பெருநாள் கொண்டாடப்படும் ஊரிலிருந்து நோன்பிருக்கும் ஊருக்கு பிரயாணம் செய்பவர் நோன்பு நோற்பது பற்றிய மார்க்கத் தீர்ப்பு

FATWA # 005/ACJU/F/2005

Question

'சென்ற றமழானில் 12.11.2004ம் திகதி உம்றா செய்து விட்டு திரும்புகையில் ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டதாக ஸஊதி அரசாங்கம் உத்தியோக பூர்வமாக அறிவித்தது. அவ்வறிவித்தல் செய்தி நாம் ஜித்தா விமான நிலயத்தில் இருக்கும் போது விமானத்தில் ஏறுவதற்கு முன் கிட்டியது. பின்பு விமானத்தில் ஏறியதும் எங்களைப் பார்த்து நோன்பு நோற்க வேண்டுமென்றும் அதன் பிறகு பிரயாணத்தில் இருப்பதால் நோன்பை விடலாமென்றும் அ.இ.ஜ.உ.சபைத் தலைவர் மௌலவி றிஸ்வி கூறினார்' எனக் குறிப்பிட்டு 'பெருநாள் பிரகடனப்படுத்தப்பட்ட ஊரிலிருந்து பெருநாள் அறிவிக்கப்படாது நோன்பிருக்கக் கூடிய ஊருக்கு செல்பவர்கள் நோன்பிருக்க வேண்டுமா?' என விளக்கம் கோரி தாங்கள் அனுப்பியிருந்த 2004.12.07 ஆந் திகதியிடப்பட்ட கடிதம் இத்தால் தொடர்புகொள்ளப்படுகிறது. மேற்படி விடயம் பற்றி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பத்வாக் குழுவில் ஆராயப்பட்டு பின்வருமாறு மார்க்கத் தீர்ப்பு வழங்குவதெனத் தீர்மானிக்கப்பட்டது.

Fatwa

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள்,தோழர்கள் மீதும் உண்டாவதாக!

ஷவ்வால் மாதத்தை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ள ஒரு பிரதேசத்திலிருந்து அதனை ஆரம்பிக்காத, தொடர்ந்தும் நோன்பிலுள்ள ஒரு பிரதேசத்துக்குச் செல்பவர் அப்பிரதேசவாசிகளைப் போல் அவரும் அன்று நோன்பு நோற்க வேண்டும். பிரதேசங்களின் வித்தியாசங்களுக்கேற்ப அவ்வப் பிரதேசங்களில் பிறை காணப்பட்டு மாதக் கணிப்பீடு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்ற கருத்தின் பிரகாரம் இதுவே சரியான முறையாகும்.

ஒரு நாட்டில் நோன்பு நோற்ற ஒருவர் அன்று மாலையாவதற்கு முன்னர் வேறொரு நாட்டுக்குச் செல்லுமிடத்து அங்கு பகல் பொழுது புறப்பட்ட நாட்டின் பகல் பொழுதை விட சில மணித்தியாலங்கள் அதிகமாயிருப்பினும் அவர் சென்றடைந்த நாட்டின் நேரத்துக்கு ஏற்பவே நோன்பைத் திறக்க வேண்டும். அண்ணல் நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பின்வருமாறு நவின்றுள்ளார்கள்:

‘நோன்பு நோற்பது நீங்கள் (அனைவரும்) நோன்பு நோற்கும் நாளிலாகும். நோன்பு நோற்பதை விடுவது (பெருநாள்) நீங்கள் (அனைவரும்) நோன்பு நோற்பதை விடும் நாளிலாகும். ஈதுல் அழ்ஹா நீங்கள் (அனைவரும்) உழ்ஹிய்யா நிறைவேற்றும் நாளிலாகும்.’ (நூல் : ஸுனனு அபீ தாவூத்)

மேற்படி ஹதீஸிலிருந்து இமாம்கள் பின்வரும் தீர்மானத்துக்கு வந்துள்ளனர்:

ஒருவர் நோன்பு ஆரம்பித்த பின்னர் வேறொரு ஊருக்கு பயணம் செய்தால் அவ்வூர் மக்களோடு சேர்ந்தே நோன்பு நோற்பதும், நோன்பு நோற்பதை விடுவதும் (பொருநாள் கொண்டாடுவதும்) அவர் மீது கடமையாகும். தான் நோன்பை ஆரம்பித்த ஊரை விட முன்னதாக தான் சென்றடைந்த ஊரவர்கள் பெருநாள் கொண்டாடினாலும் அவர் அவர்களுடன் சேர்ந்து பெருநாள் கொண்டாட வேண்டும். அத்துடன் 29 நாட்களை விட குறைவாக நோன்பிருப்பவர் ஒரு நாள் நோன்பைக் கழா செய்ய வேண்டும். ஏனெனில் இஸ்லாமிய தேதிக் கணக்கில் ஒரு மாதம் 29 நாட்களை விட குறைவாக அமைய மாட்டாது.

குறிப்பு: பிரயாணி என்ற சலுகையின் அடிப்படையில் ஒருவர் நோன்பை விடுவதற்கு அனுமதிக்கப்பட்டவராவார்.

அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.