அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா – கம்பளைக் கிளை
மக்களால் மறக்கப்பட்ட இலுக்குவத்தை றம்மலக்க பிரதேசத்தில் அண்மையில் மண் சரிவினால் ஏற்பட்ட சேதத்தினால் சுமார் 6 பேர் வரை உயிரிழந்தனர். பல வீடுகள் முற்றாக சேதமடைந்த நிலையில் சுமார் 26 குடும்பத்தினர் உடனடியாக அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு இருக்க இடமின்றி இருக்கும் நிலையில் குறித்த குடும்பத்தினருக்கு புதிய இடங்களில் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளை பிரதேச மக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
முதற் கட்டமாக சுமார் 36 பேர்ச்சஸ் அளவு கொண்ட ஒரு காணித் துண்டை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்டக் கிளையுடன் இணைந்து வாங்குவதற்கு முதல் பங்கு தாரர்களாக கம்பளை மக்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கம்பளைக் கிளையுடன் இணைந்து கொண்டனர். சுமார் 26 இலட்சம் ரூபாய் பெறுமதியான காணியை வாங்குவதற்கு கம்பளை முஸ்லிம்கள் சுமார் 15 இலட்சம் ரூபாய் வழங்கியுள்ளனர். (மேலும் சில உதவிகள் எமதூர் பிரதேசத்திலும், பிற ஊர்களிலும் செய்யப்பட்டன. ஆவைகளின் விபரங்கள் வேறு ஆவணங்களில் குறிப்பிடப்படும்) நிரந்தர தர்மமான (ஸதக்கா ஜாரியா) இப்பணியை கம்பளை மக்கள் செய்ததையிட்டு நாம் அல்லாஹ்வுக்கு முதற்கண் நன்றி செலுத்துகிறோம்!
மேலும் இப்பணியுடன் இணைந்து கொண்டு இப்பாரிய தொகைப் பணத்தை மிக அவசரமாக சேர்க்க எம்முடன் கைகோர்த்த சகல மஸ்ஜித்களினதும் நிர்வாகத்தினருக்கும், ஊர் ஜமாஅத்தினருக்கும் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெறிவிப்பதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கம்பளைக் கிளைத் தலைவர் அஷ்-ஷைக் ரீ.ஹைதர் அலி அவர்கள், செயலாளர் உற்பட சகல அங்கத்தினரும் தெரிவித்துக் கொள்கின்றனர்.