ஈடுபிடிப்பவர் ஈட்டுப் பொருளைப் பாவித்தல்

FATWA #029/ACJU/F/2006

Question

ஒருவர் ஒரு தொகைப் பணத்தை முற்பணமாகப் கொடுத்து ஒரு காணியை ஈடு பிடித்து அப்பணம் முழுமையாக மீட்டிக் கொடுக்கப்படும் வரை அக்காணியைப் பயன்படுத்தலாமா என ஃபத்வாக் கோரி தங்களால் அனுப்பப்பட்ட 2004.05.01 தேதியிடப்பட்ட கடிதம் இத்தால் தொடர்பு கொள்ளப்டுகிறது

Fatwa

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

கடன் பெறுபவர் கடன் கொடுப்பவரிடம் தனது கடனுக்கு உறுதியாக அக்கடனை அடைக்க முடியாது போகும் போது விற்கமுடியுமான ஒரு பொருளை ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒப்படைப்பதை அடமானம் வைத்தல் அல்லது ஈடு வைத்தல் என்று கூறப்படும்.

ஈடுவைத்தல் ஷரீஆவில் அனுமதிக்கப்பட்ட ஆகுமான ஒரு விடயமாகும். இதனை பின்வரும் அல்-குர்ஆன் வசனமும், ஹதீஸும் உறுதிப்படுத்துகின்றன:

‘இன்னும், நீங்கள் பிரயாணத்தில் இருந்து (கொடுக்கல் வாங்கல் செய்யவேண்டிய நிலையேற்பட்டு அதனை எழுத) எழுத்தாளரும் உங்களுக்குக் கிடைக்கவில்லையென்றால் (கடன் பத்திரத்துக்குப் பதிலாக) கைப்பற்றப்படும் அடமானமாகும். உங்களில் சிலரை சிலர் நம்பி (அடமானம் வைப்பாரா) னால், நம்பப்பட்டாரே அத்தகையவர் தன்னிடம் இருக்கும் அமானிதத்தை (ஒழுங்காக) நிறைவேற்றிவிடவும்’   (அல்-பகரா : 283)

‘நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மரணிக்கும் போது, அவர்களது கவசம் ஒரு யூதரிடம் முப்பது ‘ஸாஃ’ கோதுமைக்கு அடமானமாக வைக்கப்பட்டிருந்தது’ என்று ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (சஹீஹுல் புகாரி : ஹதீஸ் எண் : 2759)

‘எனினும் ஈடுபிடித்தவர் தன்னிடம் ஒப்படைக்கப்படும் அடகுப் பொருளைப் பாவித்து பயனடைவது கூடாது. அப்பொருளை பாவித்துப் பயனடைவதற்கான  அனுமதி அவர்களது அவ்வொப்பந்தத்தில் வழங்கப்படுமாயின் அவ்வொப்பந்தமே செல்லுபடியற்றதாகும் என்பது மார்க்க சட்டஅறிஞர்களின் தீர்ப்பாகும்’.       (ஷர்ஹுல் முஹத்தப் : பா : 12, பக் : 293)

அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.