ஜுமுஆவுடைய நேரம் நுழைவதற்கு முன்னர் முதலாவது அதானைச் சொல்வது சம்பந்தமான மார்க்க விளக்கம்
Question

Fatwa

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும் ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
ஜுமுஆக் கடமை மார்க்கத்தில் மிக முக்கிய கடமைகளில் ஒன்றாகும். அதனை நிறைவேற்றுவதற்கு சில நிபந்தனைகளும் ஒழுங்குகளும் உள்ளன. அவை சரியான முறையில் பேணப்படும் போது அக்கடமை நிறைவேறுகின்றது.
ஜுமுஆவுடைய இரு குத்பாக்களையும் தொழுகையையும் நிறைவேற்றுவதற்கு அதன் நேரம் நுழைந்திருப்பது நிபந்தனையாகும். ஜுமுஆவுடைய ஆரம்ப நேரம் ழுஹ்ர் தொழுகையின் ஆரம்ப நேரமாகும். அதாவது அந்நேரம் சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்தவுடன் ஆரம்பமாகின்றது. தொழுகையின் ஆரம்ப நேரத்தை மக்களுக்கு அறிவிப்பதற்கு ‘அதான்’ சொல்வது ஸுன்னத்தாகும்.
ஜுமுஆவுடைய அதான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திலும், அபூபக்ர், உமர் றழியல்லாஹு அன்ஹுமா அவர்களின் காலத்திலும் ஒரு அதானாகவே இருந்து வந்தது. அது இமாம் மிம்பர் மீது ஏறி அமர்ந்தவுடன் கூறப்படும் அதானாகும்.
குறித்த இந்த அதான் கூறப்பட்டதிலிருந்து வியாபார கொடுக்கல் வாங்கல்களில் செய்வது (ஹராம்) தடுக்கப்பட்டதாகும். மேலும், சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்த பிறகு (ஜுமுஆவுடைய நேரம் நுழைந்ததிலிருந்து) வியாபாரம் செய்வது (மக்ரூஹ்) வெறுக்கத்தக்கதாகும். (ரவ்ழத்துத் தாலிபீன்)
ஸாஇப் இப்னு யஸீத் றழியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றாகள்: ‘வெள்ளிக்கிழமையின் அதான் இமாம் மிம்பரில் ஏறி உட்காரும் பொழுதே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், அபூபக்ர், உமர் றழியல்லாஹு அன்ஹுமா ஆகியோரது காலங்களில் இருந்து வந்துள்ளது. உஸ்மான் றழியல்லாஹு அன்ஹு அவர்களது ஆட்சிக்காலத்தில் மக்களின் எண்ணிக்கை அதிகரித்த பொழுது உஸ்மான் (றழியல்லாஹு அன்ஹு) இன்னும் ஒரு அதானை ஸவ்ராஃ எனுமிடத்தில் கூறும்படி ஏவினார்கள். அதன்படியே அது (இன்று வரை) அமுலில் இருந்து வருகிறது.’ (ஸஹீஹுல் புகாரி, கிதாபுல் ஜுமுஆ, பாபுத் தஃதீன் இன்தல் குத்பஹ்)
இமாம் மிம்பரில் உட்கார்ந்தவுடன் கூறப்படும் அதான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்திலிருந்தே இருந்து வந்துள்ளது என்பதும் உஸ்மான் றழியல்லாஹு அன்ஹு அவர்கள், மக்கள் தொகை அதிகரித்ததனால், குறித்த நேரத்தில் ஜுமுஆவுக்குத் தயாராகும் வகையில் இமாம் மிம்பரில் அமர்ந்தவுடன் சொல்லப்படும் அதானுக்கு சற்று முன்னதாக மற்றுமொரு அதானை கூறுவதற்கான ஏற்பாடுகளை செய்தார்கள் என்பதும் மேலுள்ள ஹதீஸிலிருந்து தெளிவாகின்றது.2
உஸ்மான் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அதிகப்படுத்திய அதான் ஜுமுஆவுடைய நேரம் நுழைந்ததை அறிவிப்பதற்கானது என இமாம் இப்னு ஹஜர் அல்-அஸ்கலானி றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியுள்ளார்கள்.3
அந்தவகையில் முதலாவது அதான் ஜுமுஆவுடைய நேரம் நுழைந்ததை அறிவிப்பதற்கும், இரண்டாவது அதான் இமாம் மிம்பரில் ஏறியவுடனும், மூன்றாவது அதான் (இகாமத்) இரண்டு குத்பாக்களும் நிறைவுற்றதுடன் தொழுகைக்காகவும் சொல்லப்படுபவையாகும்.4
இந்நடைமுறையே உலகலாவிய ரீதியில் அதிகமான இடங்களில் அக்காலம் தொட்டு இது வரை நடைமுறைப் படுத்தப்பட்டு வருவதுடன் குறிப்பாக எமது நாட்டிலும் இந்நடைமுறையே பின்பற்றப்பட்டு வருகின்றது. அதாவது ஜுமுஆத் தொழுகையின் நேரம் நுழைந்ததும் முதலாவது அதான் சொல்லப்பட்டு, பத்து அல்லது பதினைந்து நிமிடங்களில் இமாம் மிம்பரில் ஏறியவுடன் இரண்டாவது அதான் சொல்லப்படுவதாகும்.
இந்த நடைமுறை பெரும்பான்மையான மார்க்க சட்ட வல்லுநர்கள் மற்றும் ஹதீஸ் விரிவுரையாளர்களின் நிலைப்பாட்டிற்கும் உலகலாவிய ரீதியில் பெரும்பான்மையான பகுதிகளிலுள்ள நடைமுறைக்கும் ஒத்த முறையாகும். இதற்கு மாற்றமாக செயற்படுத்துவதன் மூலம் பல வகையான நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
உஸ்மான் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அதிகப்படுத்திய அதானை ஜுமுஆவுடைய நேரம் நுழைவதற்கு முன்னர் கூற முடியும் என்று ஒரு சில மார்க்க அறிஞர்கள்5 குறிப்பிட்ட போதிலும் பெரும்பான்மையான மார்க்க சட்ட வல்லுநர்கள் உட்பட முல்லா அலீ காரீ றஹிமஹுல்லாஹ் போன்ற ஹதீஸ்கலை விரிவுரையாளர்களும் குறித்த அதான் ஜுமுஆவுடைய நேரம் நுழைந்த பின்னரே சொல்லப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.6
ஃபர்ழுத் தொழுகைகளில் ஃபஜ்ர் தொழுகையைத் தவிர ஏனைய தொழுகைகளுக்கு நேரம் நுழைவதற்கு முன்னர் அதான் கூறுவதற்கு மார்க்கத்தில் அனுமதி கிடையாது என ஷாபிஈ மத்ஹபைச் சேர்ந்த அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.7
ஆகவே, நீங்கள் கோரியதற்கமைய ஜுமுஆவுடைய குத்பாவை நேரகாலத்தோடு ஆரம்பிப்பதற்கென முதலாவது அதானை ழுஹ்ருடைய நேரம் நுழைவதற்கு முன்னர் கூறுவதற்கு மார்க்கத்தில் அனுமதி கிடையாது.
ழுஹ்ருடைய நேரம் நுழைவதற்கு முன்னர் ஜுமுஆவுடைய அதானைச் சொல்வதன் மூலம் பின்வரும் விளைவுகள் ஏற்படுவதற்கு இடம்பாடு உள்ளது.
1. மக்கள் குறித்த அதானை செவிமடுத்து ஜுமுஆவுடைய முந்திய ஸுன்னத் தொழுகையில் ஈடுபட்டு விடுதல்
2. பெண்கள் ழுஹ்ருடைய தொழுகையில் ஈடுபட்டு விடுதல்
3. மஸ்ஜிதுக்கு வருகை தருவதில் அலட்சியம் செய்தல்
ஆகவே, ஜுமுஆவுடைய தினத்தில் ழுஹ்ருடைய நேரம் நுழைவதற்கு முன்னர் அதான் சொல்வதைத் தவிர்த்துக் கொள்வதுடன் ஜுமுஆவுடைய தொழுகைக்கான முதலாவது அதானை வழமையில் உள்ளது போன்றே உரிய நேரத்தில் கூறி, தேவைக்கேற்ப குத்பாக்களையும் உபதேசங்களையும் நெறிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
ழுஹ்ருடைய நேரத்துக்கு முன் ஜுமுஆத் தொழுகை நடாத்துவது தொடர்பான மார்க்க விளக்கத்தை பின்வரும் இணைப்பில் பார்வையிடலாம்.
https://acju.lk/news-ta/acju-news-ta/3265-acju-fatwa
எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
அஷ்ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ்
செயலாளர் – ஃபத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்ஷைக் முஃப்தி எம்.ஐ.எம். ரிழ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
———————————————————————————————————————-
[1] فَرْعٌ: يُكْرَهُ الْبَيْعُ بَعْدَ الزَّوَالِ، وَقَبْلَ الصَّلَاةِ. فَإِذَا ظَهَرَ الْإِمَامُ عَلَى الْمِنْبَرِ، وَشَرَعَ الْمُؤَذِّنُ فِي الْأَذَانِ، حَرُمَ الْبَيْعُ. وَلَوْ تَبَايَعَ اثْنَانِ أَحَدُهُمَا مِنْ أَهْلِ فَرْضِ الْجُمُعَةِ دُونَ الْآخَرِ، أَثِمَا جَمِيعًا. وَلَا يُكْرَهُ الْبَيْعُ قَبْلَ الزَّوَالِ. وَإِذَا حَرُمَ فَبَاعَ، صَحَّ بَيْعُهُ. (روضة الطالبين وعمدة
المفتين ٢/٤٧ — النووي (ت ٦٧٦)
[2] ١٠٨٧ – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ الْمُرَادِيُّ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي السَّائِبُ بْنُ يَزِيدَ، «أَنَّ الْأَذَانَ كَانَ أَوَّلُهُ حِينَ يَجْلِسُ الْإِمَامُ عَلَى الْمِنْبَرِ يَوْمَ الْجُمُعَةِ فِي عَهْدِ النَّبِيِّ ﷺ، وَأَبِي بَكْرٍ، وَعُمَرَ ، فَلَمَّا كَانَ خِلَافَةُ عُثْمَانَ، وَكَثُرَ النَّاسُ أَمَرَ عُثْمَانُ يَوْمَ الْجُمُعَةِ بِالْأَذَانِ الثَّالِثِ، فَأُذِّنَ بِهِ عَلَى الزَّوْرَاءِ، فَثَبَتَ الْأَمْرُ عَلَى ذَلِكَ»، (سنن أبي داود – ت محيي الدين عبد الحميد ١/٢٨٥ — أبو داود (ت ٢٧٥)
[3] قوله صلى الله عليه وسلم “فَثَبَتَ الْأَمْرُ كَذَلِكَ” وَالَّذِي يَظْهَرُ أَنَّ النَّاسَ أَخَذُوا بِفِعْلِ عُثْمَانَ فِي جَمِيعِ الْبِلَادِ إِذْ ذَاكَ لِكَوْنِهِ خَلِيفَةً مُطَاعَ الْأَمْرِ …. وَتَبَيَّنَ بِمَا مَضَى أَنَّ عُثْمَانَ أَحْدَثَهُ لِإِعْلَامِ النَّاسِ بِدُخُولِ وَقْتِ الصَّلَاةِ قِيَاسًا عَلَى بَقِيَّةِ الصَّلَوَاتِ فَأَلْحَقَ الْجُمُعَةَ بِهَا وَأَبْقَى خُصُوصِيَّتَهَا بِالْأَذَانِ بَيْنَ يَدَيِ الْخَطِيبِ (فتح الباري لابن حجر ٢/٣٩٤ — ابن حجر العسقلاني (ت ٨٥٢)
[4] قَوْلُهُ زَادَ النِّدَاءَ الثَّالِثَ فِي رِوَايَة وَكِيع عَن بن أَبِي ذِئْبٍ فَأَمَرَ عُثْمَانُ بِالْأَذَانِ الْأَوَّلِ وَنَحْوُهُ لِلشَّافِعِيِّ مِنْ هَذَا الْوَجْهِ وَلَا مُنَافَاةَ بَيْنَهُمَا لِأَنَّهُ بِاعْتِبَارِ كَوْنِهِ مَزِيدًا يُسَمَّى ثَالِثًا وَبِاعْتِبَارِ كَوْنِهِ جُعِلَ مُقَدَّمًا عَلَى الْأَذَانِ وَالْإِقَامَةِ يُسَمَّى أَوَّلًا (فتح الباري لابن حجر ٢/٣٩٤ — ابن حجر العسقلاني (ت ٨٥٢)
[5] https://islamqa.info/amp/ar/answers/100225
[6] قَالَ الطِّيبِيُّ: الْمُرَادُ بِالنِّدَاءِ الثَّالِثِ هُوَ النِّدَاءُ قَبْلَ خُرُوجِ الْإِمَامِ لِيَحْضُرَ الْقَوْمُ، وَيَسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ، وَإِنَّمَا زَادَ عُثْمَانُ ذَلِكَ لِكَثْرَةِ النَّاسِ فَرَأَى هُوَ أَنْ يُؤَذِّنَ الْمُؤَذِّنُ قَبْلَ الْوَقْتِ لِيَنْتَهِيَ الصَّوْتُ إِلَى نَوَاحِي الْمَدِينَةِ، وَيَجْتَمِعَ النَّاسُ قَبْلَ خُرُوجِ الْإِمَامِ ; لِئَلَّا يَفُوتَ عَنْهُمْ أَوَائِلُ الْخُطْبَةِ…..وَقَوْلُهُ: يُؤَذِّنُ الْمُؤَذِّنُ قَبْلَ الْوَقْتِ مُخَالِفٌ لِكَلَامِ بَقِيَّةِ الشُّرَّاحِ وَعَامَّةِ الْفُقَهَاءِ، وَعُرْفِ زَمَانِنَا إِلَّا أَنْ يُرَادَ بِهِ قَبْلَ الْوَقْتِ الْمُعْتَادِ، وَهُوَ الَّذِي بَيْنَ يَدَيِ الْإِمَامِ بَعْدَ طُلُوعِهِ الْمِنْبَرِ، وَيُحْمَلُ عَلَى مَا بَعْدَ الزَّوَالِ (مرقاة المفاتيح شرح مشكاة المصابيح ٣/١٠٤١ — الملا على القاري (ت ١٠١٤)
[7] (وشرطه) أي الأذان (الوقت)؛ لأنه للإعلام بدخوله فلا يصح، ولا يجوز قبله بالإجماع لما فيه من الإلباس، لكن نص في البويطي على سقوط مشروعيته بفعل الصلاة، وهذا يدل على أن مشروعية الأذان للصلاة وهو المعتمد كما مر، لا للوقت، وعلى هذا لو نوى المسافر تأخير الصلاة، فإن قلنا بالأول لم يؤذن وإلا أذن (إلا الصبح) أي أذانه (فمن نصف الليل). ( مغني المحتاج إلى معرفة معاني ألفاظ المنهاج(
(وَشَرْطُهُ) أَيْ الْأَذَانِ (الْوَقْتُ) وَمِثْلُهُ الْإِقَامَةُ لِأَنَّ الْمَقْصُودَ بِهِ الْإِعْلَامُ، وَلَا مَعْنَى لَهُ قَبْلَ الْوَقْتِ مَعَ مَا فِيهِ مِنْ التَّدْلِيسِ وَأَفْهَمَ كَلَامُهُ صِحَّتَهُ مَا دَامَ الْوَقْتُ بَاقِيًا، …وَلَوْ أَذَّنَ قَبْلَ الْوَقْتِ بِنِيَّتِهِ حُرِّمَ عَلَيْهِ ذَلِكَ لِأَنَّهُ مُتَعَاطٍ عِبَادَةً فَاسِدَةً (إلَّا الصُّبْحَ) أَيْ أَذَانَهُ (فَمِنْ نِصْفِ اللَّيْلِ) شِتَاءً كَانَ أَوْ صَيْفًا لِمَا صَحَّ أَنَّهُ ﷺ قَالَ «إنَّ بِلَالًا يُؤَذِّنُ بِلَيْلٍ فَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يُؤَذِّنَ ابْنُ مَكْتُومٍ» *وَشَمَلَ ذَلِكَ أَذَانَ الْجُمُعَةِ فَهُوَ كَغَيْرِهِ، وَالْقِيَاسُ عَلَى الصُّبْحِ غَيْرُ صَحِيحٍ. )نهاية المحتاج إلى شرح المنهاج(