Researched Fatwa
மஜ்லிஸ் முடிவுறும் போது ஸலவாத்துச் சொல்லுதல்
Question

Fatwa

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹி அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்கள் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் சொல்வது தொடர்பில் பல சிறப்புகள் இருப்பதன் காரணமாக அன்னார்மீது ஸலவாத் சொல்வதானது மிக முக்கியமான நபி வழியாகும்.
அதே போல் எந்த மஜ்லிஸ் கூடினாலும் கலைவதற்கு முன் அல்லாஹ்வின் திருநாமங்களை ஞாபகமூட்டுவதும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் சொல்லப்படுவதும் அம்மஜ்லிஸ் பூர்த்தியாக்கப்படுவதற்கு காரணமாக அமைகின்றன.
அல்லாஹ்வுடைய பெயரும் நபி மீது ஸலவாத்தும் சொல்லப்படாத மஜ்லிஸில் குறைகள் உள்ளதாக பின்வரும் ஹதீஸ் சுட்டிக் காட்டுகின்றது.
“ஒரு கூட்டம் மஜ்லிஸில் உட்கார்ந்து அதில் அல்லாஹ்வை ஞாபகிக்கவில்லையோ மேலும் அவனது நபி மீது ஸலவாத் சொல்லவில்லையோ அக்கூட்டத்தவர் மீது குறை ஏற்படும். (அல்லாஹ்) நாடினால் தண்டிப்பான், நாடினால் மன்னிப்பான்.” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளியிருக்கின்றார்கள்.
(ஆதாரம்: திர்மிதி, பாடம்: ஒரு கூட்டம் மஜ்லிஸில் உட்கார்ந்து அல்லாஹ்வை யாபகம் செய்யாமலிருப்பது)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலாம், ஸலவாத் அடங்கிய அனைத்து முறைகளிலும் ஸலவாத் கூறலாம். என்றாலும் ஹதீஸ்களில் குறிப்பிடப்பட்டவாறு பின்வரும் முறையில் கூறுவதே மிகச் சிறந்ததாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களிடம் வந்தார்கள். நாங்கள் ஸஅத் பின் உபாதா ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் மஜ்லிஸில் இருந்தோம். பஷீர் இப்னு ஸஅத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள், அல்லாஹ் உங்கள் மீது ஸலவாத் கூற ஏவியுள்ளான். நாம் எவ்வாறு உங்களுக்கு ஸலவாத் கூறுவது? என்று கேட்டார்கள். அப்பொழுது, நாங்கள் அந்தக் கேள்வியைக் கேட்டிருக்கக்கூடாது என ஆதரவு வைக்கும் வரை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மௌனித்தார்கள். பிறகு
“اللهم صلِّ على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم، وبارك على محمد وعلى آل محمد، كما باركت على آل إبراهيم، في العالمين إنك حميد مجيد”
என்று கூறுங்கள் என கூறினார்கள். ஸலாம் என்பது உங்களுக்குத் தெரிந்தது தானே என்றும் கூறினார்கள். (ஆதாரம்: ஸஹீஹு முஸ்லிம்)
ஒரு மஜ்லிஸ் நிறைவு பெற முன் அல்லாஹ்வை ஞாபகம் செய்வதோடு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் சொல்வதும், மேற்கூறப்பட்டது போன்ற ஹதீஸ்களில் குறிப்பிடப்பட்டஸலவாத்களை ஓதுவதும் விரும்பத்தக்கதாகும்.
அதே போல், குறிப்பாக ஒரு மஜ்லிஸ் நிறைவு பெறும் பொழுது
(سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ ، أَشْهَدُ أَنْ لا إِلهَ إِلَّا أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتْوبُ إِلَيْكَ)
என்ற துஆவை ஓதவேண்டும் என்பது பின்வரும் ஹதீஸிலிருந்து தெளிவாகின்றது.
அபு ஹுரைரஹ் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: “ஒருவர் மஜ்லிஸில் உட்கார்ந்து அதில் அவரது தவறுகள் அதிகமாகி அவர் மஜ்லிஸிலிருந்து விடைபெற முன்
سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ ، أَشْهَدُ أَنْ لا إِلهَ إِلَّا أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتْوبُ إِلَيْكَ ، إِلَّا غُفِرَ لَهُ مَا كَانَ في مَجْلِسِهِ ذَلِكَ
என்று கூறினால் அந்த மஜ்லிஸில் ஏற்பட்டவைகள் அனைத்தும் மன்னிக்கப்படும்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: சுனன் அல்-திர்மிதி)
எனவே, ஒரு மஜ்லிஸில் அல்லாஹ்வை ஞாபகம் செய்வதும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் சொல்வதும் அம்மஜ்லிஸ் பூரணமாகுவதற்கு காரணமாக அமைகின்றது. ஆகையால், ஒரு மஜ்லிஸ் நிறைவு பெறும் போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்தை சொல்லிவிட்டு மஜ்லிஸின் குற்றப்பரிகாரமாகிய
سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ ، أَشْهَدُ أَنْ لا إِلهَ إِلَّا أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتْوبُ إِلَيْكَ
என்ற துஆவை ஒதுவது மஜ்லிஸில் ஏற்படும் தவறுகளுக்கு குற்றப்பரிகாரமாக அமைவதுடன் அம்மஜ்லிஸ் பூரணமாகவும் ஆகிவிடும்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.