இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவை வாயிலாக கொள்ளுப்பிட்டி ஜுமுஆ பள்ளிவாயலிலிருந்து வெள்ளிக்கிழமை தோறும் ஒலிபரப்பப்பட்டு வரும் குத்பா பிரசங்கத்தின் 1,000ஆவது வார குத்பா பிரசங்கமானது 2025.01.24ஆம் திகதி ஒலிபரப்பு செய்யப்பட்டது.
கொள்ளுப்பிட்டி பள்ளிவாயலில் 2004, 2005 காலப்பகுதிகளில் செயற்பட்ட நிர்வாகத்தினர் தொடக்கம் தற்போதுள்ள நிர்வாகத்தினர் வரை மேற்கொண்டுவரும் அயராத முயற்சியினாலும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவையின் தொடர் பங்களிப்பினாலும், நாட்டின் மூத்த ஆலிம்கள், ஜம்இய்யாவின் தலைவர், உப தலைவர்கள், செயலாளர்கள், உப செயலாளர்கள், நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், அங்கத்துவ ஆலிம்கள் ஆகியோரது உயரிய ஒத்துழைப்புடனும் கடந்த 20 வருட காலமாக எந்தவித தொய்வுமின்றி ஜுமுஆ ஒலிபரப்பானது சிறப்பாக நடாத்தப்பட்டு வருகிறது.
2005 டிசம்பர் 09இல் ஜுமுஆ ஒலிபரப்பானது ஆரம்பிக்கப்பட்ட போது முதல் குத்பாவினை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் நிகழ்த்தியதோடு 1,000 ஆவது குத்பாவையும் ஜம்இய்யாவின் தலைவர் அவர்களே நிகழ்த்தினார்கள்.
கடந்த 20 வருடங்களாக வாராந்தம் ஒலிபரப்பு செய்யப்படும் அனைத்து ஜுமுஆ பிரசங்க உரைகளையும் முஸ்லிம் சேவையின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் எஸ்.எச்.எம். ரீஸா அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த 1,000ஆவது ஜுமுஆ ஒலிபரப்பு பூர்த்தியினை முன்னிட்டு கொள்ளுப்பிட்டி ஜுமுஆ பள்ளிவாயல் நிர்வாகத்தினால் ஜுமுஆ தொழுகையினை அடுத்து விஷேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் குறித்த நிகழ்வில் ஜம்இய்யாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் சிறப்புரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
– ACJU Media –