25.01.27ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுக்கும், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி கௌரவ. ஹர்ஷன நாணயக்கார, தேசிய ஒருமைப்பாட்டு பிரதியமைச்சர் அஷ்-ஷெய்க் கெளரவ முஹம்மத் முனீர் முளப்பர் ஆகியோருக்குமிடையிலான சிநேகபூர்வ சந்திப்பொன்று நீதி அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பில், ஜம்இய்யாவின் வரலாறு மற்றும் கடந்த காலப் பணிகள் குறித்து கலந்துகொண்டிருந்த நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களால் அறிமுகம் வழங்கப்பட்டதுடன், அனைத்து இலங்கையர்களும் ஒற்றுமையுடனும் நல்லிணக்கத்துடனும் வாழ்வதற்கான வழிகாட்டுதல்களை ஜம்இய்யா எப்போதும் வழங்கி வருவதும் தெளிவுபடுத்தப்பட்டது.
மேலும், இந்நாட்டில் முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் அவற்றிற்கான தீர்வுகளை கண்டடைவது குறித்தும் ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
இதன்போது கருத்துத் தெரிவித்த கௌரவ அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அவர்கள், இவ்விவகாரங்கள் குறித்து தம்மாலான முயற்சிகளை அமைச்சு மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.
இதில், கலந்துகொண்டிருந்த தேசிய ஒருமைப்பாட்டு பிரதியமைச்சர் அஷ்-ஷெய்க் கெளரவ முஹம்மத் முனீர் முளப்பர் அவர்கள், சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடியதுடன் அவற்றை நடைமுறைப்படுத்த ஒத்துழைப்புகளை தான் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
சந்திப்பின் இறுதியில் கௌரவ அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அவர்களுக்கு ஜம்இய்யாவினால் வெளியிடப்பட்ட அல்-குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு கையளிக்கப்பட்டதுடன் ஏனைய வெளியீடுகளும் வழங்கப்பட்டன.
இதில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித், உதவிப் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம், ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் எம். பாஸில் பாரூக் மற்றும் குழுவின் துணைச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.எம். முர்ஸித் ஆகியோருடன் செயலகப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி அஷ்-ஷைக் டி. நுஃமான் அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.
– ACJU Media –