Researched Fatwa
ஸக்காத் விதியாகும் பொருட்கள்
FATWA # 013/ACJU/F/2004
Question

ஸக்காத் விதியாகும் பொருட்கள் பற்றிய தெளிவு கோரி புத்தளம் முஹ்யித்தீன் ஜும்ஆப் பள்ளி ஸக்காத் குழு உங்கள் முன்வைத்திருந்த கேள்வி சம்பந்தமாக 2004.09.20 திகதியிடப்பட்டு தங்கள் கிளை எமக்கு அனுப்பியிருந்த கடிதம் இத்தால் தொடர்புகொள்ளப்படுகிறது.
Fatwa

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், சலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
பின்வரும் பொருட்களில் ஸக்காத் விதியாகும் :
- தங்கம், வெள்ளி : இவை நாணயம், ஆபரணம், உருக்கப்படாத பாளம், புதையல், அகழ்ந்து எடுக்கப்பட்டது என எந்த வடிவில் இருந்தாலும் அதில் ஸக்காத் கடமையாகும். தங்கம், வெள்ளி நாணயக் குற்றிகளுக்குப் பதிலாக இன்று பாவனையிலுள்ள நாணயக் குற்றிகள், நோட்டுக்கள் ஆகிய பணங்களிலும் ஸக்காத் கடமையாகும்.
- கால்நடைகள் : கால்நடைகளில் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றில் ஸக்காத் விதியாகும்.
- தானியங்கள் : தானியங்களில் பழுதடையாமல் சேமித்து வைக்க முடியுமான பிரதான உணவாக சாப்பிடப்படக்கூடியவற்றில் ஸக்காத் விதியாகும். உதாரணம் :- அரிசி, கோதுமை, சோளம், குரக்கன், தினை. (எமது நாட்டின் பிரதான உணவு அரிசியாகும்)
- பழங்கள் : பழங்களில் கொடி முந்திரிகைப் பழம், பேரீத்தம் பழம் ஆகியவற்றில் ஸக்காத் கடமையாகும்.
- வியாபாரப் பொருட்கள் : இஸ்லாம் அனுமதித்த பொருட்களை வியாபாரத்தில் ஈடுபடுத்தும் பட்சத்தில் அதில் வியாபாரத்திற்கான ஸக்காத் விதியாகும்.
தேங்காய், இறால், உப்பு போன்ற பொருட்களில் ஸக்காத் விதியாகமாட்டாது என்பது பல மத்ஹப்களின் இமாம்களினதும், பெரும்பாலான அறிஞர்களினதும் தீர்ப்பாகும். ஆனால் அவைகளை வியாபாரத்தில் ஈடுபடுத்தும் பட்சத்தில் வியாபாரப் பொருள் என்ற அடிப்படையில் வியாபாரத்திற்கான ஸக்காத் 2 ½ வீதம் விதியாகும்.
அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.