குத்பா பிரசங்கம் நிகழ்த்தும் பொழுது ஊன்று கோல் “அஸா” பாவித்தல்

FATWA # 010/ACJU/F/2011/01147

Question

குத்பா பிரசங்கம் நிகழ்த்தும் பொழுது ஊன்று கோல் “அஸா” பாவித்தல் சம்பந்தமாக பத்வாக் கோரி தங்களால் அனுப்பிவைக்கப்பட்ட கடிதம் இத்தால் தொடர்பு கொள்ளப்படுகின்றது.

Fatwa

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹ அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்கள் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

குத்பா பிரசங்கம் நிகழ்த்தும் பொழுது இமாம் ஊன்று கோல் (“அசா”) பயன்படுத்துவது விடயமாக இமாம்களிடம் கருத்து வேறுபாடு இருந்தாலும் இமாம்களான ஷாபிஈ, அஹ்மத், மாலிக் போன்றவர்களிடம் இவ்விடயம் சுன்னத்தான காரியமெனவும் விரும்பதக்கதெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

“நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வெள்ளிக்கிழமையன்று அஸா அல்லது ஈட்டயை ஊன்றி நின்றவர்களாக அல்லாஹ்வை புகழ்ந்து……………..(ஹதீஸ் தொடர்கின்றது)” (நூல்: அபூதாவூத். அறிவிப்பவர்: ஹகம் இப்னு ஹஸன்)

இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்:

“இமாம்கள் வெள்ளிக்கிமை மிம்பரில் பிரசங்கம் நிகழ்த்த நிற்கும் போது அஸா ஒன்றை ஊன்றி நிற்பது விரும்பத்தக்கதாகும். இதுவே நாம் பார்த்த விடயமும் கேட்ட விடயமுமாகும்.” (அல்-முதவ்வனதுல் குப்ரா)

ஹன்பலி மத்ஹபைச் சேர்ந்த இமாம் புஹூத்தி ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்:

“தனது இரு கைகளில் ஒன்றால் வாள் அல்லது ஈட்டி அல்லது அசா போன்ற ஒன்றைப் பிடித்து ஊன்றி நிற்றல் ஸுன்னத் ஆகும்” (நூல்: கஷ்ஷாபுல் கினாஃ)

“இமாம் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்:

எந்த வகையைச் சார்ந்த பிரசங்கமாயினும் பிரசங்கம் செய்யக்கூடிய ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு பொருளை ஊன்றி நிற்பதை நான் விரும்புகின்றேன்.”  (நூல் : அல்-உம்மு)

எனவே, மேற்கூறப்பட்ட ஹகம் இப்னு ஹஸன் றழியல்லாஹு அன்ஹு அவாகளின் ஹதீஸின் மூலமூம், இமாம்களான ஷாபிஈ, அஹ்மத், மாலிக் அவர்களின் கருத்துக்களின் மூலமும் இமாம் பிரசங்கம் நிகழ்த்தும்போது மிம்பரில் அஸா போன்ற ஊன்று கோலைப் பாவிப்பது விரும்பத்தக்கது என தெரிகின்றது.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு