2026 ஏப்ரல் 30ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவின் நெறிப்படுத்தலில் சிங்கள மொழி பேசும் ஆலிம்களுக்கான சகவாழ்வு தொடர்பான முதற்கட்ட பயிற்சி செயலமர்வு ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடைபெற்றது.
இச்செயலமர்வில் ஆரம்பமாக, ஜம்இய்யாவின் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழு குறித்த அறிமுகம் வழங்கப்பட்டதுடன் அதன் நோக்கம் குறித்தும் எவ்வாறு செயற்படுகிறது என்பது குறித்தும் அதன் அடைவுகள் குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டது.
அமைதியான சகவாழ்வின் முக்கியத்துவத்தை புரிதல், பல்லின மற்றும் பலசமய மக்கள் இணைந்து வாழும் சமூகத்தில் வாழ்வதற்கான அடிப்படை ஃபிக்ஹ் விதிகளை அறிதல், சகவாழ்வை நடைமுறைப்படுத்துவதில் செய்யவேண்டியவை மற்றும் தவிர்க்க வேண்டியவை குறித்து அறிதல், இக்கொள்கைகளை திட்டமிடலுடன் முறையாக எவ்வாறு பயன்படுத்துவது என்பதை புரிதல், குறுகிய கால மற்றும் நீண்டகால ஒருங்கிணைவுக்கான திட்டங்களை உருவாக்குதல் போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து இதன்போது விளக்கக் காட்சிகளுடன் தெளிவுகள் வழங்கப்பட்டன.
இதில் சிங்கள மொழி பேசும் ஆலிம்கள் 23 பேர் கலந்து பயன்பெற்றனர்.
குறித்த செயலமர்வில் வளவாளர்களாக ஜம்இய்யாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி, ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவின் தவிசாளர் அஷ்-ஷைக் எச். உமர்தீன், குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் எம். ரிபாஹ் ஹஸன், பிரச்சாரப் பிரிவின் துணைச் செயலாளர் அஷ்-ஷைக் ஏ.எச்.எம். அக்ரம் ஆகியோருடன் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்கான குழுவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் ஸல்மான் மற்றும் இளைஞர் விவகாரப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் சகோதரர் ரம்ஸி க்ராத்தி ஆகியோரும் கலந்துகொண்டனர்.





– ACJU Media –



