தங்க நகைகளை ஈடுவைத்து பணம் பெறல் சம்பந்தமான மார்க்கத் தீர்ப்பு

FATWA # 002/ACJU/F/2006

Question

ஒருவர் தனது தங்க நகையை ஈடாக வைத்து 50,000 ரூபா கடன் பெறும்போது, 44,000 ரூபா கடனளிப்பதாகவும், இரண்டு வருடத்தில் 53,7145 ரூபா (9,7145 ரூபா மேலதிகமாக) தவணை அடிப்படையில் செலுத்த வேண்டும் என்றும் நிபந்தனை இடப்பட்டுள்ளது. இந்த ஈட்டு முறை விடயம் சம்பந்தமாகத் தங்களால் 2005.06.22 ஆந் தேதி எழுதப்பட்ட கடிதம் இத்தால் தொடர்பு கொள்ளப்படுகிறது.

Fatwa

புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களின் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

விற்க முடியுமான ஒரு பொருளை, ஒரு கடனுக்கு உறுதியாக (அடமானமாக) வைப்பதை ஈடு வைத்தல் என அழைக்கப்படுகிறது. இது இஸ்லாமிய ஷரீஆவில் அனுமதிக்கப்பட்டதும்,  முழுமையாக கடனோடு தொடர்புடைய விடயமுமாகும்.

ஷரீஆவின் தீர்ப்பின் படி கடன் கொடுத்த ஒருவர் தான் கொடுத்த தொகையை விட அதிகமாக கடன் பெற்றவரிடமிருந்து பெறுவது வட்டியைச் சார்ந்ததாகும்.  மேலதிக இலாபத்தை ஈட்டித் தரும் அனைத்து கடன் வகைகளும் வட்டியைச் சார்ந்தவைகளாகும் என்ற பொது விதி இதனை உறுதி செய்கிறது.

வல்ல அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.