அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுக்கும், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் கௌரவ. சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களுக்குமிடையே இடம்பெற்ற சிநேகபூர்வ சந்திப்பு

2025.01.27ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுக்கும், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் கௌரவ. சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களுக்குமிடையிலான சிநேகபூர்வ சந்திப்பொன்று குறித்த அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பில், ஜம்இய்யாவின் வரலாறு மற்றும் கடந்த காலப் பணிகள் குறித்த அறிமுகம் வழங்கப்பட்டதுடன், அனைத்து இலங்கையர்களும் ஒற்றுமையுடனும் நல்லிணக்கத்துடனும் வாழ்வதற்கான வழிகாட்டுதல்களை ஜம்இய்யா எப்போதும் வழங்கி வருவதும் தெளிவுபடுத்தப்பட்டது.

மேலும் பெண்கள், சிறார்கள் தொடர்பில் ஜம்இய்யாவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், முன்னெடுப்புகள் தொடர்பிலும் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களால் சபையில் தெளிவுகள் வழங்கப்பட்டன.

இதன்போது கருத்துத் தெரிவித்த கௌரவ. அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்கள் நாட்டில் மகளிர் மற்றும் சிறுவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த விடயங்களை சுட்டிக்காட்டினார்.

அதனை தொடர்ந்து, மகளிர் மற்றும் சிறுவர்கள் தொடர்பில் அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் ஆரோக்கியமான சட்டதிட்டங்களுக்கு ஜம்இய்யா எப்போதும் ஆதரவு வழங்கும் என்று நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.

சந்திப்பின் இறுதியில் கௌரவ. அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களுக்கு ஜம்இய்யாவினால் வெளியிடப்பட்ட அல்-குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு மற்றும் ஏனைய வெளியீடுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இதில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித், ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் எம். பாஸில் பாரூக் மற்றும் குழுவின் துணைச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.எம். முர்ஸித் ஆகியோருடன் செயலகப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி அஷ்-ஷைக் டி. நுஃமான் அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.

 

 

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன