கடமையான ஜங்காலத் தொழுகைகளைத் தொழாதவருக்கான சன்மார்க்கத் தீர்ப்பு

FATWA # 011/ACJU/F/2004

Question

ஓர் ஆலிம் தனது குத்பாப் பிரசங்கத்தில் 'தொழாதவர்கள் காபிர்கள்' என்று கூறியதை அடிப்படையாக வைத்து நீங்கள் தொழாதவர்கள் பற்றிய மார்க்கத் தீர்ப்பை எம்மிடம் கோரி அனுப்பிய திகதியிடப்படாத கடிதம் இத்தால் தொடர்புகொள்ளப்படுகிறது.

Fatwa

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், சலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

தொழுகை இஸ்லாத்தின் ஐம்பெருங் கடமைகளில் ஒன்றாகும். பருவமடைந்த, சித்த சுவாதீனமுள்ள ஒவ்வொரு ஆணும், பெண்ணும் ஐங்காலத் தொழுகைகளைத் தவறாது அவைகளுக்குரிய நேரங்களில் நிறைவேற்றுவது மிகவும் அவசியமாகும். நீண்ட தூரப் பயணம், கடும் நோய், யுத்தம் போன்ற கஷ்டமான சந்தர்ப்பங்களில் கூட  தொழுகையை விடுவதற்கான எந்தச் சலுகையும் இஸ்லாத்தில் வழங்கப்படவில்லை. தொழுகையின் அவசியத்தையும், அதன் சிறப்பையும், தொழாமலிருப்பது, நேரம் தவறித் தொழுவது ஆகியவற்றின் பாரதூரத்தையும், பாவத்தையும் எடுத்தியம்பும் பல அல்-குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் நிறையவே உள்ளன.

நிச்சயமாகத் தொழுகையானது விசுவாசிகளின் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக இருக்கின்றது.   (4:103)

உபாதா இப்னுஸ் ஸாமித் (ரழி) அவர்கள் பின்வருமாறு நபியவர்கள் சொல்வதைத் தான் கேட்டதாகக் கூறுகின்றார்கள்:

‘ஐந்து நேரத் தொழுகைகளாகின்றன, அல்லாஹ் அவைகளைத் தனது அடியார்கள் மீது கடமையாக்கியுள்ளான். எனவே, யார் அவைகளுக்குரிய கடமைகளை முறையாக மதிக்காத நிலையில் அத்தொழுகைகளில் எதனையும் பாழ்படுத்தாமல் அவைகளை நிறைவேற்றுவாரோ அவரை சுவர்க்கத்தில் நுழையச் செய்வது அல்லாஹ்வின் பொறுப்பாகும். மேலும் யார் அவைகளை  நிறைவேற்றவில்லையோ, அவருக்கு அல்லாஹ்விடம் எந்தப் பொறுப்பும் கிடையாது. அவன் நாடினால் அம்மனிதனை வேதனை செய்வான், அல்லது அவன் நாடினால் அவனை சுவர்க்கத்தில் நுழைய வைப்பான்.’ (சுனனு அபீ தாவூத், சுனனுன் நசாயீ)

ரசூல் (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் கூறியதாக ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

‘நிச்சயமாக ஒரு மனிதனுக்கும், இணைவைத்தல், நிராகரித்தலுக்கும் இடையில் தொழுகையை விடுவது தான் இருக்கின்றது.’ (சஹீஹு முஸ்லிம்)

ஐங்காலத் தொழுகைகளை நிறைவேற்றாமல் இருப்பதும், நேரம் தாழ்த்தித் தொழுவதும் பெரும் பாவங்களாகும் என்பதில் இமாம்களிடத்தில் கருத்து வேறுபாடு கிடையாது. மேலும் தொழுகை கடமையான ஒருவன், தன் மீது அது கடமை என்பதை மறுப்பானாயின் அவன் முர்தத் (இஸ்லாத்தை விட்டும் நீங்கியவன்) ஆகி விடுவான் என்பது இமாம்களின் ஏகோபித்த முடிவாகும்.

தொழுகை தன் மீது கடமை என்பதை மறுக்காத நிலையில் சோம்பேறித்தனமாக அல்லது கவனயீனமாக அதனை நிறைவேற்றாதவன் விடயத்தில் தீர்ப்பு வழங்குவதில் ஆரம்ப காலந் தொட்டே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளதைக் காணலாம். ஒரு சாரார் இத்தகையவன் முர்தத்தாக மாட்டான். எனினும் அவன் பெரும் பாவியாவான் எனத் தீர்ப்பு வழங்கியுள்ளனர். பிரபல நான்கு மத்ஹப்களின் இமாம்களில் இமாம் மாலிக், இமாம் ஷாபிஈ, இமாம் அபூ ஹனீபா (ரஹ்) ஆகியோர் இக்கருத்தையே கூறியுள்ளனர். அத்துடன் இவர்களில் முன்னைய இருவரும் இவ்வாறு தொழுகையை விடுவபன், அவனது பாவத்திற்குத் தண்டனையாக கட்டாயம் கொல்லப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இமாம் அபூ ஹனீபா (ரஹ்) அவர்கள் அவன் கொல்லப்பட மாட்டான். எனினும் சிறையில் அடைக்கப்பட்டு அவன் தொழும் வரை அவனுக்கு அடிக்கப்பட வேண்டும் எனக் கருதியுள்ளார்கள். பரவலாக அமுலில் இருக்கும் இத்தீர்ப்பின் படி அவன் முர்தத் அல்ல என்றிருந்தாலும் கொல்லப்பட வேண்டிய அளவு பெரும் குற்றத்திற்குரிய பாவியாவான் என்பது இங்கு கவனிக்கத்தக்கதாகும்.

மற்றொரு சாரார் இப்படித் தொழுகையை விடுபவன் முர்தத்தாகி விடுவான் எனத் தீர்ப்பு வழங்கியுள்ளனர். குறிப்பாக இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்) இத்தீர்ப்பையே ஆதரித்துள்ளார்கள். அவன் முர்தத் எனும் அடிப்படையில் கொல்லப்பட்டு முஸ்லிம்களின் அடக்கத்தலங்கள் தவிர்ந்த வேறு இடங்களில் அடக்கப்பட வேண்டும் என்றும் இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்) கருதுகின்றார்கள். இக்கருத்தின் படி ஒழுகும் பட்சத்தில் அவன் உயிருடன் உள்ளபோதும், மரணித்த பின்பும் ஒரு காபிர் எவ்வாறு நடாத்தப்படுவானோ அவ்வாறே நடாத்தப்பட வேண்டும்.

மேலும் முறையான அதிகாரமுடைய தரப்பின் மூலம் மாத்திரமே குற்றங்களுக்கான தண்டனைகள் நிறைவேற்றப்பட வேண்டும். தனி மனித, சமூக நலன்கள் பலதைக் கருத்திற்கொண்டே குற்றங்களுக்கான தண்டனைகளை இஸ்லாம் விதித்துள்ளது. எனவே, தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பால் முறையான அதிகாரத்தின் அடிப்படையில் தண்டனைகள் நிறைவேற்றப்படாமல், தனிப்பட்ட நபர்கள், அல்லது குழுக்கள் தண்டனை வழங்க முற்படும் பட்சத்தில் ஒழுங்கீனமும், சமூகப் பிளவுகளும் ஏற்படும் என்பதில் ஐயமில்லை.

அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.