இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் மற்றும் உப செயலாளர் ஆகியோர் 2026 ஆகஸ்ட் 13அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகை தந்து நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுடன் முக்கிய சந்திப்பொன்றில் ஈடுபட்டனர்.
இதன்போது, வருகை தந்திருந்த பிரமுகர்கள் நீதித்துறை மறுசீரமைப்பு தொடர்பில் கருத்துத் தெரிவித்ததுடன், குறிப்பாக நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பில் அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய அரசியலமைப்புத் திருத்தம் குறித்தான தமது தரப்பு நிலைப்பாடுகளையும் தெளிவுபடுத்தினர்.
இச்சந்திப்பில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய மற்றும் உப செயலாளர் லகித வகிஷ்ட ஆராச்சி ஆகியோர் கலந்துகொண்டு விடயங்களை முன்வைத்ததுடன் தமது நிலைப்பாடுகள் அடங்கிய கையேட்டு பிரதியையும் கையளித்தனர்.
ஜம்இய்யா தரப்பில் உப தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகியோர் கலந்துகொண்டிருந்ததுடன் சந்திப்பின் இறுதியில் சட்டத்தரணிகள் சங்க பிரமுகர்களுக்கு ஜம்இய்யாவின் வெளியீடுகள் சிலவும் கையளிக்கப்பட்டன.






– ACJU Media –


