அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், இலங்கை ஹஜ் மற்றும் உம்ரா குழு ஆகியவற்றின் ஏற்பாட்டில், பதிவு செய்யப்பட்ட ஹஜ் குழுக்களின் வழிகாட்டிகளாக செல்லக்கூடிய ஆலிம்களுக்கான ஹஜ் கிரியைகள் பற்றிய விஷேட வழிகாட்டல் செயலமர்வு 2025.05.08ஆம் திகதி ஏ.எம்.வை.எஸ் (Association of Muslim Youth of Sailan) நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதில், நாடளாவிய ரீதியிலுள்ள பதிவுசெய்யப்பட்ட 92 ஹஜ் முகவர்கள் நிலையங்களை பிரதிநிதித்துவப்படுத்தி வழிகாட்டிகளாக செல்லவுள்ள ஆலிம்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
செயலமர்வின் ஆரம்ப நிகழ்வாக அஷ்-ஷைக் அல்-காரி பிர்தெளஸ் அவர்களால் அல்-குர்ஆன் கிராஅத் பாராயணம் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து, இலங்கை ஹஜ் மற்றும் உம்ரா குழுவின் உறுப்பினர் அல்-ஹாஜ் அஸூர் அவர்கள் வரவேற்புரையினை நிகழ்த்தினார்.
வரவேற்புரையினை அடுத்து, ஹஜ் மற்றும் உம்ரா குழுவின் தலைவர் அல்-ஹாஜ் ரியாஸ் மிஹ்லார் அவர்கள் ஹஜ் கடமைக்காக செல்பவர்கள் அங்கு கடைபிடிக்க வேண்டிய சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் குறித்து தெளிவுகளை வழங்கியதுடன் ஹஜ் குழுவின் எதிர்கால திட்டங்கள் குறித்தும் கருத்துக்களை முன்வைத்தார்.
குறித்த செயலமர்வில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் விஷேட உரையொன்றினை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் ஹஜ்ஜின் சிறப்புகள் குறித்து தெளிவுகளை வழங்கியதுடன் ஹஜ்ஜுடைய விடயத்தில் வழிகாட்டிகளாக செல்லக் கூடியவர்கள் கருத்து வேறுபாடுகளைக் கடந்து ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
அதனை தொடர்ந்து, ஜம்இய்யாவின் ஃபத்வாக் குழு உறுப்பினர் அஷ்-ஷைக் மபாஸ் முஃப்தி அவர்கள் முக்கிய உரையொன்றினை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் ஹஜ் முகவர்கள் மற்றும் வழிகாட்டிகளாக உள்ளவர்கள் ஆன்மீக ரீதியில் தம்மை மேம்படுத்திக் கொள்வதன் அவசியம் குறித்து வலியுறுத்தியதுடன் ஹஜ்ஜின் மகத்துவம் குறித்தும் சுட்டிக் காட்டினார்.
அடுத்ததாக, ஜம்இய்யாவின் ஃபத்வாக் குழுவின் துணைச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.எம். முர்ஷித் அவர்கள் ஹஜ் வழிகாட்டிகளாக செல்பவர்கள் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய ஹஜ்ஜின் முக்கிய அம்சங்கள் குறித்த தெளிவுகளை விளக்கக் காட்சிகளுடன் முன்வைத்து உரையாற்றினார்.
இதன்போது செயலமர்வில் கலந்துகொண்டிருந்த ஆலிம்கள் பலர், ஹஜ் தொடர்பிலான தமது சந்தேகங்களை முன்வைத்ததுடன் நடைமுறை விடயங்கள் குறித்தும் கேள்விகளை எழுப்பினர்.
சபையில் வினவப்பட்ட கேள்விகளுக்கு ஜம்இய்யாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி, ஃபத்வாக் குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ், அஷ்-ஷைக் மபாஸ் முஃப்தி ஆகியோரால் உரிய தெளிவுகள் வழங்கப்பட்டன.
இதில், தேசிய ஒருமைப்பாட்டு பிரதியமைச்சர் கௌரவ அஷ்-ஷெய்க் முனீர் முலப்பர், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கௌரவ பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் ஆகியோருடன் திணைக்கள உத்தியோகத்தர்கள் சிலரும் அதிதிகளாக கலந்துகொண்டிருந்தனர்.
ஜம்இய்யா சார்பில் தலைவர், பொதுச் செயலாளர், உப தலைவர்கள், உப செயலாளர், ஃபத்வாக் குழு உறுப்பினர்கள், நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் ஆகியோருடன் ஃபத்வாக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்நிகழ்வினை, ஃபத்வாக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் மபாஹிம் அவர்கள் சிறப்பாக தொகுத்து வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
– ACJU Media –