Researched Fatwa
மாதவிடாய் காலத்தில் தவாப் செய்தல்
Question

Fatwa

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்கள் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
தவாப் செய்வதற்கு பெருந் தொடக்கு சிறு தொடக்கு ஆகிய இரண்டிலுமிருந்தும் சுத்தமாக இருப்பது அவசியமாகும். ஒரு பெண் ஹஜ் செய்யும் பொழுது மாதவிடாய் ஏற்பட்டால் தவாபை தவிர்த்து மற்ற அனைத்து அமல்களையும் நிறைவேற்ற முடியும்.
“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய இறுதி ஹஜ்ஜின் போது ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு; மக்காவிற்கு நுழையமுன் மாதவிடாய் ஏற்பட்டது. அப்பொழுது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்: சுத்தமாகும் வரை கஃபாவை தவாப் செய்வதை தவிர, ஹாஜிகள் செய்யும் எல்லாவற்றையும் நிறைவேற்று” என்று கூறினார்கள்.”
அறிவிப்பவர்: ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா நூல்: சஹீஹுல் புகாரி
குறிப்பிட்ட காலத்தில் மாதவிடாய் ஏற்படும் என்று தெரிந்த பெண்கள் மருத்துவ ஆலோசனைகளுடன் மாதவிடாயை தாமதப்படுத்தும் மாத்திரைகளை உட்கொள்ளலாம்.
“இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் மாதவிடாய் தொடர்ந்த வண்ணம் இருந்த ஒரு பெண்மணி மருந்தின் மூலம் அதனை இடைநிறுத்துவதற்கு வினவிய பொழுது, அதில் தவறு ஏதும் இல்லையென கருதிய இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அராக்குச்சியின் தண்ணீரைக் குடிப்பது உகந்தது என்று அப் பெண்மணிக்கு வைத்திய வழி கூறினார்கள்.” நூல்: முஸன்னப் அப்திர் ரஸ்ஸாக்
மாதவிடாயுடன் தவாப் செய்ய வேண்டிய நிர்ப்பந்த நிலை ஏற்படும் பொழுது தவாப் செய்யும் விடயத்தில் மார்க்க அறிஞர்களிடம் கருத்து வேறுபாடு நிலவுகின்றது.
இவ்விடயமாக, இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் ஷரஹ் முஸ்லிம், அல்-மஜ்மூஃ போன்ற கிரந்தங்களின் ஹஜ்ஜுடைய பாடத்தில் குறிப்பிட்டுள்ளதின் சாரம் பின்வருமாறு:
“மாதவிடாய் உடைய பெண் தவாப் செய்வது கூடாது. இதில் அனைத்து உலமாக்களும் ஒன்றுபட்டிருக்கின்றார்கள். என்றாலும், ஷாபிஈ, மாலிக், அஹ்மத் ரஹிமஹுமுல்லாஹ் போன்ற இமாம்கள் தவாப் செய்வதற்கு சுத்தமாக இருப்பது நிபந்தனை என்றும் அவ்வாறு சுத்தமாக இல்லையென்றால் தவாப் செய்வது கூடாது என்றும் கூறுகின்றார்கள். இமாம் அபூ ஹனீபா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தவாப் செய்வதற்கு சுத்தம் நிபந்தனை இல்லை, மாறாக வாஜிப் என்று கூறுகின்றார்கள். அவ்வாறு ஹனபி மத்ஹபின் பிரகாரம், சுத்தம் இல்லாமல் தவாப் செய்தால் அந்த தவாப் செல்லுபடியாகும். ஆனால் மாதவிடாய் போன்று பெருந் தொடக்காக இருந்தால் குற்றப்பரிகாரமாக ஒரு ஒட்டகம் அல்லது மாடு கொடுக்கவேண்டும்.”
இமாம் மர்தாவியின் அல் – இன்ஸாப், இமாம் இப்னு முப்லிஹின் அல் – fபுரூஃ போன்ற கிதாப்களில் இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் அவர்களைத் தொட்டும் மாதவிடாய் உடன் தவாப் செய்தால் ஆடு ஒன்றை குற்றப்பரிகாரமாக்கொடுக்கவேண்டும் என்றும் இமாம் தகியுத்தீன் அவர்கள் நிர்ப்பந்த நிலைகளில் மாதவிடாயுடன் தவாப் செய்வதினால் குற்றப்பரிகாரம் ஏதும் தேவையில்லை என்று கூறுவதாகவும் வந்துள்ளது.
ஹன்பலி மத்ஹபைச் சேர்ந்த இமாம் இப்னு கய்யிம் ரஹிமஹுல்லாஹ் “இஃலாமுல் முவக்கிஈன்” இல் ஒரு பெண் மாதவிடாய் உடைய நிலையில் பர்ளான தவாப் செய்ய நிர்ப்பந்திக்கப்படும் போது தவாபை நிறைவேற்றலாம் எனவும் அவளுக்கு எது வித குற்றப்பரிகாரமும் கொடுக்கத் தேவையில்லை எனவும் கூறியுள்ளார்கள்.
ஷாபிஈ மத்ஹபின் முக்கிய இமாம்களில் ஒருவரான இப்னு ஹஜர் அல்-ஹைதமி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது துஹ்பாவின் ஹஜ்ஜுடைய பாடத்தில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்.
“(மாதவிடாய் காலத்தில் உள்ளவளுக்கு) பேணுதல் யாதெனில் அவள் பிரயாணம் செய்யுமுன் தவாப் செய்து தனது பொறுப்பை நிறைவேற்றுவது ஆகும் என்று கூறும் அறிஞர்களின் கருத்தைப் பின்தொடர்ந்து செயற்படுவதாகும்”
எனவே, ஸஊதியில் வசிப்பவர்கள் பர்ளான தவாபை நிறைவேற்ற முடியாது போனால் அவர்கள் சுத்தமாகும் வரை மக்காவில் தரித்து நின்று சுத்தமான பின் தவாபை நிறைவேற்றுவார்கள். தவாபை நிறைவேற்றாமல் தங்களது வசிப்பிடத்திற்கு திரும்பிச் செல்ல நேரிட்டால் மாதவிடாயிலிருந்து சுத்தமானவுடன் மீண்டும் மக்காவிற்கு சென்று பர்ளான தவாபை நிறைவேற்ற வேண்டும். இந்நிலையில் இஹ்ராம் அணிந்திருக்கும் பொழுது எந்த எந்த விடயங்கள் இவர் மீது ஹராமாக்கப் பட்டிருந்தனவோ (தாம்பத்திய உறவு உட்பட) அவைகளைத் தவிர்த்தல் அவசியமாகும்.
என்றாலும், ஸஊதி அல்லாத நாடுகளில் வசிப்பவர்கள் மாதவிடாய் ஏற்பட்டு பர்ளான தவாபை செய்ய முடியாது போனால், மக்காவில் தரித்திருந்து சுத்தமானவுடன் தவாபை முடித்துவிட்டு நாடு திரும்ப முடியுமாயுன் அவ்வாறு செய்வதே அவசியம்.
நாடு திரும்புவதை பிற்படுத்துவது அல்லது தனது ஹஜ் குழுவை விட்டு பிரிவது கடினம் போன்ற கடும் நிர்ப்பந்த நிலைமைகள் ஏற்படும் பொழுது தவாபுல் இபாலாவை மாதவிடாயுடன் நிறைவேற்றுவதற்கு அனுமது உண்டு. அப்பொழுது மாதவிடாய் சிந்தாமல் பாதுகாப்பான முறையில் இறுகக் கட்டிக்கொள்வது அவசியமாகும்.
இத்தகையவர்கள், குற்றப்பரிகாரமாக ஒரு ஆடு கொடுப்பது மிகப் பேணுதலாகும். அவ்வாறு கொடுக்காமல் நாடு திரும்பியவர்கள் மக்காவில் ஆடு அறுத்துக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தல் வேண்டும்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு