பாவிக்க முடியாத நிலையில் உள்ள அல்-குர்ஆன் பிரதிகளை எரித்தல்

FATWA # 032/ACJU/F/2006

Question

பாவிக்க முடியாத நிலையில் உள்ள அல்-குர்ஆன் பிரதிகளை எரிக்கலாமா என ஃபத்வாக் கோரி தங்கள் நிர்வாக சபையால் எமக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த 2006.07.29 தேதியிடப்பட்ட கடிதம் இத்தால் தொடர்பு கொள்ளப்படுகிறது.

Fatwa

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

அல்-குர்ஆன் மனிதர்களுக்கு நேரான பாதையைக் காட்டுவதற்காக அல்லாஹ்வால் அருளப்பட்ட புனித வேதமாகும்;. அதன் கட்டளைகளை ஏற்று நடப்பதும், அதனைக் கண்ணியப்படுத்துவதும் மனிதர்கள் மீது கடமையாகும். இதனைப் பின்வரும் அல்-குர்ஆன் வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன:

‘மேலும், அல்லாஹ்வால் புனிதமாக்கப்பட்டவைகளை எவர் மேன்மைப்படுத்துகிறாரோ அது அவருடைய இரட்சகனிடத்தில் அவருக்கு மிகச்சிறந்ததாகும்’. (அல்-ஹஜ் : 30)

‘இன்னும் எவர் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களை கண்ணியப்படுத்துகிறாரோ நிச்சயமாக அது இதயங்களிலுள்ள பயபக்தியில் (ஏற்பட்டது) ஆகும்’.  (அல்-ஹஜ் : 32)

‘அல்-குர்ஆன் நெருப்பில் வீழ்ந்து எரிதல், நீரில் மூழ்குதல், அல்லது அசுத்தத்தில் விழுதல் போன்ற ஆபத்தான நிலையில் இருக்குமாயின் தொடக்குடையவர்கள்கூட அதனைப் பாதுகாக்கும் நோக்குடன் எடுப்பது கடமையாகும்’  என்று  மார்க்க அறிஞர்கள் குறிப்பிடுவதாக இமாம் அந்-நவவி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (அல்-மஜ்மூஃ – பாகம் : 02, பக்கம் : 60)

மேற்கூறப்பட்ட ஆபத்துகளில் இருந்து அல்-குர்ஆனைப் பாதுகாப்பது கடமையாகும் என்பதைப்  போன்று அது பாவிக்கப்பட முடியாத கட்டத்தை அடைந்து, அதன் கண்ணியத்தை இழக்கும் நிலைக்குத் தள்ளப்படுமாயின் அதனை எரித்து அதன் கண்ணியத்தைப் பாதுகாத்தல் என்பதைத் தவிர மாற்று வழிகள் இல்லாத போது அதனை  எரித்து அதன் கண்ணியத்தைப் பாதுகாப்பதும் கடமையாகும். இதனைப் பின்வரும் நிகழ்வு உறுதிப்படுத்துகின்றது:

‘கலீஃபா உஸ்மான் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களது ஆட்சிக் காலத்தில், மக்கள் மத்தியில் வித்தியாசமான ஓதல் முறைகளைக் கொண்ட பல அல்-குர்ஆன் பிரதிகள் பாவனையில் இருந்தன. இதனைக்  கண்ட கலீஃபா அவர்கள் மக்களை ஓரு முறையிலான ஓதலின் பக்கம் ஒன்று படுத்தும் நோக்குடன் ஒரு முறையிலான ஓதல் முறையைக் கொண்ட பிரதியைத் தவிர ஏனைய அல்-குர்ஆன் பிரதிகளையெல்லாம் எரித்துவிட்டார்கள். இந்நிகழ்வு பல முக்கியமான சிறந்த நபித்தோழர்கள் மத்தியில் நடைபெற்றது. அவர்களில் எவரும் இதனை ஆட்சேபிக்காததால் இவ்விடயம் நபித் தோழர்களது ஏகோபித்த முடிவான இஜ்மாஃ எனும் அந்தஸ்தை அடைந்ததாகும்.

‘அல்-குர்;ஆனை இழிவில் இருந்து பாதுகாத்தல், அதன் கண்ணியத்தைப் பாதுகாத்தல் என்ற நோக்கில் அதனை எரித்தலும், எரிக்கப்பட்டவற்றை சுத்தமான ஓர் இடத்தில் புதைத்தலும் ஆகுமானதாகும்’. (ஃபதாவா அல்-லஜ்னத்தித் தாஇமஹ்- பாகம் : 04, பக்கம் : 77)

‘அல்-குர்ஆன் எழுதப்பட்ட ஓரு பலகையை எரித்தல் மக்ரூஹ் ஆகும். அதே வேளை கண்ணியத்தைப் பாதுகாக்கும் நோக்குடன் எரித்தல் மக்ரூஹ் ஆகமாட்டாது. எரிப்பதற்கான தேவைகள் ஏற்படாத போது அதனை எரித்தல் ஹராமாகும்’ என்று இமாம் ஷம்ஸுத்தீன் அல்-ரமலீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (நிஹாயத்துல் முஹ்தாஜ் – பாகம் : 01, பக்கம் : 126)

‘அல்-குர்ஆனை பாதுகாத்தல் என்ற நோக்கத்திற்காக எரித்தல் ஆகுமானதாகும். தேவைகள் ஏதுமின்றி எரித்தல் ஹராமாகும். இழிவு படுத்தும் நோக்குடன் எரித்தல் குஃப்ர் (இறை நிராகரிப்பு) ஆகும்’ (அல்-மவ்ஸுஅத்துல் ஃபிக்ஹிய்யாஹ் – – பாகம் : 02, பக்கம் : 125)

அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.