தனது சகோதரனின் மகளைத் திருமணம் செய்து, அது தவறு எனத் தெரிந்ததன் பின் அவளைப் பிரிந்த ஒருவர், தற்பொழுது ஆதரவற்றிருக்கும் அவளுக்கு தங்குமிடமளித்தல்
Question

Fatwa

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்கள் கிளையார்கள், தோழர்கள் அனைவர்கள் மீதும் உண்டாவதாக!
உடன் பிறந்த சகோதரனின் மகளைத் திருமணம் செய்து கொள்வது ஹராம் என்று அல்-குர்ஆனில் ஸூரத்துந் நிஸாவின் 23வது வசனத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஹராம் எனத் தெரிந்து கொண்டு திருமணம் செய்தால் அத்திருமணம் செல்லுபடியற்றதாகிவிடும். அவ்விருவருக்கு மத்தியில் தாம்பத்திய உறவுகள் நடைபெற்றிருப்பின் அது விபச்சாரமாகவே கருதப்படும். அதன் மூலம் குழந்தைகள் பிறந்திருந்தால் அவை விபச்சாரத்தின் மூலம் பிறந்த குழந்தைகளாகவே கணிக்கப்படும். அக்குழந்தைகளுக்கு அவர் எவ்விதத்திலும் தந்தையாக மாட்டார்.
ஹராம் எனத் தெரிந்து பிரிந்ததன் பின், அச்சகோதரனின் மகள் உங்களுக்கு மஹ்ரமான பெண் என்பதால் அவளைப் பார்ப்பது, அவளுடன் பேசுவது அனுமதிக்கப்பட்டிருந்தாலும் அவை பாவத்திற்கு இட்டுச் செல்லும் எனப் பயப்படும் பட்சத்தில் அவற்றைத் தவிர்த்தல் அவசியமாகும்.
எனினும், அவளுக்கு உங்கள் வீட்டில் அடைக்கலம் கொடுப்பதென்பது முற்றாக அனுமதிக்க முடியாத ஒன்றாகும். ஏனெனில் நீங்கள் இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்திருக்கின்றீர்கள். எனவே அவளுக்கு அடைக்கலம் கொடுப்பதற்கு பின்வரும் மாற்று வழிகளை சிந்திக்கலாம்.
- அவளது சகோதரர்களது வீட்டில் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யலாம்.
- அவளது மகன் அவளை பராமரிப்பது கடமையென்பதை அவளது மகனுக்கு உணர்த்தி, அவருடன் வீட்டில் வசிப்பதற்கான ஏற்பாடுகளை செய்யலாம்.
- நீங்கள் உங்களது வீட்டை விட்டொதுங்கி வேறோர் இடம் அமைத்துக் கொண்டு அவள், தற்பொழுது உங்கள் வீட்டில் வசிக்கும் அவளது மகளுடன் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யலாம். இம்முறை சாத்தியமாகும் எனக் கருதுகின்றோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்
வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு