Researched Fatwa
நீரிழிவு வியாதிக்காரர்கள் ‘இன்சுலின்’ ஊசி மருந்து பாவிக்கலாமா?
Question

Fatwa

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
நோயாளி தனது நோய் குணமடைவதற்காக, அனுமதிக்கப்பட்ட மருந்துகளைப் பாவிப்பது நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களது வழிமுறையைச் சார்ந்த விடயமாகும். அனுமதிக்கப்பட்ட மருந்துகள் கிடைக்கப் பெறாத நிலையிலுள்ள, தனது உயிருக்கே ஆபத்து ஏற்படலாம் என்று அஞ்சும் ஒரு நோயாளி, தடுக்கப்பட்ட பொருளினால் தயாரிக்கப்பட்ட மருந்தினைப் பாவிப்பதால் மாத்திரம் குணமடைவார் என்று மிகவும் நம்பகமான, முஸ்லிமான வைத்தியர் உறுதிப்படுத்துவாராயின், அந்நோயாளியின் தேவைக்கேற்ப அம்மருந்தினைப் பாவிக்கலாம் என்று இமாம்கள் குறிப்பிடுகின்றனர்.
அந்த அடிப்படையில் நவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்களின் மூலம் ஆடு, மாடு போன்ற மிருகங்களில் இருந்து தயாரிக்கப்படும் ‘இன்சுலின்’ கிடைக்கப் பெறாதபோதும், சுத்தமான மிருகங்களில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து நோயாளிகளுக்கு நியாயமான விலையில் கிடைக்கும் வரையிலும் பன்றியில் இருந்து தயாரிக்கப்படும் ‘இன்சுலின்’ என்னும் சர்க்கரை வியாதிக்கான ஊசி மருந்தினைப் பாவிக்கலாம்.
கீழ்வரும் அல்-குர்ஆன் வசனத்தின் வெளிச்சத்தில் இம்முடிவுக்கு வரலாம்.
‘எவர் பாவத்தின் பால் சாயாதவராக, பசியின் கொடுமையினால் நிர்ப்பந்திக்கப்பட்டு (விலக்கப்பட்டவற்றை புசித்து) விட்டால் (அது குற்றமாகாது)’ (05 : 03)
அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.