தொலைபேசியினூடாக திருமணத்தை நடாத்துவதற்கு அல்லது அதைக் கபூல் செய்வதற்கு பிரிதொருவரை வகீலாக்குதல்.

FATWA # 004/ACJU/FTW/2013/0178

Question

தொலைபேசியினூடாக திருமணத்தை நடாத்துவதற்கு அல்லது அதைக் கபூல் செய்து கொள்வதற்கு பிரிதொருவரை வகீல் ஆக்குதல் சம்பந்தமாக 03.03.2013 ஆம் தேதியிட்ட இத்தால் தொடர்புகொள்ளப்படுகிறது.

Fatwa

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும் ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும் அவர்களது கிளையார்கள் தோழர்கள் மீதும் உண்டாவதாக

ஷாபிஈ மத்ஹப் உட்பட அதிகமான ஆலிம்களிடம் திருமண ஒப்பந்தம் நடைபெறுவதற்கு மணமகளின் வலீ, மணவாளன், இருசாட்சியாளர்கள் அவசியமாகும். இவர்கள் அனைவரும் ஓரிடத்தில் அமர்ந்து திருமண ஒப்பந்தத்தை நடாத்தல் வேண்டும்.

குறிப்பிட்ட வலீ அல்லது மணவாளன் சாட்சியாளர்களின் சமுகத்தினுடன் திருமண ஒப்பந்தத்தை நடாத்த முடியாதவிடத்து, தனக்குப்பகரமாக இன்னொருவரை வகீலாக்கியே திருமணத்தை நடாத்தவேண்டும் என்றும், தொலைபேசி, இணையம் ஊடாக திருமணம் நடாத்த முடியாது என்றும் ஏலவே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏனெனில், நவீன தொலைத் தொடர்பு சாதனங்களின் ஊடாக திருமண ஒப்பந்தத்தை நடாத்தும் பொழுது, ஒருவர் மற்றவரின் சப்ததைக் கேட்கலாம். அவரைத் திரையில் பார்க்கலாம். ஆனால், ஓர் இடத்தில் அனைவரும் உடல்ரீதியாக சமுகமளித்தல்; என்பது இருக்காது.

அதேபோன்று, திருமணத்தின் சாட்சியாளர் திருமணம் நடைபெறும் இடத்தில் சமுகமளித்தல் வேண்டும் என்றும், சப்தத்தை மட்டும் கேட்கும் பார்வையற்றவராக இருக்கக் கூடாது என்றும் ஷாபிஈ பிக்ஹ் நூற்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இமாம் நவவி றஹிமஹுல்லாஹ் மின்ஹாஜுத் தாலிபீனீல் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்.

“وَلا يَصِحُّ إلا بِحَضْرَةِ شَاهِدَيْنِ , وَشَرْطُهُمَا حُرِّيَّةٌ , وَذُكُورَةٌ وَعَدَالَةٌ وَسَمْعٌ وَبَصَرٌ ”  – “( فَصْلٌ ) فِي أَرْكَانِ النِّكَاحِ وَتَوَابِعِهَا”

“திருமணம் இரண்டு சாட்சியாளர்களின் சமுகத்தினுடனே கூடும். அவர்கள் இருவரினதும் நிபந்தனை (அடிமையின்றி) சுதந்திரமாக, ஆணாக, நன்னடத்தையுள்ள, கேள்வி பார்வை உடையவராக இருத்தலாகும்.”

ஏனைய வியாபார ஒப்பந்தங்கள் போலன்றி அல்லாஹு தஆலா இந்த திருமண ஒப்பந்தத்திற்கு (ميثاقا غليظا) கடுமையான ஒப்பந்தம் என்று குறிப்பிடுகிறான். காரணம், ஹராமான ஒரு பெண்ணை ஹலால் ஆக்கும் ஒப்பந்தமாகும் என்பதினாலாகும்.

வலீ அல்லது மணவாளன் திருமணம் நடக்கும் இடத்திற்கு சமூகமளிக்க முடியாத பட்சத்தில் பிரிதொருவரை வக்கீலாக்கும் முறைமையை மார்க்க அறிஞர்கள் அனுமதித்துள்ளார்கள். இவ்வாறானதொரு மாற்று வழி இருக்கும்பொழுது தற்கால நவீன தொலைத்தொடர்பு சாதனங்களின் ஊடாக திருமணத்தை நடாத்தும் தேவை ஏற்படாது.

பிரிதொருவரை வகீலாக்கும் பொழுது நேரடியாக சந்தித்து வகீலாக்க முடியாத சந்தர்ப்பத்தில் எழுத்து மூலம் அல்லது தூதனுப்பி வகீலாக்கலாம். இதேபோன்று, சமகாலத்தில் உள்ள தொலைத்தொடர்பு சாதணங்களாகிய தொலை நகழ், தந்தி, தொலையச்சி, கணினித்திரை, தொலைபேசி போன்றவைகள் மூலமாகவும் திருமண ஒப்பந்தம் செய்வதற்காக பிறரை வகீலாக்கலாம்.

திருமண ஒப்பந்தம், பண பரிமாற்றம் போன்ற சில ஒப்பந்தங்கள் தவிர்த்து, மற்ற அனைத்து ஒப்பந்தங்களையும், (பிறரை வக்கீலாக்கும் ஒப்பந்தமும் இதில் அடங்கும்) சமகாலத்தில் உள்ள மேற்குறிப்பிடப்பட்ட தொலைத்தொடர்பு சாதனங்கள் போன்றவற்றின் மூலமாக நடாத்தலாம் என்று சர்வதேச இஸ்லாமிய சட்ட சபை அதன் 1990ம் ஆண்டின் ஜெத்தாவில் நடந்த மாநாட்டில் தீரமானம் ஒன்றை எடுத்துள்ளது.

இவ்வடிப்படையில், திருமண விடயத்தில் பிறரை வகீல் ஆக்கும்பொழுது நேரடியாகவோ அல்லது தூதுவர் மூலமாகவோ முடியாதவிடத்து, சமகால தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமாகவோ பிரிதொருவரை வக்கீல் ஆக்கலாம்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹ்.