அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி மற்றும் இத்தாலிக்கான இலங்கை துணைத் தூதரகத்தின் ‘கொன்சல் ஜெனரல்’ (Consule General) கௌரவ டிலானி வீரக்கோன் ஆகியோரிடையே இடம்பெற்ற சிநேகபூர்வ சந்திப்பு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களின் இத்தாலி விஜயத்தினையடுத்து இத்தாலிக்கான இலங்கை துணைத் தூதரகத்தின் ‘கொன்சல் ஜெனரல்’ (Consule General) கௌரவ டிலானி வீரக்கோன் அவர்களுடனான சிநேகபூர்வ சந்திப்பொன்று 2025.02.17ஆம் திகதி மிலான் நகரில் உள்ள அவரது காரியாலயத்தில் நடைபெற்றது.

இத்தாலி வாழ் இலங்கை முஸ்லிம் ஒன்றியத்தின் (SLMC) ஏற்பாட்டில் இடம்பெற்ற இச்சந்திப்பில் அதன் தலைவரான சகோதரர் ரியாஸ் ஸவாஹிர், செயலாளரான சகோதரர் நாளிர் நியாஸ் மற்றும் உப தலைவரான ரம்ஸான் லாண்ட்ரா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இச்சந்திப்பில், கொன்சல் ஜெனரல் அவர்களுடன் பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடிய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் 2019ஆம் ஆண்டு ஜம்இய்யாவினால் வெளியிட்ட அல்-குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பினை கொன்சல் ஜெனரல் அவர்களுக்கு அன்பளிப்பு செய்தார்.

மிகுந்த மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் மிக கண்ணியமான முறையில் அல்-குர்ஆன் மொழி பெயர்ப்பை கொன்சல் ஜெனரல் அவர்கள் பெற்றுக் கொண்டார். மேலும் இம்மொழிபெயர்ப்பானது தொகுப்பட்ட விதம் மற்றும் உள்ளடக்கம் என்பன பற்றியும் ஜம்இய்யாவின் தலைவர் இதன்போது விளக்கமளித்தார்.

அதனை தொடர்ந்து, ஜம்இய்யாவானது 2023ஆம் ஆண்டு அதன் முதலாவது நூற்றாண்டினை பூர்த்தி செய்தமையினை தலைவர் அவர்கள் மகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்ததுடன் அதனால் மேற்கொள்ளப்பட்டுவரும் முக்கிய பணிகளான உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடத்தில் சக வாழ்வினை கட்டியெழுப்புதல், அனைத்து சமயங்களுக்குமிடையில் சிறந்ததொரு புரிதலை உருவாக்குதல் போன்ற செயற்பாடுகள் பற்றியும் தெளிவாக விவரித்தார்.

தொடர்ந்து, கொன்சல் ஜெனரல் அவர்களுடன் கலந்துரையாடிய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அவர்கள், சபை தொடங்கப்பட்ட வரலாறு மற்றும் ஆரம்பிக்கப்பட்ட நோக்கம் குறித்தும் பல்வேறு விடயங்களை தெளிவாக எடுத்துரைத்தார். மேலும், சில புத்தகங்களை கொன்சல் ஜெனரல் அவர்களுக்கு பரிந்துரை செய்த ஜம்இய்யாவின் தலைவர் அவர்கள் அவற்றை கட்டாயம் வாசிக்குமாறு வேண்டிக் கொண்டதுடன் தங்களது நூலகத்திலும் குறித்த புத்தகங்களை காட்சிப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

அத்தோடு கொன்சல் ஜெனரல் அவர்களுக்கும் ஏனைய முஸ்லிம் நாடுகளின் தூதுவர்களுக்குமிடையிலான தொடர்புகள் எவ்வாறுள்ளன என்பதை கேட்டறிந்து கொண்ட ஜம்இய்யாவின் தலைவர் அவர்கள் இத்தாலியிலுள்ள இலங்கையர்களின் துறைசார் அடைவுகள், முன்னேற்றங்கள் குறித்தும் கலந்துரையாடியதுடன் அனைவரும் துறைசார் தேர்ச்சி உடையவர்களாக உருவாவதற்கு இயன்ற உதவிகளை ஏற்படுத்தி கொடுக்குமாறும் வேண்டிக் கொண்டார்.

 

 

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன