பள்ளிவாசல் நிர்மாணிப்பதற்காக வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து கடன் கொடுத்தல்

FATWA # 08/ACJU/FTW/2012/0157

Question

பள்ளிவாசல் நிர்மாணிப்பதற்காக வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து கடன் கொடுத்தல் சம்பந்தமாக பத்வாக் கோரி தங்களால் 02.05.2011ஆந் திகதி அனுப்பிவைக்கப்பட்ட கடிதம் இத்தால் தொடர்பு கொள்ளப்படுகின்றது.

Fatwa

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்கள் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

மஸ்ஜித் நிர்மாணிப்பதற்காக வசூலிக்கப்படும் பணம் அதை நிர்மாணிப்பதற்காகவே செலவளிக்கப்படல் வேண்டும். அப்பணம் நன்கொடையாளிகளால் அந்நோக்கத்திற்காகவே வழங்கப்பட்டதாகும். வேறு தேவைகளுக்காக அதனைப் பயன்படுத்தல் அல்லது கடன் கொடுத்தல் எவ்விதத்திலும் ஆகுமாக்கப்பட்டதல்ல. அவ்வாறு கடன் கொடுத்து அக்கடன் திரும்பப் பெறப்படவில்லையெனில் கடன் கொடுத்தவரே அதற்கு பொறுப்பேற்க வேண்டும். மக்களால் நம்பிக் கொடுக்கப்படும் பணம் அமானிதமாகும். அதனைப் பாதுகாத்து உரிய முறையில் செலவளிப்பது நம்பிக்கையாளர்களின் கடமை.

அமானிதங்களில் மோசடி செய்வது முனாஃபிக்குடைய பண்பு என்பதால், தம்மால் அமானிதத்தைப் பேண முடியாதவர்கள் நிர்வாக பொறுப்புகளை ஏற்காமல் இருப்பதே அவர்களுக்கு ஏற்றமுடையதாகும்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு