“அனைவருக்கும் கல்வி” எனும் தொனிப் பொருளிலான வருடாந்த மாநாடு

அனைவருக்கும் கல்வி எனும் தொனிப் பொருளிலான வருடாந்த மாநாடு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் “அனைவருக்கும் கல்வி” எனும் தொனிப் பொருளிலான வருடாந்த மாநாடு 2017.12.10 ஞாயிறு அன்று வெள்ளவத்தை மியாமி வரவேற்பு மண்டபத்தில் இடம் பெற்றது. அல்குர்ஆனின் அழகிய வசனங்கள் பாராயணம் செய்யப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்விற்கு வருகை தந்தவர்களை வாஞ்சையுடன் வாயார வாழ்த்தி வரவேற்புரையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உப தலைவர்களில் ஒருவரான அஷ்-ஷைக் எஸ்.எச் ஆதம் பாவா அவர்கள் நிகழ்த்தினார்கள்.

தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உபகுழுக்கள் சிலவற்றின் அறிமுக நிகழ்வு இடம்பெற்றது. இதன் போது ஜம்இய்யா தனது உப பிரிவுகள் மூலம் மக்களுக்கு செய்த சேவைகளும் சுருக்கமாகக் கூறப்பட்டன. இந்நிகழ்வில் பத்வா குழுவை பற்றிய அறிமுகத்தை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களில் ஒருவரான அஷ்-ஷைக் ஹாஷிம் சூரி அவர்கள் வழங்கிய போது மின்னஞ்சலூடாக, தொலைபேசி ஊடாக, எழுத்து மூலமாக, நேரடியக என பல முறைகளிலும் எமது பிரிவால் பத்வாக்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், பத்வாக்கள் மற்றும் வழிகாட்டல்கள் தேவைப்படும் பொழுது எமது பிரிவின் துரித சேவை இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் வேண்டிக் கொண்டார்கள்.

ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவின் அறிமுகத்தை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களில் ஒருவரான அஷ்-ஷைக் அர்கம் நூர்அமீத் அவர்கள் வழங்கினார். தனது உரையில் தமது மார்க்க விடயங்களை ஒரு போதும் விட்டுக் கொடுக்காது முடியுமான விடயங்களில் பிற மதத்தவர்களுடன் சகவாழ்வுடன் வாழ வேண்டும் என வலியுறுத்தினார்.

மக்தப் பிரிவின் அறிமுகத்தை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களில் ஒருவரான அஷ்-ஷைக் ஏ.ஸீ.எம் பாழில் அவர்கள் வழங்கிய போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலம் தொட்டு மஸ்ஜிதை அடிப்படையாக வைத்து  நடை பெற்று வந்த இந்த மக்தபின் பிரதான நோக்கம் இறையச்சம் உள்ள எதிர்கால சந்ததியினரை உருவாக்குவதே எனக் குறிப்பிட்டார்.

பிரச்சாரக் குழுவின் அறிமுகத்தை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களில் ஒருவரான அஷ்-ஷைக் எச்.உமர்தீன் அவர்கள் வழங்கினார்கள். எமது நிகழ்வுகள், செயற்பாடுகள், கொடுக்கல் வாங்கல்கள் போன்றவை ஒரு போதும் பிறமத்தவர்களை தூண்டும் வகையில் அமையக் கூடாது என்ற விடயத்தை அறிவுரையாக கூறினார்கள்.

இந்நிகழ்வுடன் எமது அகில இலங்கை ஜம்இய்த்துல்உலமாவின் அனைவருக்கும் கல்வி என்ற தொனிப்பொருளிலான வருடாந்த மாநாட்டின் முதல் அமர்வு நிறைவுக்கு வந்தது. மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட இரண்டாம் அமர்விற்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உப தலைவர்களில் ஒருவரான அஷ்-ஷைக் முப்தி யூசுப் அவர்கள் தலைமை தாங்கி அறிமுக உரையை வழங்கினார்கள். தனது உரையில் ஒவ்வொரு துறை சார்ந்தோரும் தமது துறைகளுடன் தொடர்பான மற்றும் பொதுவான மார்க்க விடயங்களை அறிந்திருப்பது முக்கியமென வரலாற்றை அடிப்படையாக்க் கொண்டு எடுத்துக் காட்டி சமகால முஸ்லிம்களின் கல்வி நிலையையும் எடுத்துக் கூறினார்.

அஷ்-ஷைக் முப்தி யூசுப் இவர்களின் உரையைத் தொடர்ந்து தாய் நாட்டில் கல்விக்கு பங்களிப்பு செய்த நபிமார்களின் வாரிசுகளான உலமாக்கள் பற்றிய ஒர் உரை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச்செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.ஏ.முபாறக் அவர்களால் ஆற்றப்பட்டது. இது எமது முன்னோர்களான உலமாக்களின் சேவைகளை முன்னிறுத்தி செயற்பட எமக்கு வழிகாட்டும் அம்சமாக இருந்தது. அதைத் தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கல்விக்குழுவின் செயற்பாடுகள் பற்றி வீடியோ மூலம் காண்பிக்கப்பட்டது.

பின்னர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அழைப்பை ஏற்று வருகை தந்த அஷ்-ஷைக் முப்தி இஸ்மாஈல் மென்க் அவர்களின் விஷேட உரை இடம் பெற்றது. அவ்வுரையில் ஏனைய நிறுவனங்கள் தமது எதிர்கால திட்டங்களை முன்வைப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கும் இவ்வேளை ஜம்இய்யா தான் செய்த பணிகளை முன்வைத்தது சிறப்பான அம்சம் என குறிப்பிட்டார். அதை தொடர்ந்து இந்தியாவில் இருந்து வருகை தந்த அஷ்-ஷைக் ரூஹுல் ஹக் மௌலானாவின் உரையும் இடம்பெற்றது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதித் தலைவர் அஷ்-ஷைக் ஏ.ஸீ.அகார் முஹம்மத் அவர்கள் தமது உரையில் எமது முதல் கிப்லா அமைந்துள்ள பிரதேசத்தின் விவகாரம் தொடர்பாக நாம் கரிசனைகாட்ட வேண்டுமென குறிப்பிட்டார். தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கல்விக் குழுவின் செயற்பாடுகள், அடைந்த அடைவுகள் பற்றிய தெளிவு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதிச் செயலாளர்  அஷ்-ஷைக் முர்ஸித் முழப்பர் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. அப்போது ஜம்இய்யாவின் கல்விக் குழு முன்னெடுக்கும் நடவடிக்கைகளை அனைத்து மாவட்டங்களும் பின் தொடர வேண்டுமென வலியிறுத்தினார். தொடர்ந்து எமது செயற்பாடுகளில் முகாமைத்துவம் எவ்வாறானதாக இருக்க வேண்டும் என்ற தொனிப்பொருளில் ஒரு உரை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கல்விக் குழு ஆலோசகர்களில் ஒருவரான சகோதரர் நமீஸ் அவர்களால் நிகழ்த்தப்பட்டது.

இறுதி நிகழ்வாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவத் தலைவர் எம். ரிஸ்வி முப்தி அவர்களின் சிறப்புரை நன்றியுரை கலந்ததாக அமைந்தது. தனது உரையை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பற்றிய விடயங்களை உள்ளடக்கிய ஷமாஇல் என்ற புத்தகத்தை ஒவ்வொருவரும் கற்று அதிலிருந்து பாடங்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுருத்தி ஆரம்பித்த தலைவர் அவர்கள் இலங்கை முஸ்லிம்களின் கல்வி பற்றியும், ஜம்இய்யா கல்விக்காக, பாடசாலைகளுக்காக செய்து வரும் பணிகள் பற்றியும் தெளிவாக எடுத்துக் கூறியதோடு, கலந்து கொண்டவர்களால் கல்விக்கு என்ன முறையில் கை கொடுக்க முடியும் என்பதையும் விளக்கமளித்து, ஜம்இய்யாவின் செயற்பாடுகளில் அனைவரும் கை கொடுக்க முன்வர வேண்டும் என கூறி இவ்வருடாந்த மாநாட்டை நிறைவு செய்தார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த  இந்நிகழ்விற்கு கண்ணியமிக்க உள் நாட்டு, வெளி நாட்டு உலமாக்கள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், கல்விமான்கள், துறை சார்ந்தவர்கள், தனவந்தர்கள், நலன்விரும்பிகள்  என பல தரப்பினரும் நாட்டின் நாலா புறத்திலிருந்தும் வந்து கலந்து சிறப்பித்தனர்.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன