மார்க்கக் கல்வியைப் பயிலும் மாணவர்களுக்கு ஸக்காத் வழங்கல்

FATWA #05/ACJU/FTW/2012/0154

Question

மார்க்கக் கல்வியைப் பயிலும் மாணவர்களுக்கு ஸக்காத் வழங்குவது சம்பந்தமாக ஃபத்வாக் கோரி 2011.10.06 ஆந் திகதியிட்டு அனுப்பப்பட்ட கடிதம் இத்தால் தொடர்பு கொள்ளப்படுகின்றது.

Fatwa

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்கள் கிளையார்கள், தோழர்கள் அனைவர்கள் மீதும் உண்டாவதாக!

ஸக்காத்தைப் பெறுவதற்கு தகுதி உடையவர்கள் பற்றி அல்-குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது:

“(ஸக்காத் என்னும்) தானங்கள் பரம ஏழை, ஏழை, அதன் உத்தியோகத்தர்களுக்கும், புதிதாக இஸ்லாத்தைத் தழுவியவர்களுக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்கும், கடனில் மூழ்கியவர்களுக்கும், அல்லாஹ்வுடைய பாதையில் போராடுவதற்கும், வழிப்போக்கர்களுக்கும் (உரித்தானதாக) அல்லாஹ் ஏற்படுத்திய கடமையாகும். அல்லாஹ் மிக்க அறிந்தோனும், ஞானமுடையோனுமாயிருக்கிறான்”. (09:60)

ஷரீஆவைக் கற்கும் மாணவர்களுக்குக் குறிப்பாக ஸக்காத்தில் ஒரு பங்கு இல்லை. மாணவர்களில் பருவமடையாதவர்களது பெற்றோர்கள் ஏழைகளாக இருப்பின் அம்மாணவர்களுக்கு ஏழைகளுக்குரிய பங்கிலிருந்து கொடுக்க முடியும். அவர்கள் பணக்காரர்களாக இருப்பின் தங்களது பிள்ளைகளுக்குத் தேவையான செலவுகளைப் பொறுப்பேற்றல் வேண்டும்.

மாணவர்கள் பருவமடைந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு ஏழைகளுக்குரிய பங்கிலிருந்து ஸக்காத் வழங்க முடியும். ஏனெனில் அவர்கள் ஃபர்ழு கிஃபாயாவான மார்க்கக் கல்வியைக் கற்பதனால் தொழில் புரிய முடியாது.

இமாம் அந்-நவவி ரஹிமஹுல்லாஹ் மஜ்மூஃவில் “ஸக்காத்” உடைய பாடத்தில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள் :

وَلَوْ قَدَرَ عَلَى كَسْبٍ يَلِيقُ بِحَالِهِ إلَّا أَنَّهُ مُشْتَغِلٌ بِتَحْصِيلِ بَعْضِ الْعُلُومِ الشَّرْعِيَّةِ بِحَيْثُ لَوْ أَقْبَلَ عَلَى الْكَسْبِ لَانْقَطَعَ عَنْ التَّحْصِيلِ حَلَّتْ لَهُ الزَّكَاةُ؛ لِأَنَّ تَحْصِيلَ الْعِلْمِ فَرْضُ كِفَايَةٍ”    “المجموع,  كتاب الزكاة”

“தகுமான தொழில் புரிய முடியுமாக இருந்தும் ஒருவர் மார்க்கக் கல்வியைப் பெற்றுக்கொள்வதில் ஈடுபாடாக இருந்து, தொழில் புரிந்தால் மார்க்கக் கல்வியைப் பெற்றுக்கொள்வது முடியாமலாகிவிடும் என்றிருப்பின் அவருக்கு ஸக்காத் (எடுப்பது) ஆகும். ஏனெனில் மார்க்கக் கல்வியைக் கற்பது ஃபர்ழு கிஃபாயாவாகும்”

ஸக்காத் உரியவர்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என்பதால், நிர்வாகம் மாணவர்களது வகீலாக இருந்து அவர்களுக்குரிய ஸக்காத்தை ஏற்று அவர்களிடமே ஒப்படைத்தல் வேண்டும். மாணவர்கள் மாதாந்தக் கட்டணமாகவோ அல்லது வேறு முறையிலோ ஒப்படைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யலாம்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு