Researched Fatwa
பழைய மையவாடியின் மீது கட்டிடம் அமைத்தல்
Question
Fatwa
எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்கள் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
அல்லாஹ்வுடைய படைப்புக்களில் மிகச் சிறந்த படைப்பு மனித படைப்பாகும். அவர்களில் குறிப்பாக முஸ்லிம்கள் மிக கண்ணியமானவர்களாகும். உயிருடன் இருக்கும் போது ஒரு முஸ்லிமைச் சங்கைப்படுத்துவதைப் போன்று அவன் மரணித்த பிறகும் அவனைச் சங்கைப்படுத்துவது அவசியமாகும்.
முஸ்லிம்கள் அடக்கம் செய்யப்பட்ட மையவாடிகளில் கட்டிடம், பாதை போன்றவற்றை அமைப்பதால் அதில் உள்ள ஜனாஸாக்களின் அடையாலங்கள் நிரந்தரமாக மறைக்கப்படுவதுடன் அதில் அடங்கப்பட்டுள்ளவர்களுடைய சங்கைக்கும் குந்தகம் ஏற்படுகின்றது. எனவே முஸ்லிம்களுடைய மையவாடிகளில் கட்டிடங்கள், பாதைகள் அமைப்பதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். இத் தீர்ப்புக்கு பின்வரும் ஹதீஸ்கள் ஆதாரமாக அமைகின்றன.
அபூ மர்ஸத் அல்-கனவி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ‘கப்ர்கள் மீது உட்காராதீர்கள். மேலும் அவற்றை நோக்கி தொழாதீர்கள்’ என ரஸூலுல்லாஹி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். (நூல்: சஹீஹு முஸ்லிம் – ஹதீஸ் எண்: 1768)
ஜாபிர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: கப்ர்கள் சுண்ணாம்பால் பூசப்படுவதையும், அவை மீது எழுதப்படுவதையும், அவற்றின் மீது கட்டப்படுவதையும், அவை மிதிக்கப்படுவதையும் நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தடை செய்தார்கள். (நூல்: ஜாமிஉத் திர்மிதி – ஹதீஸ் எண்: 1052)
அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.

