வாயால் மொழியாமலும், உள்ளத்தால் எண்ணாமலும் ஒருவர் தனது மனைவியை தலாக் சொல்வதாக எழுதுவதன் மூலம் மாத்திரம் தலாக் செல்லுபடியாகுமா என்பது பற்றிய மார்க்கத் தீர்ப்பு

FATWA # 007/ACJU/F/2004

Question

நீங்கள் வேறு ஒருவர் வாய் மொழிய உங்கள் இரண்டாம் மனைவியை தலாக் சொல்வதாக உங்கள் கைப்பட ஒரு கடிதம் எழுதியதாகவும், அதனை எழுதும் போது நீங்கள் தலாக்கை வாயால் மொழியவோ, உள்ளத்தால் எண்ணவோ இல்லையெனவும் கூறி, இந்நிலையில் அந்தத் தலாக் எந்த அளவு நிறைவேறும் என்பது பற்றிய சன்மார்க்கத் தீர்ப்பைக் கேட்டு 2004.02.20 திகதியிடப்பட்டு உங்களால் எமக்கு அனுப்பபட்ட கடிதம் இத்தால் தொடர்புகொள்ளப்படுகின்றது.

Fatwa

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், சலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

ஒருவர் தனது மனைவியை தலாக் (விவாகரத்து) செய்வதாக வாயினால் மொழியாமல் எழுதுவாராயின் அவர் தலாக் செய்வதாக உள்ளத்தால் நினைக்காவிட்டால் தலாக் செல்லுபடியாகாது. இக்கருத்து ஷாபிஈ மத்ஹபின் பிரபல சட்ட நூலான ‘அல்-மஜ்மூஃ’ (பாகம்: 17, பக்கம்: 118) வில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:

‘ஒருவர் தனது மனைவியைத் தலாக் செய்வதாக (தலாக்கிற்கான) தெளிவான சொல்லின் மூலம் உள்ளத்தால் (தலாக் செய்வதை) நினைக்காத நிலையில் (வாயினால் மொழியாது) எழுதுவாராயின் தலாக் உண்டாக மாட்டாது.’

மேலும் பிரபல நான்கு மத்ஹப்களில் ஏனைய மத்ஹப்களும் இக்கருத்தையே வலியுறுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.