ஒரு சில அறிஞர்கள் சில ஆதாரங்களை வைத்து முகத்தை மூடலாம் என்று கூறியுள்ளனர்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்
வஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு