மஸ்ஜித்களில் ‘ஷமாஇலுத் திர்மிதியை’ மக்கள் மயப்படுத்துவது தொடர்பில் மாவட்ட மற்றும் பிரதேசக் கிளைகளின் கௌரவத் தலைவர், செயலாளர்களுக்கு ஜம்இய்யாவின் வேண்டுகோள்

ACJU/PRO/2026/120
2026.08.12 (1448.02.27)

1. ரபீஉல் அவ்வலின் முக்கியத்துவம்:

ரபீஉல் அவ்வல் மாதம் இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கியமான மாதமாகும். முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பு இம்மாதத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.

2. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகிமையை எடுத்துரைத்தல்:

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் 30.01.2022 அன்று வெளியிடப்பட்ட ‘இலங்கை முஸ்லிம்களுக்கான நிலைப்பாடுகளும் வழிகாட்டல்களும்’ என்ற மன்ஹஜ் அறிக்கையின் 7.3ஆம் பகுதியில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகிமை, கீர்த்தி, வாழ்க்கை வரலாறு, குணாதிசயம் மற்றும் ஸுன்னா என்பவற்றை மார்க்க வரையறைகளைப் பேணி முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதோருக்கும் எடுத்துச் சொல்வது, அதுபற்றி பிரஸ்தாபம் செய்வது, அவர்களது நேசத்தை உள்ளங்களில் வேரூன்றச் செய்வது முஸ்லிம்களின் மீது கடமையாகும். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த ரபீஉனில் அவ்வல் மாதம் பொன்னான சந்தர்ப்பமாகும். அம்மாதத்தில் இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுவது மிகவும் ஏற்றமானதாகும்.’

3. ஸீரா மற்றும் ஸுன்னாவின் மீது ஆர்வத்தை ஏற்படுத்துதல்:

எனவே, நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஸீராவை வாசிப்பதில் ஆர்வத்தை ஏற்படுத்துவதும், அவர்களது ஸுன்னாவை அன்றாட வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துவதில் விருப்பத்தை உருவாக்குவதும், அவர்கள் மீதான எல்லையற்ற அன்பை மக்களின் உள்ளங்களில் அதிகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதும் எமது கடமையும் காலத்தின் தேவையுமாகும்.

4. மஸ்ஜித்களை மையப்படுத்தி ‘ஷமாஇலுத் திர்மிதி’ அறிமுகம்:

அதனடிப்படையில், மஸ்ஜித்களை மையப்படுத்தி ‘ஷமாஇலுத் திர்மிதி’ நூலை அறிமுகப்படுத்தி மக்கள் மயப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஐவேளைத் தொழுகைகளில் மக்கள் அதிகமாகக் கலந்துகொள்ளும் தொழுகைகளைக் கருத்திற்கொண்டு, மக்களின் ஏனைய அமல், இபாதத்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இதனை நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

5. மஸ்ஜித் நிர்வாகிகள் மற்றும் இமாம்களுக்கு வழிகாட்டல்:

இது தொடர்பான தேவையான வழிகாட்டல்களை தங்களது பிரதேசக் கிளைகளுக்குட்பட்ட மஸ்ஜித் நிர்வாகிகள் மற்றும் இமாம்களுக்கு வழங்கி, இப்பணியை சிறப்பாக முன்னெடுக்குமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.

அல்லாஹு தஆலா எம்மனைவரையும் அவனது தீனுடைய பணியில் பொருந்திக் கொள்வானாக!

ஆமீன்.

அஷ்-ஷைக் எச். உமர்தீன்
தவிசாளர் – பிரச்சாரக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அஷ்-ஷைக் ஏ.ஆர். அப்துர் ரஹ்மான்
செயலாளர் – பிரச்சாரக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன