ACJU/NGS/2025/029
2025.02.26 (1446.08.27)
முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும் நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அஷ்-ஷைக் எம்.எச்.எம். இப்றாஹீம் காஸிமி (اللهم اغفر له وارحمه) அவர்களின் மரணச் செய்தி எம்மை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது.
அவர்கள் புதன்கிழமை 2025.02.26 ஆம் திகதி அதிகாலை நீர்கொழும்பில் வபாத்தானார்கள்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
இவர்கள், புத்தளம் அல்-காஸிமிய்யா அரபுக்கல்லூரியில் மார்க்கக் கல்வியைப் பயின்று அல்-ஆலிம் பட்டம்பெற்றதுடன் 1973ஆம் ஆண்டு அரச ஆசிரியராக நியமனம் பெற்று யாழ்ப்பாணம் உஸ்மானியா கல்லூரி, சிலம்படி மகளிர் கல்லூரி ஆகியவற்றில் அரபு மற்றும் இஸ்லாம் பாட ஆசிரியராகக் கடமையாற்றினார்.
புலம்பெயர்வின் பின்னர் நீர்கொழும்பு அல்-ஹிலால் தேசிய பாடசாலையில் கற்பித்ததுடன் கம்பஹா மாவட்ட ஆசிரியர் ஆலோசகராகவும் கல்வி அமைச்சின் இஸ்லாம் பாட நூலாக்கக் குழு உறுப்பினராகவும் கடமையாற்றினார்.
அன்னார் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினராகவும் அதன் கல்விக்குழுச் செயலாளராகவும் முல்லைத்தீவு மாவட்டத் தலைவராகவும் நீண்ட காலம் பணிபுரிந்துள்ளதுடன் நிதாஉல் ஹைர் பவுன்டேஷன் அமைப்பின் வன்னி மாவட்டப் பணிப்பாளராகவும் பணியாற்றி பல்வேறுபட்ட சமூகநலத் திட்டங்களை செயற்படுத்தி தனது வாழ்நாளில் பெரும்பகுதியை சமய, சமூக மற்றும் கல்விப் பணிகளுக்காகவே அர்ப்பணித்தார்.
இவ்வேளையில் அன்னாருடைய பிள்ளைகள், குடும்பத்தினர்கள், உறவினர்கள், மாணவர்கள், நண்பர்கள் மற்றும் ஊர் மக்கள் அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழு சார்பிலும் அனைத்து ஆலிம்கள் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அல்லாஹு தஆலா அன்னாரது நல்லமல்களை அங்கீகரித்து, அவர்களுடைய குற்றங் குறைகளை மன்னித்து பரிசுத்தப்படுத்தி, நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்து, ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக!
முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை
அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை