2025.03.06ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ‘சமூக முக்கியஸ்தர்களுடன் நல்லுறவை பேணல்’ எனும் செயற்றிட்டத்திற்கமைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கௌரவ செயலாளரும் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான ரவி செனவிரத்ன அவர்களுடனான சிநேகபூர்வ சந்திப்பொன்று குறித்த அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் பணிகள், செயற்றிட்டங்கள் குறித்த தெளிவுகள் வழங்கப்பட்டதுடன் நாட்டின் பொதுப் பாதுகாப்பு, கல்வி, சமூக நல்லிணக்கம் ஆகிய விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கௌரவ செயலாளர் அவர்களுக்கு ஜம்இய்யாவினால் வெளியிடப்பட்ட அல்-குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்புடன் ஏனைய சில வெளியீடுகளும் கையளிக்கப்பட்டன.
இதில், ஜம்இய்யாவின் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் எம். பாஸில் பாரூக், ஆலிம்கள் விவகாரக்குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் எஸ்.எல். நவ்பர், ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் சல்மான், செயலகப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி அஷ்-ஷைக் டி. நுஃமான் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

ACJU MEDIA