Researched Fatwa
சிறையில் உள்ளவர்களின் பிள்ளைகளுக்கும், அநாதைப் பிள்ளைகளுக்கும் ஸகாத் நிதியிலிருந்து வழங்கலாமா?
Question

Fatwa

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
அனாதரவான பிள்ளைகளை இனம் கண்டு அவர்கள் ஒழுக்க சீலர்களாக, கல்விமான்களாக மேலும் நற்பிரஜைகளாக மாற வேண்டும் என்ற உங்களது முயற்சி மெச்சத் தக்கதும், பாராட்டத் தக்கதுமாகும். இதற்காக செலவழிப்பவர்களுக்கும் இதை நடாத்துபவர்களுக்கும் அல்லாஹ் ஈருலகிலும் நற்கூலி வழங்குவானாக.
ஸகாத் இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகும். அதைப் பெறத் தகுதியுடையவர்கள் பற்றி அல்-குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.
‘إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم’ (09:60)
‘(ஸக்காத் என்னும்) தானங்கள் பரம ஏழை, ஏழை, அதன் உத்தியோகத்தர்களுக்கும், புதிதாக இஸ்லாத்தை தழுவியவர்களுக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்கும், கடனில் மூழ்கியவர்களுக்கும், அல்லாஹ்வுடைய பாதையில் போராடுவதற்கும், வழிப்போக்கர்களுக்கும் (உரித்தானதாக) அல்லாஹ் ஏற்படுத்திய கடமையாகும். அல்லாஹ் மிக்க அறிந்தோனும், ஞானமுடையோனுமாயிருக்கிறான்’. (09:60)
ஆகவே, உங்கள் பராமரிப்பில் இருக்கும் பிள்ளைகளின் பெற்றோர்கள் வசதியானவர்களாக இருந்தால்; அவர்களுக்கு செலவழிப்பது அப்பெற்றோர்களின் கடமையாகும். இந்நிலையில் அப்பிள்ளைகளுக்கு ஸகாத் பங்கிலிருந்து கொடுக்க முடியாது.
அதே வேளை, அப்பிள்ளைகளின் பெற்றோர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதனால் அவர்களது குழந்தைகள் ஆதரவற்று, ஏழை பரம ஏழை போன்ற, ஸக்காத் பெறத் தகுதியான எட்டுக் கூட்டத்தாரில் உள்ளவர்களாக இருந்தால், அப்பிள்ளைகளும்; ஸகாத் பெறத் தகுதியானவர்களாக கணிக்கப்படுவார்கள்.
ஸகாத் பணத்தை உரியவர்களின் கைகளில் ஒப்படைப்பது அவசியமாகும். இவ்வகையில் ஸகாத் கிடைக்கப்பெறும் பிள்ளைகள் அதை முறையாகப் பயன்படுத்தமாட்டார்கள் என்றிருந்தால், அதை, அவர்களைப் பராமரிக்கும் பொறுப்பாளர்களிடம் ஒப்படைத்தல் வேண்டும். அவர்கள் அந்த ஸகாத் பணத்தை மிக அமானிதமான முறையில் அப்பிள்ளைகளின் தேவைகளுக்காக மாத்திரம் செலவு செய்தல் கட்டாயமாகும்.
பொதுவாக கட்டிடங்கள் கட்டுவதற்காக ஸகாத் பணத்தைக் கொடுக்க முடியாது என்பதே ஷாபிஈ மத்ஹப் அறிஞர்கள் உள்ளிட்ட பெரும்பான்மையான மார்க்க அறிஞர்களின் கருத்தாகும். மேலும், நீங்கள் கட்டும் கட்டிடம் குறிப்பிட்ட தற்பொழுதுள்ள பிள்ளைகளுக்கு மாத்திரம் இல்லாமல், நிராதரவான பிள்ளைகளுக்கான பொதுவான கட்டிடமாகவே இருக்கும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மேற்படி கருத்துக்கு ஆதாரமாக, அல்லாஹு தஆலா அல்குர்ஆனில் ஸகாத் கடமை என்று கூறிவிட்டு, அந்த ஸகாத்தை யாருக்குப் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுக் கூறியுள்ளான். பொதுக் கட்டிடங்கள் கட்டுவதற்கு ஸக்காத் கொடுக்கும் போது குறிப்பிட்ட நபர்களுக்கு என்றில்லாமல், அவை இதற்குப் பின்னால் வரக்கூடிய நிராதரவானவர்களுக்கும் பொதுவானதாகவே அமையும் என்பதனால் பொதுக் கட்டிடங்கள் கட்டுவதற்கு ஸக்காத் பணத்திலிருந்து கொடுக்க முடியாது என்று கூறுகின்றனர்.
இமாம் ஷாபிஈ றஹிமஹுல்லாஹ் ‘அல்-உம்மு’ எனும் தனது நூலில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
அல்லாஹு தஆலா குர்ஆனில் ஸக்காத் கடமை என்று கூறிவிட்டு மீண்டும் ‘அது அல்லாஹ்விடமிருந்து கடமையாக்கப்பட்டது’ என்று கூறி அதை உறுதிப்படுத்தியுள்ளான். எனவே, அல்லாஹ் தஆலா (ஸக்காத்தைப்) பங்கிட்டதற்கு மாற்றமாக யாருக்கும் அதைப் பங்கிட முடியாது’
அதே வேளை, பொதுத்; தேவைகளுக்கான கட்டிடங்களை வக்பு, ஸதகா மற்றும் அன்பளிப்பு போன்ற வழிகளில் கிடைக்கப்பெறும் பணங்களின் மூலம் கட்டுவதற்கு மார்க்கத்தில் தாராளமாக அனுமதியுண்டு. இவ்வடிப்படையில், நீங்கள் குறிப்பிட்ட அனாதரவான பிள்ளைகளுக்குத் தேவையான கட்டிடத்தை மேற்கண்ட வழிகளில் கிடைக்கப்பெறும் பணத்தைக் கொண்டு அமைக்கும் படியும், ஸகாத் பணம் கிடைக்கப் பெறும் பட்சத்தில் அதை மேற்;குறிப்பிட்ட வறிய பிள்ளைகளின் செலவினங்களுக்கு மாத்திரம் பயன்படுத்தும்படியும் வேண்டிக்கொள்கின்றோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
வஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு