மாற்று மதத்தவரைத் திருமணம் முடித்து மரணித்தவரின் நிலை.
Question

Fatwa

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
திருமணம் என்பது ஒரு முஸ்லிமான ஆண் ஒரு முஸ்லிமான பெண்ணை வலீ, சாட்சி, மற்றும் மஹ்ர் மூலம் தாம்பத்திய வாழ்விற்கு ஹலாலான பெண்ணாக ஆக்கிக் கொள்வதாகும்.
பொதுவாக முஸ்லிம்கள் முஸ்லிம் அல்லாதவர்களுடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவது, அவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் செய்வது போன்ற விடயங்களை இஸ்லாம் தாராளமாக அனுமதித்தாலும், ஒரு முஸ்லிமான பெண் அல்லது ஆண் முஸ்லிமல்லாத ஓர் ஆணை அல்லது (யூத, கிறிஸ்தவப்) பெண்கள் அல்லாத பெண்ணைத் திருமணம் செய்வதற்கு இஸ்லாம் அனுமதி வழங்கவில்லை.
அவ்வாறு திருமணம் செய்;தால் அது இஸ்லாத்தின் பார்வையில் செல்லுபடியற்றதாகவே கருதப்படும். அவ்வாறு திருமணம் செய்வது ஹராம் என்று தெரிந்தும், அதை தன்மீது ஹலாலாக்கி திருமணம் செய்து கொண்டால் அப்பொழுது அவர் இஸ்லாத்தை விட்டும் நீங்கியவராக கருதப்படுவார். அதே வேளை அவ்வாறு செய்வது ஹராம் என்று தெரிந்து கொண்டே திருமணம் செய்து உடலுறவு கொண்டால் அது விபச்சாரமாகவே கருதப்படும்.
என்றாலும், மாற்றப்பட (அல்-குர்ஆன் இறங்க) முன்னுள்ள, திரிபு படுத்தப்படாத, உண்மையாக இருக்கும் நிலையில் இருந்த, தௌராத் அல்லது இன்ஜீலைப் பின்பற்றும் வேதக்கார பரம்பரையைச் சேர்ந்த (யூத, கிறிஸ்தவப்) பெண்களை இஸ்லாமிய அடிப்படையில் திருமணம் செய்வதற்கு அனுமதியுண்டு.
அவ்வாறு, மாற்றப்பட (அல்-குர்ஆன் இறங்க) முன்னுள்ள, திரிபு படுத்தப்படாத, உண்மையாக இருக்கும் நிலையில் இருந்த, தௌராத் அல்லது இன்ஜீலைப் பின்பற்றும் வேதக்கார பரம்பரையைச் சேர்ந்தவர் எனும் விடயத்தில் சந்தேகம் ஏற்பட்டால் அல்லது அப்பரம்பரையைச் சார்ந்த பெண் அல்ல என்பது உறுதியாகத் தெரிந்தால் அப்பெண்ணைத் திருமணம் செய்வது ஹராமாகும்.
முஸ்லிம் அல்லாத ஒருவரை, ஒரு முஸ்லிமான ஆண் அல்லது பெண் திருமணம் செய்து, அதே நிலையில் மரணித்தால் அவர் செய்த இச்செயல் பெரும்பாவமாக இருந்தாலும், அவர் இஸ்லாத்தை விட்டும் நீங்கியவராகக் கணிக்கப்படமாட்டார். எனவே, அவருக்கு ஒரு முஸ்லிம் மரணித்தால் செய்ய வேண்டிய அனைத்துக் கடமைகளையும் செய்வது அவசியமாகும்.
என்றாலும், குறிப்பிட்ட நபர் இஸ்லாத்தை விட்டும் நீங்கியது உறுதியாகத் தெரிந்தால், அப்போது ஒரு முஸ்லிம் மரணித்தால் செய்ய வேண்டிய கடமைகளை அவருக்கு செய்வதோ, முஸ்லிம் மையவாடியில் அவரை அடக்கம் செய்வதோ கூடாது.
எதிர் காலத்தில் இத்தகைய திருமணங்கள் நடைபெறாமல் இருப்பதற்குத் தேவையான ஆக்கபூர்வமான அறிவுரைகளையும் மார்க்கத் தெளிவுகளையும் பொதுமக்களுக்கு வழங்குவது ஆலிம்களதும் சமூக நலன்விரும்பிகளதும் கடமையாகும்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
வஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு