நாடகம், குறுந்திரைப் படம் நடித்தல்

FATWA # 010/F/ACJU/2009

Question

நாடகம், குறுந்திரைப் படம் நடிப்பது பற்றிய மார்க்கத் தீர்ப்பு கோரி தங்களால் அனுப்பி வைக்கப்பட்ட 2007.02.27 தேதியிடப்பட்ட கடிதம் இத்தால் தொடர்பு கொள்ளப்படுகிறது.

Fatwa

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

தற்கால கலை, கலாச்சார நிகழ்வுகளில் நாடகமும், குறுந்திரைப் படமும் மிக முக்கிய பங்கை வகிக்கின்றன. இவ்விரண்டின் மூலம் மக்கள் கல்வி மற்றும் சமூக வாழ்வோடு ஒட்டிய சில இலாபங்களை அடைந்தபோதிலும், இவற்றில் பெரும்பாலானவை மார்க்கத்துக்கு முரணான இசை, ஆபாசக் காட்சி போன்றவற்றுடன் சம்பந்தப்பட்டிருக்கின்றன. அதன் காரணமாக பல வகையான விபரீதங்களையே அவர்கள் சந்திக்கின்றனர். எனவே இஸ்லாத்தின் அறநெறிகளை ஒழுகி நடக்கின்ற முஸ்லிமகள் தமது சொந்த இலாபத்துக்காகவோ, அல்லது கலை நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பதற்காகவோ நாடகங்கள், குறுந்திரைப் படங்கள் நடிக்கும் போது இஸ்லாமிய வரையறைகளை மீறாதிருப்பதற்காக பின்வரும் ஒழுங்குகளைக்  கடைப்பிடிப்பது அவசியமாகும்:

  1. நாடகங்களையும், குறுந்திரைப் படங்களையும் தயாரித்து வெளியிடுபவர்கள் சமூக உணர்வு உள்ளவர்களாகவும், சமூகத்துக்குத் தேவையான விடயங்களை நிறைவேற்றக்கூடியவர்களாகவும் இருத்தல் வேண்டும்.
  2. இஸ்லாத்தின் நலன், அறிவு விருத்தி போன்ற விடயங்கள் நோக்கமாகக் கொள்ளப்பட வேண்டும்.
  3. நபிமார்கள், கலீபாக்கள், சஹாபிகளுடைய வரலாற்று நிகழ்வுகளை சித்தரிக்கக் கூடியதாக எந்த ஒரு கட்டமும் அமையக் கூடாது.
  4. இஸ்லாமிய மார்க்கத்தில் தடுக்கப்பட்ட விடயங்களைப் போதிக்கக்கூடியதாக, ஊக்குவிக்கக்கூடியதாக அமையக் கூடாது. ஹராமானவற்றின் பக்கம் இட்டுச் செல்லும் அனைத்தும் ஹராமாகும்.
  5. அந்நிய மத நம்பிக்கைக் கோட்பாடுகளை உணர்த்தக்கூடியதாக, அவர்களுடைய மத அனுஷ்டானங்களை சித்திரிக்கக்கூடியதாக, அவர்களது உணர்வுகளைப் புன்படுத்தக்கூடியதாக அமையக் கூடாது.
  6. இசைக் கருவிகளைப் பயன்படுத்துவதை தவிர்த்தல் வேண்டும்.
  1. குறிப்பிட்ட ஓரு நபரையோ, குறிப்பிட்ட குழுவையோ விமர்சிக்கக்கூடியதாக அமையக் கூடாது.
  2. மது அருந்துதல், போதைவஸ்து உபயோகித்தல் போன்ற இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட விடயங்கள் யதார்த்தத்தில் நிகழக்கூடாது.
  3. பயங்கரவாதத்தை, கிளர்ச்சிகளைத் தூண்டக்கூடியதாக அமையக் கூடாது.
  4. வயது வந்த ஆண்களோ, பெண்களோ கட்டாயம் மறைக்க வேண்டிய பகுதி (அவ்ரத்) தெரியும் விதத்தில் அரங்கில் வெளியாகக் கூடாது.
  5. ஆண்கள் பெண்களைப் போன்றும், பெண்கள் ஆண்களைப் போன்றும் நடிப்பதைத் தவிர்த்தல் வேண்டும்.
  6. ஆண்களும், பெண்களும் தனித்தனியாக நடிப்பது இஸ்லாமிய மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட விடயமாகும்.
  7. ஆண்களும், பெண்களும் இனைந்து நடிப்பதாக இருந்தால் பின்வரும் நிபந்தனைகள் கடைப்பிடிக்கப்படல் வேண்டும்.
  • நடிக்கும் ஆண்களோ, பெண்களோ கட்டாயம் மறைக்க வேண்டிய பகுதி (அவ்ரத்) தெரியும் விதத்தில் அரங்கில் வெளியாகக் கூடாது. குறிப்பாக பெண்களுடைய ஆடை அவர்களின் மேனியுடைய நிறம், பருமன் ஆகியவற்றை எடுத்துக்காட்டக்கூடியதாகவோ, கண் கவரும் அழகிய வர்ணமுடையதாகவோ இருக்கக் கூடாது.
  • பெண்கள் தமது அழகை வெளிக்காட்டவோ, வாசனைத் திரவியங்கள் பயன்படுத்தவோ கூடாது.
  • ஓர் ஆணும் ஒரு பெண்ணும் தமக்கு மத்தியில் மஹ்ரமான உறவு இருந்தாலே தவிர, அல்லது தனது கணவனுடனே அன்றி, மக்களுடைய பார்வையை விட்டும் தூரமாகி தனித்திருக்கக் கூடாது.
  • எந்த சந்தர்ப்பத்திலும் அந்நிய ஆண், பெண் இருவருடைய மேனியும் சந்திக்கக் கூடாது.
  • அவசியக் காரணம் ஏதும் இல்லாமல் ஆண்கள் பெண்களையும், பெண்கள் ஆண்களையும் ஏரிட்டுப் பார்க்கக் கூடாது.
  • பெண்கள் அந்நிய ஆடவர்களுக்கு மத்தியில் பாடவோ இஸ்லாமிய ஒழுக்கங்களுக்கு அப்பாற்படும் விதத்தில் கதைக்கவோ, சிரிக்கவோ கூடாது.
  • ஒரு பெண் மஹ்ரமான ஆணோ, தனது கணவனோ இன்றி பிரயாணம் செய்யக் கூடாது.

எனவே நாடகங்களும் குறுந்திரைப் படங்களும் மேற்கூறப்பட்ட அனைத்து நிபந்தனைகளையும் உள்ளடக்கியவையாகவும் மார்க்கத்தில் தடுக்கப்பட்ட விடயங்களை விட்டு நீங்கியவையாகவும் அமையும் போது ஆண்களும் பெண்களும் தனித்தனியாகவோ, கூட்டாகவோ நடிப்பது ஆகுமாக்கப்படும். மாறாக சுட்டிக்காட்டப்பட்ட நிபந்தனைகளில் ஏதாவது இழக்கப்பட்டு, நவீன சாதனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட விடயங்களின் பால் இட்டுச்செல்லக் கூடியவையாக அமையும் போது அவை மார்க்கத்தில் அனுமதிக்கப்படமாட்டாது.

தற்காலத்தில் நடிக்கப்படும் நாடகங்கள் சமூகத் தேவைகளை, அவலங்களை, சமகால நிலையை பிரதிபலிப்பவையாக அமைந்திருக்கும் அதே வேளை பெரும்பாலானவை வேறு பல நோக்கங்களையும் பின்னணிகளையும் கொண்டிருப்பது எல்லோரும் அறிந்ததே. நந் நோக்குடன் அரங்கேற்றப்படும் நாடகங்களும் கூட மேற்காட்டப்பட்ட ஒழுங்குகளை முழுமையாக பூரணப்படுத்துபவையாக காணக்கிடைப்பது மிக மிக அரிது. இந்நிலையில் ‘நோக்கம் அடையும் வழியை நியாயப்படுத்துவதில்லை’ எனும் இஸ்லாமிய நியாயவியலின் பிரதான மூல விதியை கவனத்திற் கொள்ளவேண்டியுள்ளது.

மேலே கூறப்பட்ட நடிப்பதற்கும், குறுந்திரைப் படங்களுக்குமான ஒழுங்குவிதிகள், சமகால நாடகங்களையும் நடிப்பு முறைகளையும் மேடை அமைப்புகளையும் குறுந்திரைப் படங்களையும், இவை அனைத்தினதும் நோக்கங்களையும் பின்புலங்களையும் கவனத்திற் கொண்டு முன்வைக்கப்பட்டவையாகும்.

அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.